27.2.11

இலங்கையில் தமிழ் ஈழம் மலரத் தாய்த்தமிழகம் செய்ய வேண்டியது என்ன?


ஆயுதப் போராட்டத்தின் வழி தமிழ் ஈழத்தை உருவாக்குவதில் சிக்கல்கள் ஏராளம் இருக்கின்றன.  இந்தியா படை எடுத்துச் சென்று பங்களாதேசத்தை உருவாக்கியதைப் போன்று, தமிழ் ஈழத்தை உருவாக்கித் தரும் என்னும் எதிர்பார்ப்பு முற்றிலும் தவறானது ஆகும்.  இந்தியாவின் இறையாண்மை ஆரியப் பிராமணர்களிடத்திலும் ஆரியப் பிராமணரின் ஆதரவாளரிடத்திலும் இருக்கும் வரை இதை எண்ணிப் பார்த்தல் இயலாது.  மேலும் தமிழின ஆதரவாளர்கள் இந்திய இறையாண்மைக்கு வந்தாலும் இலங்கையின் மீது படை எடுத்தால் அது மூன்றாம் உலகப் போரை உருவாக்கலாம்.  அப்படியானால் சரியான வழி எது?

இப்பொழுது இலங்கைத் தமிழர்களும் இந்தியத் தமிழர்களும் இலங்கை அரசையும் இந்திய அரசையும் நம்பிப் பயனில்லை என்பதைப் புரிந்து கொண்டு ஐக்கிய நாடுகள் சபையை நோக்கி முறையிடுகின்றார்கள். 

ஐக்கிய நாடுகள் சபை ஐந்து வல்லரசு நாடுகளின் கையில் இருப்பதாலும் ஒரு நாட்டின் இறையாண்மையில் தலையிடக்கூடாது என்னும் நிலையில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் இனப் படுகொலை நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது அதில் தலையிடாமல் வேடிக்கை பார்க்கும் நிலையில் இருந்தமையாலும் இலங்கைத் தமிழர் பிரச்சனையைத் தீர்க்க ஐக்கிய நாடுகளின் சபையை நம்பிப் பயன் இல்லை என்பது நடைமுறை. 

இந்த நடைமுறையின்படி உலகில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வழியில்லை.  வலியவர்கள் எளியவர்களை அழிக்கலாம்.  இதுவே நியாயம்.  இதை எளியவர்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்னும் மனு நூல் கொள்கை உலக அரசியலில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  மனு நூல் கொள்கையாகிய நிற வெறி இனவெறியாக மாறி “ஆரிய இனமே உலகை ஆளப்பிறந்த இனம்” என்னும் முழக்கத்துடன் இட்லர் அறுபது இலட்சம் யூதர்களைக் கொன்று குவித்ததும் அமெரிக்கர்கள் ஆப்பிரிக்க மக்களை ஆடுமாடுகளைப் போன்று விற்பனைப் பொருளாக்கி அவர்களுக்கு நினைக்க முடியாத கொடுமையைச் செய்ததும் உலகில் நடைபெற்றன.  அதன் தொடர்ச்சி இப்பொழுதும் இருந்து கொண்டிருப்பதை வெளிப்படுத்துவதே இலங்கையில் நடந்துள்ள தமிழ் இனப் படுகொலை.  இந்த நடைமுறையின் காரணமாக, இன்றைய உலகில் பயங்கரவாதம் பெருகி, உலக மக்கள் அனைவரும் நிம்மதியை இழந்து அச்சத்தில் தவித்துக் கொண்டிருக்கும் நிலையை நாம் காணுகின்றோம். 

உலகம் முழுவதும் நடைபெறும் பயங்கரவாதத்திற்குத் தீர்வு என்ன?
                                                                                  - அடுத்த பதிவில் பார்ப்போம்.

(உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்க நிறுவனர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய ‘அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?’ என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.)
PDF இல் சேமிக்க‌

0 கருத்துகள்:

Post a Comment