1.3.11

உலகம் முழுவதும் நடைபெறும் பயங்கரவாதத்திற்குத் தீர்வு என்ன? – 1


பயங்கரவாதம்
உலகம் முழுவதும் பயங்கரவாதம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது.  உலக மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை.  இதற்கு அடிப்படைக் காரணம் என்ன? என்பதையும் இந்த அடிப்படைக் காரணத்தை நீக்குவது எவ்வாறு என்பதையும் ஆராய்ந்து பார்த்து, செயல்படுத்த வேண்டிய இன்றியமையாமை இந்தக் காலத்தில் வாழும் சமுதாய சிந்தனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பயங்கரவாதிகள் பயங்கரவாதிகளாகப் பிறப்பதில்லை;  சூழ்நிலை அவர்களைப் பயங்கரவாதிகள் ஆக்குகிறது. 
பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் உயிரை இழக்கத் துணிந்த பின்னரே, அவர்களிடமிருந்து பயங்கரவாதச் செயல்கள் வெளிப்படுகின்றன.  அந்த பயங்கரவாதச் செயல்கள் மனித சமுதாயத்திற்குத் தீமையை விளைவிக்கின்றன. 
மனித சமுதாயத்திற்குத் தீமையை விளைவிக்கும் இந்தப் பயங்கரவாதச் செயல்களைச் செய்வதினால், பயங்கரவாதிகளுக்குக் கிடைக்கும் நன்மை என்ன?  தங்களுடைய உயிரை இழக்கத் துணிந்து, அவர்கள் இதில் ஈடுபடுவது ஏன்?  என்னும் கேள்விகளை ஆழமாக எண்ணிப் பார்த்தால், உலக சமுதாயத்தில் நடைபெறும் பயங்கரவாதச் செயல்களுக்கான காரணம் நமக்குப் புரிய வரும்.
வல்லரசு பயங்கரவாதம்
அறிவியல் வளர்ந்துள்ள 21ஆம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.  நாகரிகத்தில் வளர்ந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று நாம் எண்ணுகின்றோம்.  ஆனால், நம்முடைய அரசியல் ஆட்சி முறைகள் நாம் காட்டுமிராண்டி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை எடுத்துக் காட்டுகின்றன.
“தடி எடுத்தவன் தண்டல்காரன்” என்னும் பழமொழிக்கேற்ப, அணு ஆயுதத்தைக் கையில் வைத்திருப்பவன் எந்த நாட்டின் மீதும் படையெடுக்கலாம்; எந்த நாட்டு மக்களையும் அழிக்கலாம் என்னும் நிலை இன்றைய நடைமுறையாக இருக்கிறது. 
அமெரிக்கா ஈராக்கின் மீது படை எடுத்தமைக்கும் அமெரிக்கா ஈராக்கு நாட்டு மக்களை அழித்தமைக்கும் எந்த நியாயமான காரணமும் இல்லை.
இவ்வாறே எந்த நியாயமான காரணமும் இல்லாமல் வலியவர்கள் எளியவர்களை ஒடுக்கலாம்; அழிக்கலாம் என்னும் நிலை இன்றைய உலக அரசியலில் இருந்து கொண்டிருக்கிறது.  இது நாடுகளுக்கு இடையே உள்ள நிலை. 

பெரும்பான்மை பயங்கரவாதம்
இதைப் போன்றே ஒரு நாட்டுக்குள் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை அடக்குவதும் ஒழிப்பதும் நடந்து கொண்டிருக்கிறது.  இவை 1. சாதி வெறி, 2. மொழி வெறி, 3. நிற வெறி, 4. இன வெறி, 5. மத வெறி முதலிய காரணங்களை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்று வருகின்றன. 

(உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்க நிறுவனர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய ‘அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?’ என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.) 
PDF இல் சேமிக்க‌

0 கருத்துகள்:

Post a Comment