31.12.10

கடவுள் இருக்கின்றாரா?



தந்தை பெரியார், கடவுள் ஏற்பாளரே என்பதைக் கடந்த மூன்று பதிவுகளில் கண்டோம்.  அக்கருத்துக்கு வலு சேர்க்கும் நிலையில் இன்னொரு செய்தியையும் தெரிந்து கொள்ளுங்கள்.  தந்தை பெரியார் தம்முடைய இறுதிக்காலம் வரை பிள்ளையார் கோவில் ஒன்றிற்கு அறங்காவலராக இருந்தார் என்பது தான் அச்செய்தியாகும். 
            அது சரி!  உங்களிடம் இப்போது ஒரு கேள்வி!  கடவுள் இருக்கிறார் என்று நம்புவது சரியா?  கடவுள் இல்லை என்று நம்புவது சரியா?

கடவுள் இருக்கின்றார் என்று நம்பியவுடன் இல்லாத கடவுள் இருந்துவிடப் போவதில்லை.  கடவுள் இல்லை என்று நம்பியவுடன் இருக்கின்ற கடவுள் இல்லாமல் ஆகிவிடுவதில்லை. 
            

இருக்கின்றார், இல்லை என்பவை இரண்டுமே நம்பிக்கையின் பாற்பட்டவையாயின் இரண்டும் மூட நம்பிக்கைகளே.  சரியான தெளிவில்லாமல் நம்புகின்ற எதுவுமே மூட நம்பிக்கைதான்.  இதிலே தெளிவடைய முடியுமா?  இனிவரும் பதிவுகளில் காண்போம்.  
PDF இல் சேமிக்க‌

29.12.10

தந்தை பெரியார் கடவுள் ஏற்பாளரே! - 3



கீழே உள்ள இரண்டு கருத்துகளையும் படித்துப் பாருங்கள்!  முதல் கருத்து சித்தர்களுள் ஒருவரான சிவவாக்கியருடைய கருத்தாகும்.  இரண்டாவது கருத்து தந்தை பெரியாருடைய கருத்தாகும்.  இரண்டிற்கும் என்ன வேறுபாடு?


ஈசனுக்கு உகந்தது எது?
‘நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாற்றியே

சுற்றி வந்து மொண மொணன்று சொல்லும் மந்திரமேதடா?

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?



ஓசை பெற்ற கல்லை உடைத்து உருக்கி நீர் செய்கிறீர்

வாசலில் பதித்த கல்லை மழுங்கவும் மிதிக்கிறீர்

பூசை பெற்ற கல்லிலே பூவும் நீரும் சாற்றுகிறீர்.
ஈசனுக்குகந்த கல்லு இரண்டு கல்லுமல்லவே’
                                                                    - சிவ வாக்கியர்


ஆத்திகர்களே எது நல்லது?
கல்லில் தெய்வம் இருப்பதாகக் கருதி, அதற்கு ஒரு கோவில் கட்டி, அந்த சாமியை வணங்க தரகர் ஒருவரையும் வைத்து அந்த கல்லுச்சாமிக்கு மனிதனுக்கு செய்யும் அல்லது மனிதன் தான் செய்து கொள்ளும் மாதிரியாகவெல்லாம் செய்து அதற்கு வீணாக பணத்தை பாழாக்கி நேரத்தை வீணாக்குவது நல்லதா?
அல்லது மனிதனிலே தெய்வம் இருப்பதாகக் கருதி அதற்கு அந்த மனிதனையே தரகராக வைத்து தனக்கு வேண்டியது போலவும் தான் பிறர் தன்னிடத்தில் நடக்க வேண்டுமென்று கருதுவது போலவும் அந்த மனிதனுக்கு செய்து அவனிடத்தில் நடந்து கொள்வது நல்லதா?

-       தந்தை பெரியார் - குடி அரசு – கேள்விகள் – 21.12.1930


PDF இல் சேமிக்க‌

27.12.10

தந்தை பெரியார் கடவுள் ஏற்பாளரே! - 2

முந்தைய பதிவின் (http://meykandar.blogspot.com/2010/12/1.htmlதொடர்ச்சி

இத்துடன் தந்தை பெரியார் நிறுத்தவில்லை.  அவர் இன்னொரு சொற்பொழிவில் பேசியதையும் படியுங்கள்:

“நான் சமதர்மத்திற்கு உழைக்கிறேன் என்றும் என்னைப் பலர் நாஸ்தீகர் என்று சொல்லுகிறார்கள் என்றும் நான் நாஸ்தீகன் அல்லவென்றும் எனக்காகப் பரிந்து பேசினார்கள்.  அப்படிப் பரிந்து பேசியதற்காக நான் அவர்களுக்கு செலுத்துகிறேன்.  ஆயினும் என்னை நாஸ்தீகன் என்று சொல்லுகிறவர்கள் நாஸ்தீகன் என்பதற்கு என்ன அர்த்தம் கொண்டு சொல்லுகிறார்களோ அந்த அர்த்தத்தில் நான் நாஸ்தீகன் தான் என்பதை வலியுறுத்திச் சொல்லுகின்றேன்.  நாஸ்தீகத்திற்கு பயந்தவனானால் ஒரு காரியமும் செய்ய முடியாது.  அதிலும், சமதர்மக் கொள்கையை பரப்ப வேண்டுமானால் நாஸ்தீகத்தினால் தான் முடியும்.  நாஸ்தீகமென்பதே சமதர்மம் என்று பெயர்.  அதனால் ருஷியாவையும் நாஸ்திக ஆட்சி என்கிறார்கள்.  பெளத்தரையும் நாஸ்தீகம் என்றதற்குக் காரணம் அவர் சமதர்மக் கொள்கையைப் பரப்ப முயற்சித்ததால் தான்.  நாஸ்தீகம் என்பது சமதர்மக் கொள்கை மாத்திரமல்ல.  சீர்திருத்தம் அதாவது ஏதாவது ஒரு பழய கொள்கைகளை மாற்ற வேண்டுமானால் அந்த மாற்றத்தையும் ஏன் எவ்வித சீர்திருத்தத்தையுமே நாஸ்தீகம் என்று தான் யதாபிரியர்கள் சொல்லித் திரிவார்கள்.  எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ சமத்துவத்திற்கு இடமில்லையோ அங்கு எல்லாம் இருந்து தான் நாஸ்தீகம் முளைக்கின்றது.  கிறிஸ்துவையும் மகமது நபியையும் கூட நாஸ்தீகர்கள் சொன்னதற்கும் அவர்களது சமதர்மமும் சீர்திருத்தமும் தான் காரணமாகும்.  துருக்கியில் பாஷாவும் ஆப்கானிஸ்தான் அமீரும் நாஸ்தீகர்கள் என்று அழைக்கப்பட்டதற்கும் அவர்களது சீர்திருத்தந்தான் காரணம்.  ஏனென்றால் இப்போது வழக்கத்தில் இருக்கும் கொள்கைகளும் பழக்கங்களும் எல்லாம் கடவுள் செய்ததென்றும் கடவுள் கட்டளை என்றும் கடவுளால் சொல்லப்பட்ட வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகியவைகளின் கட்டளையென்றுமே தான் யதாப்பிரியர்கள் சொல்லுகிறார்கள்.  ஆகவே நாம் இப்போது எதெதை மாற்ற வேண்டுமென்கின்றோமோ அவைகள் எல்லாம் கடவுள் செய்ததாகவும் அல்லது கடவுள் தனது அவதாரங்களையோ தனது தூதர்களையோ செய்யச் சொன்னதாகவுமே சொல்லப்படுவதால் அவைகளைத் திருத்தவோ அழிக்கவோ புறப்படுவது கடவுள் கட்டளையை மீறின அல்லது கடவுள் கட்டளையை மறுத்ததேயாகும். 

உதாரணமாக மக்களில் நான்கு ஜாதி கடவுளால் உற்பத்தி செய்யப்பட்டது என்று சொல்லப்படுகையில் மேற்படி ஜாதி ஒழிய வேண்டுமென்றால் அவன் கண்டிப்பாக கடவுளை மறுத்தோ அலட்சியம் செய்தேதான் ஆக வேண்டும்.  எல்லா மதங்களும் மதக் கொள்கைகளும் கடவுளாலோ அவதாரங்களாலோ கடவுள் தன்மையாலோ ஏற்பட்டது என்று சொல்லப்படுகையில் அம்மத வித்தியாசங்கள் ஒழிய வேண்டும் என்றும் மதக் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும் என்று சொல்லும்போது அப்படிச் சொல்பவன் அந்தந்தக் கடவுள்களை கடவுள்களால் அனுப்பப்பட்ட தெய்வீகத் தன்மை பொருந்தியவர்களை அலட்சியம் செய்தவனே யாகின்றார்.  அதனால்தான் கிறிஸ்தவர் அல்லாதவர் அஞ்ஞானி என்றும் மகமதியரல்லாதவர் காபர் என்றும் இந்து அல்லாதவர் மிலேச்சர் என்றும் சொல்லப்படுகிறது. 

அன்றியும் கேவலம் புளுகும் ஆபாசமும் நிறைந்த புராணங்களை மறுப்பதே இந்துமதக் கொள்கைப்படி நாஸ்திகம் என்று சொல்லப்படும்போது ஜாதியையும் கர்மத்தையும் மறுப்பதை ஏன் நாஸ்திகம் என்று சொல்லமாட்டார்கள்?
 
ஜாதி, உயர்வு தாழ்வு, செல்வம், தரித்திரம், எஜமான், அடிமை ஆகியவைகளுக்கு கடவுளும் கர்மமும் தான் காரணம் என்று சொல்லுவதானால் பிறகு மக்களுக்கு விடுதலையும் முன்னேற்றமும் எங்கே இருக்கின்றது?  கடவுளையும் கர்மத்தையும் ஒழித்தாலொழிய அதற்காக மனிதன் எப்படி பாடுபட முடியும்?  மேடும் பள்ளமும் கடவுள் செயலானால் மேட்டை வெட்டிப் பள்ளத்தில் போட்டு சமன் செய்வது கடவுள் செயலுக்கு விறோதமான காரியமாகும்.  மனிதனுக்கு முகத்தில் தலையில் மயிர் முளைப்பது கடவுள் செயலானால் சவரம் செய்து கொள்வது கடவுள் செயலுக்கு எதிராகவே செய்யும் அதாவது ஓரளவுக்கு  நாஸ்திகமான காரியமேயாகும்.  அதிலும் சவரம் செய்யச் செய்ய மறுபடியும் மறுபடியும் மயிர் முளைப்பதைப் பார்த்தும் மேலும் சவரம் செய்வது வடிகட்டின நாஸ்திகமேயாகும்.  பிச்சைக்காரனுக்கு சோறு போடுவதும் நாஸ்திகமேயாகும்.  ஏனெனில் கடவுள் பார்த்து ஒருவனை அவனது “கர்மத்திற்காக” பட்டினி போட்டிருக்கும்போது நாம் அவனுக்கு சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான காரியமேயாகும்.  அதாவது கடவுளை நம்பாத, கடவுள் செயலை லட்சியம் செய்யாத தன்மையேயாகும்.  இப்படியே பார்த்துக் கொண்டு போனால் உலகத்தில் ஆஸ்திகன் ஒருவரும் இருக்க முடியாது.  ஆதலால் நம்மைப் பொருத்தவரை நாம் பல மாறுதல் ஏற்பட விரும்புவதால் அவை கடைசியாய் நாஸ்திகமேயாகும்.” 
(குடி அரசு – சொற்பொழிவு – 07.09.1930)
PDF இல் சேமிக்க‌

26.12.10

தந்தை பெரியார் கடவுள் ஏற்பாளரே! - 1

பகுத்தறிவுப் பகலவன் எனப் புகழப்படும் தந்தை பெரியார் நாத்திகர் இல்லை என்றும் நாத்திகம் என்னும் கருவியின் வழி கடவுள் கொள்கையைச் சொன்னவர் என்றும் உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்க நிறுவனர் பேராசிரியர் மு. தெய்வநாயகம் அவர்களின் சில கூட்டங்களில் கேட்டிருக்கிறேன்.  கடந்த திசம்பர் 12ஆம் நாள் சென்னை திருவொற்றியூரில் நடந்த திருமண நிகழ்விலும் பேராசிரியர் அக்கருத்தை வலியுறுத்திச் சொன்னார்.  சாதியையும் மதத்தையும் உருவாக்கி அதில் குளிர் காயும் கூட்டத்தைச் சாட வந்த பெரியார், அக்கூட்டம் உருவாக்கி வைத்திருந்த சாதி ஏற்றத்தாழ்வு என்னும் பேய்க்கொள்கையை மிகக் கடுமையாக எதிர்த்து வந்தார்.  அச்சூழலில் அக்கொள்கையைக் கொண்டிருந்தோர் தங்கள் கொள்கைக்குக் கடவுள் வழியமைத்துக் கொடுத்ததாகக் கூறிய போது அந்தப் போலிக் கடவுளை அவர் எதிர்த்தார் என்பது பேராசிரியரின் கருத்து ஆகும்.

            இக்கருத்தைத் தந்தை பெரியாரின் வார்த்தைகளிலேயே பார்ப்போம்.  பெரியார்  தம்முடைய ‘குடி அரசு’ ஏட்டில் நாத்திகம் பற்றியும் கடவுள் பற்றியும் கூறுகிறார். அக்கருத்து பின்வருமாறு:

            ‘நமது நிலைக்குக் காரணமென்ன?  நமது தரித்திரத்திற்கு யார் காரணம்?  நமது செல்வமும் பாடும் என்ன ஆகின்றது?  என்கின்ற அறிவு நமக்கு இல்லாமல் இருக்கிற முட்டாள்தனமே நமது இன்றைய இழிவு நிலைக்குக் காரணமாயிருக்கின்றது.  மதத்தையாவது ஜாதியையாவது கடவுளையாவது உண்மையென்று நம்பி அவைகளைக் காப்பாற்ற முயர்ச்சிக்கும் எவனாலும் மக்களுக்கு சமத்துவமும் அறிவும் தொழிலும் செல்வமும் ஒருக்காலும் ஏற்படவே ஏற்படாது என்பது எனது உறுதி. 

            ஆனால் இவைகளை அழிக்க மக்கள் ஒருக்காலமும் சம்மதிக்க மாட்டார்கள்.  இவைகளைக் காப்பாற்ற அனேக விதமான ஸ்தல ஸ்தாபனங்கள் ஆதியிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு வந்து குழந்தைப்பருவ முதலே நமக்குள் புகுத்தப்பட்டு வந்திருப்பதால் இது சுலப சாத்தியமான காரியமாக இருக்க முடியவில்லை.  இவைகளில் எங்கு கை வைத்தாலும் நமது எதிரிகள் நம்மீது நாஸ்திகன் என்னும் ஆயுதத்தை வீசி எறிந்து நம்மை கொல்லப்பார்த்து விடுவார்கள்.  நமது மக்களும் பெரும்பாலும் மூடர்களாயிருப்பதால் அந்த நாஸ்திகம் என்னும் ஆயுதத்தைக் கொண்டே நமது எதிரிகளுக்கு உதவியாகவும் நமக்கு எதிராகவும் நின்று நமது முயற்சிகளுக்கு இடையூறு செய்வார்கள்.  ஆகையால் நாம் இன்றைய நிலையில் இருந்து ஒரு சிறு மாறுதல் செய்ய வேண்டுமானாலும் நமது எதிரிகளின் ஆயுதமாகிய நாஸ்திகத்திற்கு பயப்படாமல் “ஆமாம் நான் நாஸ்திகன் தான்” என்று சொல்லிக்கொண்டு அந்த நாஸ்திகத்தையே நாட்டில் எங்கும் மூலை முடுக்குகளில் கூட பரப்ப நாம் துணிய வேண்டும்.  அப்போது தான் நமது எண்ணம் ஈடேற முடியும்.  ஆதலால் நாம் இனிச் செய்ய வேண்டியது முக்கியமாய், நாஸ்திகப் பிரசாரமேயாகும்.  அதாவது “எனக்கு இந்த மதம் வேண்டாம், இந்த சாதி வேண்டாம், இந்த சாஸ்திரம் வேண்டாம், இந்தக் கடவுள் வேண்டாம் இவைகள் இல்லாமல் ஜீவிக்க என்னால் முடியும்; எனக்கு வேண்டியதெல்லாம் சமத்துவமும் மனிதத் தன்மையுமேயாகும்” என்று தைரியமாய்ச் சொல்ல வேண்டும்.” 
(குடி அரசு – சொற்பொழிவு – 14.09.1930)

கவனித்தீர்களா?  தந்தை பெரியார் சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கைக்காரர்கள் உருவாக்கி வைத்திருந்த போலிக்கடவுள் கொள்கையை அல்லது பேய்க்கொள்கையை எதிர்க்கிறாரேயன்றிக் கடவுள் கொள்கையை எதிர்க்கவில்லை.  அதிலும் ‘நமது எதிரிகளின் ஆயுதமாகிய நாஸ்திகத்திற்கு’ என்று சொல்வதன் மூலம் ‘நாத்திகத்தை’க் கடவுள் கொள்கையை வலியுறுத்தும் ஒரு கருவியாகத் தான் தந்தை பெரியார் பயன்படுத்தினார் என்பது புலனாகிறது அல்லவா?
PDF இல் சேமிக்க‌

22.12.10

கல்வி வேறு அறிவு வேறு!


           கல்வி என்பதைப் பற்றி நமது மக்கள் பெரும்பாலும் புஸ்தகப் படிப்பையும் குருட்டு உருப்போட்டு பரிட்சைகளில் தேறிவிடுவதையுமே கல்வி என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள்.  உதாரணமாக ஆங்கிலத்தில் பி.ஏ., எம்.ஏ., படித்துப் பட்டம் பெற்றவர்களையும் தமிழ்ச்சங்கத்தில் படித்து வித்வான் பரிட்சை பாஸ் பண்ணி பட்டம் பெற்றவர்களையும் கல்வியாளர்கள் என்று சொல்லிவிடமுடியாது.  அவர்கள் ஏதோ ஒரு வித்தையில் அதாவது குருட்டு உருப்போட்டு ஒப்புவிக்கக்கூடிய ஒரு வித்தை அல்லது ஒரு சாதனத்தில் தேர்ந்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.  அதாவது அலமாரியில் உள்ள புஸ்தகங்களைப் போல் இவர்களும் தங்கள் மனதில் பல விஷயங்களை “பதிய வைத்திருக்கும் ஒரு நகரும் அலமாரி” என்று தான் சொல்ல வேண்டும். 
           படிப்பு வேறு அறிவு வேறு என்பதை ஞாபகத்தில் பத்திரமாய் வைத்துக் கொள்ளுங்கள்.  படித்த மூடர்களுக்கு எத்தனை உதாரணம் வேண்டுமானாலும் சொல்லலாம்.  உதாரணமாக ஒரு பூகோள சாஸ்திரத்தில் எம்.ஏ. (பண்டித) பட்டம் பெற்ற ஒரு உபாத்தியாயர் பிள்ளைகளுக்கு சூரிய சந்திர கிரகணத்தைப் பற்றி வான சாஸ்திரப் பாடம் சொல்லிக்கொடுக்கும்போது பூமியும் சூரியனும் சந்திரனும் ஒன்றுக்கொன்று சுற்றுவதின் பயனாய் ஒன்றால் ஒன்று மறைக்கப்படுவதால் அதன் ஆகுர்தியும் ஒளியும் மறைவுபடும்.  அதைத்தான் சந்திரகிரகணம் என்றும் சூரிய கிரகணம் என்றும் சொல்வது என்று பாடம் சொல்லிக் கொடுப்பான்.  
              ஆனால் சந்திர கிரகணமோ சூரிய கிரகணமோ வந்து விட்டால் சூரியன் என்கின்ற ஒரு தேவதையை இராகு, கேது என்கிற தேவதைகள் துன்பப்படுத்துவதாகவும் இது அவர்களுக்கு ஏற்பட்ட சாபத் தீடு என்றும் அதற்காக மக்கள் தோஷ பரிகாரம் செய்ய வேண்டுமென்றும் சொல்லிக் கொண்டு கிரகணம் பிடிக்கும்போது ஒரு ஸ்நானமும் விடும்போது ஒரு ஸ்நானமும் மத்தியில் மந்திரங்களும் ஜெபங்களும் செய்வான்.  சாப்பிடாமல் பட்டினியாகவும் இருப்பான். மற்றும் தான் பிறந்த நேர கிரக நட்சத்திரமும் கிரகண நேர கிரக நட்சத்திரமும் ஒன்றாயிருந்தால் நெற்றியில் பட்டங் கட்டிக்கொண்டு முழுகுவான்.  ஆகவே அவனது படிப்பானது வான சாஸ்திர பரிட்சையில் தேறத்தான் உபயோகப்பட்டதே தவிர அந்த எம். ஏ. பட்டம் பெற்றவனுக்கு அது அறிவுக்கு சற்றும் பயன்படவே இல்லை. 

(பெரியார் – குடிஅரசு- சொற்பொழிவு-27.07.1930)

PDF இல் சேமிக்க‌

21.12.10

கல்வியே செல்வம்

நமது நாட்டில் கோயில் கட்டுவதற்கும் கும்பாபிஷேகம் செய்வதற்கும் பூஜை, உற்சவம் நடத்துவதற்கும் நாசமாகிற பணங்களும் இடங்களும் நேரங்களும் இம்மாதிரி வாசகசாலைகளுக்கு உபயோகப்படுத்தப் பட்டிருக்குமானால் மக்களுடைய அறிவு கல்வி இன்றைக்கிருப்பதைப் போல் நூறு மடங்கு அதிகமாக வளர்ச்சி பெற்று மக்கள் சுயமரியாதையோடு வாழ முடிந்திருக்கும். 
            
நமது நாட்டில் வாசகசாலையின் பெருமை மக்கள் அறியாமலிருப்பதற்கு இரண்டு காரணம்.  ஒன்று வாசகசாலையின் அவசியம் மக்களுக்கு இருக்கும்படியான அளவு கல்வியில்லாமலிருப்பது.  மற்றொன்று மக்களுக்குப் பகுத்தறிவில்லாமல் இருப்பது.  இந்த இரண்டும் வாசகசாலையை ஏற்படுத்தவிடாமல் குழவிக்கல்லை நட்டி கோவில் கட்டுகிற வேலையில் மக்களை திருப்பிவிட்டது.
***
ஒரு நாட்டின் மதக் கொள்கைக்கும் ஆட்சியின் தன்மைக்கும் அளவுகோள், அந்த நாட்டு மக்களின் கல்வியறிவே யாகும்.  நமது நாட்டில் நூற்றுக்கு 93 பேர் கல்வியில்லாத தற்குறிகள்.  நூற்றுக்கு 99 பேர் கல்லில் முட்டிக்கொள்ளும் மூடர்கள்.  இப்படிப்பட்ட இந்த நாடு எப்படி அறிவுள்ள ஒரு சுதந்திரமான நாடாகும்?  
PDF இல் சேமிக்க‌