8.2.11

உலக நாடுகள் தமிழ் இன அழிப்பைக் கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன்?


 உலக நாடுகளுக்குத் தலைமை தாங்குவது ஐக்கிய நாடுகள் அவை.  ஐக்கிய நாடுகள் அவை அணுகுண்டைக் கையில் வைத்திருக்கும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, இரசியா, சீனா ஆகிய ஐந்து நாடுகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.  இந்த ஐந்து நாடுகளின் கட்டுப்பாட்டில் உலக நாடுகள் தமிழ் இன அழிப்பைக் கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன்?

கைப்பாவை
இலங்கையின் இறையாண்மையைக் கையில் வைத்திருக்கும் சிங்களர்களும் இந்தியாவின் இறையாண்மையைக் கையில் வைத்திருக்கும் பிராமணர்களும் ஆரிய இனம் என்னும் அடிப்படையில் ஆரிய இனத்திற்கு எதிரான திராவிட இனத்தின் தலைமை எனக் கருதப்படும் தமிழ் இன அழிப்பைச் செய்யும்பொழுது, தங்களை ஆரிய இனம் என நம்பும் அமெரிக்கர், பிரிட்டிசார், பிரஞ்சுக்காரர், இரசியர் ஆகிய நால்வரும் தங்களை அறியாமலே தங்கள் இனத்தவருக்கு ஆதரவாக இருப்பது இயல்பான ஒன்றாகும். 

ஐக்கிய நாட்டு அவையைக் கையில் வைத்திருக்கும் ஐந்து நாடுகளில் மேலே கூறப்பட்டுள்ள நான்கு நாடுகள் போக, பெளத்த மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் சீனா, பெளத்த நாடான இலங்கைக்கு ஆதரவாகச் செயல்பட நினைப்பது இயல்பு.

ஆகவே, ஆரிய இனம், பெளத்த மதம் ஆகிய இரண்டன் அடிப்படையில், இந்த இரண்டிற்கும் எதிரான தமிழ் இனம் இலங்கையில் அழிக்கப்பட ஐக்கிய நாடுகள் அவையைக் கையில் வைத்திருக்கும் ஐந்து நாடுகளும் தங்களை அறியாமலே துணை போவது இயல்பான ஒன்றாகும்.  இந்த ஐந்து நாடுகளையும் மற்ற உலக நாடுகள் எதிர்க்கும் ஆற்றல் இல்லாதவை.  இதனால் ‘International community’  எனப்படும் உலக நாடுகள் இலங்கையில் தமிழ் இன அழிப்பு நடைபெற்ற போது வெட்கப்பட வேண்டிய அளவில் நடந்து கொண்டமையை இலங்கைத் தமிழர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என்பது ‘இந்து’ நாளேட்டின் வழி தெளிவாக வெளிப்பட்டுள்ளது. 

ஆகவே, இலங்கையில் தமிழ் இன அழிப்பின் பின்னணியில் இனப்பாசம், மதப்பாசம் ஆகிய இரண்டும் அடங்கியிருப்பது தெரிகிறது.  தமிழ் இன அழிப்புக்குக் காரணமான ஆரிய இனப்பாசம், பெளத்த மதப் பாசம் ஆகிய இரண்டில் ஆரிய இனப்பாசம் என்பது ஆழ்ந்து எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்று ஆகும். 

“ஆரியர்” என்பது ஓர் இனப் பெயரா?

“ஆரிய இனம்” என்று ஓர் இனம் இல்லை என்பது வரலாறு (இதைப்பற்றிய பதிவு "ஆரியர் என்போர் ஓர் இனத்தவர் அல்லர்” என்பதைக் காணவும்).  இந்தியாவின் மீது, ஈரான் வழியாகப் பல காலங்களில் படை எடுத்து வந்த பல மொழி பேசிய அந்நியர்களுக்கு இந்திய மக்கள் கொடுத்த பொதுப் பெயரே “ஆரியர்” என்பதாகும்.  ஈரான் வழியாகப் படையெடுத்து வந்த அந்நியர்களை “ஈரானியர்” என்னும் பெயரில் இந்திய மக்கள் குறித்தனர்.  “ஈரானியர்” என்னும் பெயர் “ஆரியர்” என மருவியுள்ளது. 

கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டிற்கு முன்னர், இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் “ஆரியர்” என்னும் இனப்பெயர் வழக்கில் இல்லை. 

“வெள்ளை நிறத்தை உடையவன் பிறப்பால் உயர்ந்தவன்” என்னும் நிறவெறிக் கொள்கையையுடைய மனுநூலை, சமற்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்த வில்லியம் சோன்சு காலத்திற்குப் பின்னரே உலகில் நிறவெறிக் கொள்கை பரவி, நிறவெறிக் கொள்கையில் மகிழ்ச்சியடைகிறவர்கள் தங்களையும் “ஆரிய இனம்” எனக் கூறிக்கொள்ளும் நிலை இந்தியாவிற்கு வெளியே உருவாயிற்று என்பது வரலாறு.  இந்நிலை உருவாகக் காரணமானவர் மாக்சு முல்லர் என்பது வரலாறு.  

(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய 'அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?' என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது)

PDF இல் சேமிக்க‌

0 கருத்துகள்:

Post a Comment