31.1.11

சார்லசு தார்வினுக்கு உயிரைப் பற்றித் தெரியுமா?


உயிரின் வேலை

உடலின் உள்ளுறுப்புகளை இயக்கி உடல் அழியாதவாறு உயிர் பாதுகாக்கிறது.
  1. உணவு செரிக்கப்படல்
  2. செரிக்கப்பட்ட உணவு இரத்தத்தோடு கலக்கப்படல்
  3. இரத்தம் துப்புரவாக்கப்படல்
  4. துப்புரவாக்கப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் அனுப்பப்படல்
  5. தேவையற்ற பொருள்கள் கழிவுகளாக வெளியேற்றப்படல்
  6. உடலுக்குத் தீங்கு வராமல் அனிச்சைச் செயல்கள் நிகழ்த்தப்படல்
ஆகிய இயல்பூக்கச் (Natural Instinct) செயல்களை உயிர் செய்து கொண்டிருக்கிறது. 

உடலை விட்டு உயிர் நீங்கியவுடன் உயிரின் செயல்பாடுகள் அனைத்தும் நின்று விடுகின்றன. 

இதனால் உடல் அழியத் தொடங்குகிறது.  செயல்பட்டுக் கொண்டிருக்கும் உயிருள்ள உடலையும் அழிந்து கொண்டிருக்கும் உயிரற்ற உடலையும் நம்மால் பிரித்து அறிய முடிகிறது. 

அறிவியல் காலந்தோறும் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது.  இதுவரை வளர்ந்துள்ள அறிவியலில் உயிரற்ற பொருள்களும் உயிரினங்களின் உடல்களும் ஆராயப்பட்டுள்ளன. 
தார்வினின் படிநிலை வளர்ச்சிக்கொள்கை, உயிரினங்களின் உடலின் படிநிலை வளர்ச்சியை ஆராய்ந்துள்ளது. 

குரங்குக்கும் மனிதனுக்கும் உடல் அளவில் ஒற்றுமை காணப்படுவதை விளக்குகிறது. 

உயிரினத்தை ஆராய்வது என்பது, உயிரினத்தின் உடலையும் உயிரையும் ஆராய்வது ஆகும். 

தார்வின்: உண்மையில்லை! 
உயிரினத்தின் உடலை மட்டும் ஆராய்வது, உயிரினத்தின் வளர்ச்சிப்படிநிலைகளை ஆராய்வது ஆகாது.  உயிரினத்தின் வளர்ச்சிப் படிநிலைகளை ஆராய்வது என்பது, உயிரினத்தினுடைய உயிரின் வளர்ச்சிப் படிநிலைகளை ஆராய்வதில் அடங்கியிருக்கிறது. 




(பேராசிரியர் முனைவர் மு.தெய்வநாயகம் எழுதிய 'உலக சமயங்களை ஒன்றிணைக்கும் தமிழர் சமயமும் தமிழர் ஆன்மவியலும்' என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது)
PDF இல் சேமிக்க‌

28.1.11

உயிரின் வேலை என்ன?


  உயிர் இனங்கள் அனைத்தும் உடல், உயிர் ஆகிய இரண்டையும் கொண்டு விளங்குகின்றன.  உயிருள்ள உடலையும் உயிர் இல்லாத உடலையும் நம்மால் பிரித்து அறிய முடிகின்றது.
இதனால்,
1.    உயிர்
2.    உடல்
3.    உயிரும் உடலும் இணைந்த உயிரினம்
ஆகிய மூன்றையும் நம்மால் தனித்தனியாகப் பிரித்து அறிய முடிகின்றது.  இந்தப் பிரிவின்படி தமிழ் எழுத்துகள், உயிர், மெய் (உடல்), உயிர்மெய் என்று பிரிக்கப்பட்டு
1.    உயிர் எழுத்து
2.    மெய் எழுத்து
3.    உயிர்மெய் எழுத்து
என்று குறிக்கப்படும் பாங்கு எண்ணிப் பார்க்கத்தக்கது ஆகும். 

உயிரற்ற உடல், நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பெரும் பூதங்களின் இணைப்பாக இருக்கின்ற காரணத்தால் உயிரினத்தின் உயிர் நீங்கியவுடன் உயிரினத்தின் உடல் உயிரற்ற ஐம்பெரும் பூதங்களோடு இணைந்து விடுகின்றது. 

உயிரினங்கள் அனைத்தும் அவற்றின் உயிர்களுக்கு உரிய உருவத்தில் நமக்குக் காட்சியளிக்கின்றன. 

உயிர் இருக்கும் வரை உயிரினத்தின் உருவம் அழிவதில்லை.  உயிர் நீங்கியவுடன் உயிரினத்தின் உருவம் அழியத் தொடங்குகிறது.  உயிர்கள் அனைத்தும் பிறக்கின்றன. பிறக்கும் பொழுது உயிர்கள் அனைத்தும் உடலுடன் இணைந்தே பிறக்கின்றன.  உடலை அழியாமல் பாதுகாக்கும் வேலையை உயிர் செய்து கொண்டிருக்கிறது.  


(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய 'உலக சமயங்களை ஒன்றிணைக்கும் தமிழர் சமயமும் தமிழர் ஆன்மவியலும்' என்னும் புத்தகத்தில் இருந்து பதியப்பட்டுள்ளது)
PDF இல் சேமிக்க‌

26.1.11

சமயமும் அறிவியலும்



            சமயத்தை அறியாத அறிவியல், அறிவியலை அறியாத சமயம் ஆகி இரண்டுமே குறைவுடையன என்று அறிவியல் பேரறிஞராகிய ஐன்சுடீனால் கீழ்க்காணுமாறு கூறப்படுகின்றது. 

                                                                 
மதமும் அறிவியலும்
          “Science without Religion is Lame;
           Religion without Science is Blind”
 (அறிவியல் இல்லாத மதம் ஊமையானது; மதம் இல்லாத அறிவியல் பார்வையற்றது).  இக்கூற்றின் படி, அறிவியல் சார்ந்த சமயத்தையும் சமயம் சார்ந்த அறிவியலையும் ஐன்சுடீன் எதிர்பார்க்கின்றார் என்பது தெரிகிறது.
 
            


ஐன்சுடீன் கூற்றுப்படி, இப்பொழுது இருக்கும் நிலையில் அறிவியல், மெய்யியல், இறையியல் ஆகிய மூன்றும் நிறைவடையாத நிலையில் பிளவுபட்டு காணப்படுகின்றன என்பது விளங்குகிறது. 

            மேற் கூறப்பட்டுள்ள மூன்றும் பிளவுபட்டுக் காணப்படுவதற்கு வரலாற்றுக் காரணங்கள் இருக்கின்றன. 

ஐரோப்பியர்களின் ஆதிக்கம்

உலகில் தோன்றியுள்ள சமயங்கள் அனைத்தும் ஆசியாவிலிருந்து மட்டுமே எழுந்துள்ளன.  ஐரோப்பாவிலிருந்து எந்தச் சமயமும் எழவில்லை. 

ஐரோப்பியர்களிடம் அடிமை
 ஐரோப்பியர்கள் வணிகத்திலும் மற்ற நாடுகளைப் பிடித்து அடக்கி ஆட்சி செய்வதிலும் வல்லவர்கள் என்பதில் ஐயமில்லை.  தற்போதைய அறிவியல் கண்டுபிடிப்புகளில் மிகப் பெரும்பான்மையானவை ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை.  இதனால், ஐரோப்பியர்களின் ஆதிக்கத்தின் கீழ் ஆசியாவின் மெய்யியலும் இறையியலும் சிக்கித் தவிக்கின்ற காரணத்தால் மெய்யியலும் இறையியலும் தங்களுடைய சிறப்பை இழந்து நிற்கின்றன. 




அறிவியல் சார்ந்த ஆன்மவியல்

 இன்று ஐரோப்பியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் அறிவியல், மெய்யியல், இறையியல் ஆகிய மூன்றிலுமுள்ள குறைபாடுகளை நீக்கி, அறிவியல் சார்ந்த மெய்யியலாகவும் அறிவியல் சார்ந்த இறையியலாகவும் வளர்ந்துள்ள அறிவியல் சார்ந்த ஆன்மவியல், ஆசியாவில், சிறப்பாக இந்தியாவில், அதிலும் சிறப்பாகத் தமிழ்மொழியில் வளர்ந்து செழித்துள்ள நிலை உலக அறிஞர் பெருமக்களால் கூர்ந்து நோக்கத்தக்க ஒன்றாகும். 

இடைக்காலத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளால் தமிழ் மொழியும், தமிழ் இனமும் அடிமைப்பட்ட நிலையில் இருப்பதால், தமிழர் ஆன்மவியல் வெளியுலகிற்குத் தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கின்றது.  

(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய "உலக சமயங்களை ஒன்றிணைக்கும்  தமிழர் சமயமும் தமிழர் ஆன்மவியலும்" என்னும் நூலில் இருந்து எழுதப்பட்டுள்ளது.)
PDF இல் சேமிக்க‌

24.1.11

பிறவிச்சுழற்சிக் கொள்கை அறிவியலுக்குப் பொருந்துமா?


அறிவியலா?


 ஓரறிவு முதல் ஐயறிவு வரையிலான உயிர்கள் அவற்றின் நல்வினை, தீவினை ஆகியவற்றிற்கு ஏற்ப, உடல் மாறிப் பிறக்கின்றன என்பதும் 
மனிதன் மரமாகப் பிறப்பதும் மரம் மனிதனாகப் பிறப்பதும் முற்பிறவி வினையின் காரணமாக நிகழ்கின்றன எனவும் பிறவிச்சுழற்சிக் கொள்கையில் நம்பப்படுகிறது.





பிறவிச் சுழற்சிக் கொள்கையில் உள்ள குறைபாடுகள்
  1. மனித உயிர் மரத்தின் உடலிலும் மரத்தின் உயிர் மனித உடலிலும் இணைவது எவ்வாறு?
  2. இந்த இணைப்பு ஏற்படுவது எவ்வாறு?
  3. இது அறிவியல் உண்மைக்குப் பொருந்துமா?
  4. உயிர் முதலில் தோன்றியது எவ்வாறு?
  5. உயிர் முதலில் உடலுடன் இணைந்தது எவ்வாறு?
  6. முந்தைய பிறவியின் நல்வினை, தீவினை ஆகியவற்றிற்கு ஏற்ப அடுத்த பிறவி வருகிறது என்றால், முதல் பிறவி எவ்வாறு வந்தது?  அதற்கு முந்தைய பிறவி இல்லையே?

என்னும் கேள்விகளுக்குச் சமண மதத்தைச் சேர்ந்த மகாவீரர் உருவாக்கிய பிறவிச் சுழற்சிக் கொள்கையில் விடைகள் இல்லை.

(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய 'உலக சமயங்களை ஒன்றிணைக்கும் தமிழர் சமயமும் தமிழர் ஆன்மவியலும்' என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.)
PDF இல் சேமிக்க‌

22.1.11

ஆதிக்கவாதிகளின் பிடியில் அறிவியல்



மேலை நாடுகளின் பிடியில் இருக்கும் இன்றைய அறிவியல் உயிரினங்களின் உடலை மட்டுமே ஆராய்வதாகவும் உயிரை அறியாததாகவும் இருக்கிறது. 

தார்வின்: அறிவியலா?
தார்வினின் படிநிலை வளர்ச்சிக் கொள்கையில் உடலைப் பற்றிய ஆராய்ச்சியே இடம் பெற்றுள்ளது.  ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான உயிரின் வளர்ச்சிப் படிநிலைகள் ஆராயப்படவில்லை. 

இதனால், உடலளவில் ஒத்த தோற்றமளிக்கும் குரங்கிற்கும் மனிதனுக்கும் உள்ள ஒற்றுமையை மட்டும் வைத்து குரங்கிலிருந்து மனிதன் வந்திருக்க வேண்டும் என்னும் ஊகத்தைத் தார்வின் வெளிப்படுத்தியுள்ளார். 


இது ஊகமே தவிர, அறிவியல் உண்மை ஆகாது.  ஏனெனில், ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள உயிரினங்களின் உயிரின் வளர்ச்சிப் படிநிலைகளைத் தார்வின் ஆராய்ந்திருந்தால் ஐந்தறிவு மட்டுமே உள்ள விலங்கினமாகிய குரங்கிற்கும் ஆறாவது அறிவுமுடைய மனிதனுக்கும் உள்ள தெளிவான வேற்றுமையை அவரால் புரிந்துகொண்டிருக்க முடியும். 

மேலும் தார்வினின் படிநிலை வளர்ச்சிக் கொள்கை அறிவியல் அடிப்படையில் ஆனது என்று ஏற்றுக் கொண்டிருக்கும் ஐரோப்பிய அறிவியலாளர்களிடத்தில், உயிரைப் பற்றிய ஆராய்ச்சி இன்றுவரை வளரவில்லை என்பது நோக்கத்தக்கது. 

எவ்வாறென்றால், ‘உயிர்’ என்பது என்ன என்று இன்றைய அறிவியலாளரிடம் விளக்கம் கேட்டால், அவர்களிடத்தில் விளக்கம் இல்லை. 

அறிவியலாளர் எந்த விளக்கம் கொடுத்தாலும் இளைஞன் ஒருவன் உடலும் உயிரும் இணைந்ததே உயிரினம்; அப்படியானால்
  • உடலுடன் உயிர் எப்போது இணைந்தது?
  • எவ்வாறு இணைந்தது?
  • உடலை விட்டு நீங்கும் உயிர் எங்கே செல்கிறது?
என்று கேட்கும் கேள்விகளுக்கு அறிவியலாளரிடத்தில் விடைகள் இல்லை. 

மேலும் உடலும் உயிரும் இணைந்த முதல் உயிரினம் எவ்வாறு தோன்றியது? என்னும் கேள்விக்கு ஊகத்தின் அடிப்படையிலேயே அறிவியலாளர் விளக்கம் கொடுக்கின்றனர். 

“உயிரற்ற பொருள்களின் இணைப்பினால் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் உயிரினம் தோன்றியிருக்க வேண்டும்” என்று கூறுகின்றனர். 

அறிவியல் இல்லை!
  இன்று நம்மிடம் இருக்கும் உயிரற்ற பொருள்களில் எந்தெந்தப் பொருள்களை எந்தெந்த அளவில் எந்தெந்தச் சூழ்நிலைகளில் இணைத்தால் ஓர் உயிரினத்தை உருவாக்கிக் காட்ட முடியுமோ அவ்வாறு உருவாக்கிக் காட்டினால், உயிர் என்று தனியாக ஒன்றும் இல்லை என்றும் உயிரற்ற பொருள்களின் இணைப்பினால் முதல் உயிரினம் தோன்றிற்று என்றும் அறிவியலாளர் கூறுவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும். 

அவ்வாறு இல்லாமல், ஆறறிவுடைய அறிவியலாளர்களாலும் உயிரற்ற பொருள்களில் இருந்து உயிரை உருவாக்க முடியாதென்றால், உயிரற்ற பொருள்கள் தாமாக உயிரை உருவாக்கிக் கொண்டன என்று அறிவியலாளர் கூறுவது அறிவியல் என்னும் பெயருக்குப் பொருந்தாத ஒன்று ஆகுமல்லவா?

அறிவியலுக்குப் புறம்பான இக்கூற்றை, அறிவியல் எனக் கூறுவது அறிவியலைத் தங்கள் விருப்பப்படிப் பயன்படுத்தும் ஆதிக்கவாதிகளின் ஆதிக்கத் திணிப்பாக இருக்க முடியுமே தவிர, அறிவியலுக்கு ஏற்றதாக இருக்க முடியாது. 

“உயிரினத்தை ஆறறிவு படைத்த மனிதனாலும் உருவாக்கிக் காட்ட இயலவில்லை” என்றும்
உயிரினத்தின் தோற்றம் பற்றி ஆராயப்பட்டுக் கொண்டிருக்கிறது” என்றும்
“இந்த ஆய்வு இன்னமும் நிறைவு பெறவில்லை” என்றும்

அறிவியலாளர் அறிவித்தால் இது அறிவியலுக்குப் பொருத்தமான கூற்று ஆகும். 

(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகத்தின் 'உலக சமயங்களை ஒன்றிணைக்கும் தமிழர் சமயமும் தமிழர் ஆன்மவியலும்' என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது)
PDF இல் சேமிக்க‌

20.1.11

சமற்கிருத வேதங்களின் கோட்பாடுகள் இந்து மதத்தின் கோட்பாடுகள் இல்லை


        ஆரியர்களுக்கென்று மதம் எதுவும் கிடையாது.  அவர்களுக்கென்று வழிபாடு தான் உண்டு.  அவர்கள் விலங்குகளைப் பலியிட்டு, அவற்றின் புலாலை உண்டு, சோம பானம் – சுரா பானம் என்னும் மதுவகைகளை உட்கொண்டு வந்தனர். 

            வேதங்கள் சமற்கிருதத்தில் உள்ளன.  முதல் சமற்கிருதக் கல்வெட்டே கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தான் காணப்படுகிறது.  (Nirad C. Chaudhuri, Hinduism, 1979 Pp. 38, 39 quot. By Dr. Alexander Harris, The development of Civilization and Religion in India and its influence on the world Society, 2001, Pp. 39-41).  எனவே வேதங்களின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட காலமாகும்.  (Dr. Alexander Harris, Ibid, http://www.geocities.com/appiusforum/book/pdf). 

            கிறித்துவிற்குப் பிற்பட்ட நூற்றாண்டுகளில் திராவிடரான வேதவியாசர் ஆரியரின் நாடோடி வழிபாட்டுப் பாடல்களுக்கு எழுத்து வடிவம் கொடுத்துத் தொகுத்தார்.  அவரே அவற்றைத் தொகுத்து ஒழுங்குபடுத்தி வேதங்களாகப் பிரித்தார்.

            வேதங்களைப் பொறுத்தவரை அவை மிகப் பழமையானவை என்றும் சைவம், வைணவம் ஆகிய மதங்கள் உருவாவதற்கு அடிப்படையாய் இருந்தன என்றும் பொதுவான ஒரு கருத்து நிலவி வருகிறது.
 
            சைவம், வைணவம் ஆகியவற்றின் அடிப்படைக் கோட்பாடுகள் வேதங்களில் காணப்படவில்லை.  சைவ சித்தாந்தத்தின் படி மனிதனாக அவதரித்து, மனுக்குலத்தை மீட்பதற்காகப் பாடுபட்ட முழு முதல் அன்புக்கடவுள் தான் சிவன் ஆவார்.  ஆனால் வேதங்களில் காணப்படும் உருத்திரன் சிறு தெய்வங்களில் ஒருவரும் புயல்காற்றின் தெய்வமும் ஆவார்.  புயல் தெய்வமான உருத்திரனுக்கும் சிவனுக்கும் எத்தொடர்பும் இல்லை.
 
            இதைப் போல் வைணவத்தில் காணப்படும் விட்ணுவிற்கும் வேதங்களில் கூறப்படும் விட்ணுவிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.  வேதத்தில் உள்ள விட்ணு என்பது கடவுளால் படைக்கப்பட்ட பொருள்களில் ஒன்றான சூரியனைக் குறிக்கிறது.  ஆனால் வைணவத்தின் விட்ணு முழு முதல் கடவுளாவார்.  வேதங்களில் காணப்படும் உருத்திரன், விட்ணு ஆகிய இருவரும் சிறு தெய்வங்களே அன்றி முழு முதல் கடவுளர் அல்லர். 



(முனைவர் தெ. தேவகலாவின் 'இந்தியா தோமா வழி திராவிடக் கிறித்தவ நாடே... எவ்வாறு?' என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது)

PDF இல் சேமிக்க‌

18.1.11

கிறித்துவின் நற்செய்தியை அறிவிக்கும் அடையாளம் சிலுவையா? - 3


ஐரோப்பிய அரசியல் மதம்
            கான்சுடன்டைன் தன் எதிரிகளை அழிக்க, சிலுவை அடையாளத்தை முதன்முதலில் பயன்படுத்தினான்.  எதிரிகளை அழிக்கச் சிலுவை அடையாளத்தைக் கான்சுடன்டைன் பயன்படுத்தியதில் தவறு ஒன்றும் இல்லை.  ஏனென்றால் அது ஐரோப்பிய அரசியல் கொலைக்கருவியே ஆகும்.  ஆனால் ஆசியாவில் தோன்றிய ஆன்மீக இயக்கமாகிய கிறித்தவம், கான்சுடன்டைன் வழியில் சென்று சிலுவை அடையாளத்தை ஏற்றுக்கொண்டமையால், அது ஆன்மீக இயக்கம் என்னும் நிலையில் இருந்து தவறி “ஐரோப்பிய அரசியல் மதம்” என்னும் நிலைக்கு வீழ்ந்துவிட்டதை நாம் வரலாற்றில் பார்க்கிறோம். 

            அதனால் தன்னைக் கொலை செய்த பகைஞர்களுக்கும் மன்னிப்பை அருளிய இயேசு கிறித்துவின் ஆன்மீக இயக்கம்  மறைந்து சிலுவை அடையாளத்தை மாட்டிக் கொண்டு மற்றவர்களைக் கொலை செய்த, சிலுவைப் போர் நடத்திய ஐரோப்பிய வழிக் கிறித்தவ மதத்தை நாம் வரலாற்றில் பார்க்கின்றோம். 

சிலுவைப் போர்
சிலுவைப் போர்
            ஆகவே, பகைவர்களுக்கும் மன்னிப்பை அருளிய இயேசு கிறித்துவின் ஆசிய ஆன்மீக இயக்கத்திற்கு எதிராக, போர்க்கருவியினால் பகைவர்களை அழிக்கும் ஐரோப்பியக் கிறித்தவ மதத்தின் அடையாளமாகச் சிலுவை விளங்கிக் கொண்டிருக்கிறது.  சிலுவை கிறித்தவ மதத்தின் அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் முதல் இன்று வரை இயேசு கிறித்துவின் ஆசிய ஆன்மீகம், ஐரோப்பியர்களின் தலைமையின் கீழ் ஐரோப்பியர்களின் தலைமையின் கீழ் ஐரோப்பிய அரசியலுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

ஐரோப்பிய அரசியல்
            கான்சுடன்டைன் காலம் வரை உரோமப் பேரரசு, கிறித்தவர்களை வேட்டையாடிய நிலையை நாம் திருச்சபை வரலாற்றில் மிகத் தெளிவாகப் பார்க்கிறோம்.  ஆனால்,

1.    கான்சுடன்டைன் காலத்தில் தொகுக்கப்பட்ட புதிய ஏற்பாட்டில் அந்த வரலாறு இல்லையே! ஏன்?
2.    திருச்சபை வரலாற்றைக் கூறும் அப்போத்தல நடபடிகளில் பெளல் உரோமபுரிக்குக் கொண்டு செல்லப்பட்டதைக் கூறும் இருபத்தெட்டாம் அதிகாரத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது ஏன்?

என்னும் கேள்விகளை எழுப்பினால் இயேசு கிறித்துவின் ஆசிய ஆன்மீக இயக்கம் ஐரோப்பிய அரசியலுக்கு அடிமைப்படுத்தப்பட்டு சிலுவை அடையாளம் சிறப்பிக்கப்பட்டதன் வரலாறு தெளிவாக விளங்கும்.
  ஐரோப்பியர்களிலும் ஐரோப்பிய அரசியல் சிந்தனைகளைத் தாண்டிக் கிறித்துவின் ஆன்மீக அனுபவத்தின் அடிப்படையில் செயல்படும் கிறித்துவின் அடியார்கள் இருக்கின்றார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.  ஆனால் அவர்கள் மிகச் சிறுபான்மையினரே!  
(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகத்தின் கருத்துகளில் இருந்து பதியப்பட்டவை)
PDF இல் சேமிக்க‌

14.1.11

கிறித்துவின் நற்செய்தியை அறிவிக்கும் அடையாளம் சிலுவையா? - 2


கிறித்தவம் ஆசிய ஆன்மிக இயக்கம் – சிலுவை ஐரோப்பியக் கொலைக் கருவி

1. இயேசு கிறித்து ஆசியாவில் பிறந்த ஆசியர்.  இயேசு கிறித்துவைச் சிலுவையில் அடித்துக் கொன்றவர்கள் ஐரோப்பிய ஆட்சியாளர்கள் ஆவர்.  அந்த ஐரோப்பிய ஆட்சியாளர்களால் சிறப்பிக்கப்பட்ட கருவிதான் சிலுவையாகும்.

2. இயேசு கிறித்து ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த ஆசியர் என்பதைப் போலவே இயேசு கிறித்துவின் பன்னிரண்டு சீடர்களும் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த ஆசியர்களே!

3. கிறித்தவத்தை விளக்கும் வேத நூலாகிய பைபிளில் உள்ள அனைத்துப் புத்தகங்களும் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த ஆசியர்களாலேயே எழுதப்பட்டவை.  ஐரோப்பியர்களால் பைபிளிலுள்ள எந்த ஒரு புத்தகமும் எழுதப்படவில்லை. 

ஆன்மீகத் தலைவர்

"உங்களை வலக்கன்னத்தில் அறைபவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்" (மத்தேயு 5:39) என்று கற்றுக் கொடுத்தது மட்டுமல்லாமல் கற்றுக் கொடுத்ததைச் சிலுவையில் அவரை அறைந்த பொழுது "தந்தையே இவர்களைப் பொறுத்தருளும், ஏனெனில் தாங்கள் செய்வது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை"(உலூக்கா 23:24) என்று நடைமுறையில் காட்டிய ஆன்மீகத் தலைவர் இயேசு கிறித்து ஆவார். 

அவர் போதனையில் வன்முறைக்குச் சிறிதும் இடம் இல்லை.  அவரைச் சிலுவையில் அடித்தபொழுதும் வன்முறைக்கு மாறாக மன்னிப்பையே பகைவர்களுக்கும் அருளினார். 

ஆகவே சிலுவை ஐரோப்பிய அரசியல் கொலைக் கருவி என்பதையும் சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறித்து பகைவருக்கும் மன்னிப்பை அருளும் ஆன்மீகத் தலைவர் என்பதையும் ஆழமாக எண்ணிப் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ள இயலும். 

ஐரோப்பிய அரசியல் கொலைக் கருவி?


ஐரோப்பிய அரசியல்
கொலைக்கருவி

    ஐரோப்பிய அரசனாகிய கான்சுடன்டைன் காலம் வரை கிறித்தவம் வன்முறையற்ற ஓர் ஆன்மீக இயக்கமாக விளங்கியது.  ஆன்மீக இயக்கமாகிய கிறித்தவத்தைக் குறிக்க, கான்சுடன்டைன் காலம் வரை ஐரோப்பிய அரசியல் கொலைக் கருவியாகிய சிலுவை அடையாளம் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை. 
(பேராசிரியர் முனைவர் மு.தெய்வநாயகத்தின் கருத்துகளில் இருந்து பதியப்பட்டவை)
PDF இல் சேமிக்க‌

12.1.11

கிறித்துவின் நற்செய்தியை அறிவிக்கும் அடையாளம் சிலுவையா? - 1


தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த கோட்சே என்பவன் தனது கைத் துமுக்கி(துப்பாக்கி)யால் தேசத் தந்தை காந்தியடிகளைச் சுட்டுக் கொன்றான்.

கோட்சேயையும் அவனுடைய கைத்துமுக்கியையும் யார் பாராட்டுவார்கள்?
அந்தத் தீவிரவாத இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பாராட்டுவார்கள்.

உரோம ஆட்சியாளர்கள் இயேசு கிறித்துவைச் சிலுவையில் அடித்துக் கொன்றார்கள்.

உரோம ஆட்சியாளர்களையும் சிலுவையையும் யார் பாராட்டுவார்கள்?
உரோம ஆட்சியாளர்கள் பாராட்டுவார்கள்.

உரோமப் பேரரசனாகிய கான்சுடன்டைன் கி.பி. நான்காம் நூற்றாண்டில் சிலுவைக்குச் சிறப்புக் கொடுத்தான்.  அதன் பின்னர் சிலுவை சிறப்பிக்கப்பட்டது. 

யாரால்?
உரோமப் பேரரசனைச் சேர்ந்த கிறித்தவர்களால்.

கொல்லப்பட்டதன்
அடையாளம்
 கான்சுடன்டைன் காலம் வரை கிறித்தவத்தைக் குறிக்க சிலுவை அடையாளம் பயன்படுத்தப்படவில்லை.  அதற்குப் பின்னரே கான்சுடன்டைனைச் சேர்ந்த கிறித்தவர்கள் சிலுவைக்குச் சிறப்புக் கொடுத்தார்கள்.

 சிலுவை “இயேசு கிறித்து கொலை செய்யப்பட்டார்” என்பதைக் குறிக்கும் அடையாளமாகும்.  சிலுவையில் இயேசு கிறித்து மட்டும் கொலை செய்யப்படவில்லை.  உரோமர்களின் ஆட்சிக் காலத்தில் மரணதண்டனையை நிறைவேற்றப் பயன்பட்ட கருவிகளில் சிலுவையும் ஒன்று.  அதனால் உரோமர்களால் ஏராளமானவர்கள் சிலுவையில் அடித்துக் கொல்லப்பட்டார்கள். 
            

உயிர்த்தெழுந்ததன்
அடையாளம்
சிலுவை இயேசு கிறித்து உயிர்த்தெழுந்ததைக் குறிக்கும் அடையாளம் ஆகாது.  எவ்வாறு எனில் இயேசு கிறித்து சிலுவையில் உயிர்த்து எழவில்லை.  இயேசு கிறித்து உயிர்த்து எழுந்ததைக் குறிக்கும் அடையாளம் வெறுமையான கல்லறையாகும்.
 
ஆகவே, இயேசு கிறித்து இறந்து உயிர் பெற்றார் என்பதை சிலுவை அடையாளம் குறிக்க இயலாது. 

இயேசு கிறித்து
  1. 1.   இறந்தார்
  2. 2.  உயிர்த்தெழுந்தார்
  3. 3. பாவத்தை நீக்கி மக்களை மீட்டுக் கொண்டார்

ஆகிய இந்த மூன்று கருத்துகளையும் குறிக்கும் அடையாளமே கிறித்துவின் நற்செய்தியை விளக்கும் அடையாளம் ஆகும்.  சிலுவை அடையாளத்தால் இந்த மூன்று கருத்துகளையும் குறிக்க இயலாது. 

(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய நூலில் எடுத்து பதியப்பட்டுள்ளது)

PDF இல் சேமிக்க‌

11.1.11

ஆரியர் என்பவர் ஓர் இனத்தவர் அல்லர்!



இந்துத்துவா உருவான வரலாறு – 4


ஆரியர்கள் ஓர் இனத்தவர்கள் அல்லர்; ஆரியம் என்பது ஒரு கூட்டமைப்பு

இந்து மதம் என்பது தமிழர் மதங்களாகிய சைவத்தையும் வைணவத்தையும் குறிக்கிறது என்பதை முந்தைய பதிவுகளில் கண்டோம். 

இந்துத்துவா என்றால் என்ன?
            இந்துத்துவா என்பது ஒரு மதம் இல்லை.  அது ஆரிய வாழ்க்கை முறையாகும். 

ஆரிய வாழ்க்கை முறை என்பது என்ன?
1.    ஆரியர் பிறப்பால் உயர்ந்தவர்
2.    ஆளுகை செய்வதற்கென்றே பிறந்தவர் ஆரியர்
3.    ஆரியர்களுக்குச் சேவை செய்வதையே தங்கள் பிறவிக் கடமையாகக் கொண்டவர் திராவிடர்
4.    ஆரியர்களை எதிர்க்கும் திராவிடர்கள் ஆரியரின் எதிரிகள் அல்லது தீண்டத்தகாதவர்கள்.  
என்பனவற்றை ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கை முறைதான் ஆரிய வாழ்க்கை முறையாகும்.  இதையே மனுநூல் வலியுறுத்துகிறது.  மனுநூலின் இக்கொள்கைக்கு ஆங்கிலேயர் கொடுத்த பெயர் தான் இந்துயிசம் அல்லது இந்துத்துவா என்பதாகும். 

ஆரியர்கள் என்னும் சொல் யாரைக் குறிக்கும்?
            இந்தியாவின் மீது படையெடுத்து வந்த
1.    பாரசீகர்   (கி.மு. ஆறாம் நூற்றாண்டு)
2.    கிரேக்கர்  (கி.மு. நான்காம் நூற்றாண்டு)
3.    சகர்           (கி.மு. இரண்டாம் நூற்றாண்டு)
4.    குசானர்    (கி.பி. முதல் நூற்றாண்டு)
5.    ஊணர்      (கி.பி. நான்காம் நூற்றாண்டு)
ஆகியோரும் வணிகத்திற்காக வந்த
6.    உரோமர் (கி.பி. நான்காம் நூற்றாண்டு)
                      ஆகிய அறுவரும் ‘ஆரியர்’ என்னும் பொதுப்பெயரில் ஒன்றிணைந்தனர்.  இவர்கள் தங்களுக்கென்று ஒரு மதம் இல்லாதவர்கள் ஆவர்.  ஆரியர் என்பது எந்த ஓர் இனத்தின் பெயரும் இல்லை.  இவர்கள் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் அபு மலையில் ஒன்றிணைந்து திராவிட அரசனாகிய அர்சவருத்தனைக் கொன்று திராவிட ஆட்சியைக் கைப்பற்றினர்.  கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை வட இந்தியாவின் பெரும்பகுதியைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர்.  அவர்கள் கைப்பற்றிய பகுதி ‘ஆரியவருத்தம்’ அல்லது ஆரிய நாடு என்று குறிக்கப்படுகிறது.

இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்த காரணங்கள் யாவை?
1.    இவர்கள் அனைவரும் வெள்ளை நிறத்தவர்
2.    இவர்கள் அனைவரும் வெளிநாட்டினர்
3.    தங்களால் படை எடுக்கப்பட்ட மக்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள்ளேயே வைத்திருக்க வேண்டிய கட்டாயம் உடையவர்கள். 
இவ்வாறு இவர்கள் ‘ஆரியவருத்தம்’ என்பதை உருவாக்கிய பிறகு, சட்டப் புத்தகமாகிய மனுநூலை உருவாக்கினார்கள்.  இந்த மனுநூலுக்குக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் ஆதிசங்கரரால் போலி ஆன்மீக விளக்கம் கற்பிக்கப்பட்டு மனு தரும சாத்திரம் ஆக்கப்பட்டது. 

(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகத்தின் கருத்துகள் - வரலாற்றுச்சான்றுள்ளவை)

PDF இல் சேமிக்க‌

9.1.11

இந்துத்துவா உருவான வரலாறு - 3



இந்துமதம் என்னும் பெயர் வந்த வரலாற்றுப் பின்னணி


கி.பி. 1750க்குப் பின்னர் ஆங்கிலேயர் இந்தியாவின் சில பகுதிகளைப் பிடித்து ஆளத் தொடங்கினர்.  அப்போது ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த இந்தியப் பகுதிகளுக்குத் தலைநகராகக் கல்கத்தா விளங்கியது.  ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்ட இந்தியப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய கடமை ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்டது.  அதனால் நீதிமன்றங்களை அமைத்தார்கள்.  நீதிமன்றங்களில் நீதி வழங்கச் சட்டம் தேவைப்பட்டது. 

ஆங்கிலேயர் ஆட்சி செய்த பகுதியில் வாழ்ந்த இந்தியர்களில், கிறித்தவர்களுக்கு நீதி வழங்க பைபிள் அடிப்படையிலான கிறித்தவச் சட்டம் (Christian Law) இருந்தது.  இசுலாமியர்களுக்கு நீதி வழங்க, குரான் அடிப்படையிலான இசுலாமியச் சட்டம்(­Islamic Law) இருந்தது.  ஆனால் கிறித்தவர், இசுலாமியர் அல்லாத இந்திய மக்களுக்கு நீதி வழங்க, சட்டப் புத்தகம் எதுவும் இல்லை.  இதனால் நீதி வழங்குவதில் பல இடையூறுகள் ஏற்பட்டன. 

இந்த நிலையில் கல்கத்தாவின் உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதியாக ஆங்கிலேயரான சர் வில்லியம் சோன்சு(Sir William Jones) அமர்த்தப்பட்டார். 

கல்கத்தாவில் இருந்த பிராமணர்கள், தந்திரமாக, மனுநூலை, சோன்சிடம் கொடுத்து அதுவே இந்திய மக்களின் சட்ட நூல் என அவரை ஏமாற்றி நம்ப வைத்தார்கள். 

அவர், பிராமணர்கள் கூறியதை நம்பி, சமற்கிருதத்தில் இருந்த மனுநூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.  மனுநூலின் அடிப்படையில, கிறித்தவர், இசுலாமியர் அல்லாத இந்திய மக்களுக்கான சட்டத்தை உருவாக்கி, அதற்கு இந்துச் சட்டம்(Hindu Law) எனப் பெயரிட்டார். 

இந்துச் சட்டம் உருவாக்குவதற்கு உதவிய மனுநூலின் கொள்கைகளுக்கு இந்துத்துவம் (Hinduism) என்னும் பெயரைக் கொடுத்தார்.  மனு நூலின் அடிப்படைக் கொள்கை சாதி ஏற்றத் தாழ்வுக் கொள்கை ஆகும். 

Hinduism அல்லது இந்துத்துவம் அல்லது இந்துத்துவா என்பது ஒரு மதம் இல்லை.  இது ஒரு வாழ்க்கை முறை.  ஆரிய வாழ்க்கை முறை ஆகும். 

ஆனால் Christian Law, Muslim Law, Hindu Law  என்று குறிப்பிடும்பொழுது Muslim, Christian என்ற பெயர்கள் மதங்களைக் குறிப்பதைப் போன்று Hindu என்னும் பெயரும் ஒரு மதத்தைக் குறிப்பதைப் போன்ற தவறான எண்ணத்தை இந்திய மக்கள் உள்ளங்களில் உருவாக்கி விட்டது.  இதன் காரணமாகக் கிறித்தவர், முசுலீம் அல்லாதவர் இந்து மதத்தினர் (Hindu Religion) என்னும் தவறான எண்ணத்தை அது ஏற்படுத்தி விட்டது.

இந்திய மதங்களில் ஏற்கெனவே சைவமும் வைணவமும் இந்துத்துவமாகிய சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கைக்கு அடிமைப்படுத்தப்பட்டிருந்தமையால் இந்த இரண்டு மதங்களுக்கும் பொதுப் பெயராகப் புதிதாக இந்து மதம்(Hindu Religion) என்னும் பெயர் உருவாகி, இந்திய மக்கள் மத்தியில் வழக்கில் வந்தது.  ஆகவே சோன்சால் உருவாக்கப்பட்ட Hinduism என்னும் பெயர் வேறு, அதைத் தவறாக மக்கள் புரிந்து கொண்டு அந்தத் தவற்றின் காரணமாகப் பெற்றெடுக்கப்பட்ட Hindu Religion என்னும் பெயர் வேறு.  

(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய ‘இந்துத்துவாவின் பிடியிலிருந்து இந்து மதத்தை விடுவிப்பது எவ்வாறு?’ என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது)
PDF இல் சேமிக்க‌