கீழே உள்ள இரண்டு கருத்துகளையும் படித்துப் பாருங்கள்! முதல் கருத்து சித்தர்களுள் ஒருவரான சிவவாக்கியருடைய கருத்தாகும். இரண்டாவது கருத்து தந்தை பெரியாருடைய கருத்தாகும். இரண்டிற்கும் என்ன வேறுபாடு?
ஈசனுக்கு உகந்தது எது?
‘நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாற்றியே
சுற்றி வந்து மொண மொணன்று சொல்லும் மந்திரமேதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
ஓசை பெற்ற கல்லை உடைத்து உருக்கி நீர் செய்கிறீர்
வாசலில் பதித்த கல்லை மழுங்கவும் மிதிக்கிறீர்
பூசை பெற்ற கல்லிலே பூவும் நீரும் சாற்றுகிறீர்.
ஈசனுக்குகந்த கல்லு இரண்டு கல்லுமல்லவே’
- சிவ வாக்கியர்
ஆத்திகர்களே எது நல்லது?
கல்லில் தெய்வம் இருப்பதாகக் கருதி, அதற்கு ஒரு கோவில் கட்டி, அந்த சாமியை வணங்க தரகர் ஒருவரையும் வைத்து அந்த கல்லுச்சாமிக்கு மனிதனுக்கு செய்யும் அல்லது மனிதன் தான் செய்து கொள்ளும் மாதிரியாகவெல்லாம் செய்து அதற்கு வீணாக பணத்தை பாழாக்கி நேரத்தை வீணாக்குவது நல்லதா?
அல்லது மனிதனிலே தெய்வம் இருப்பதாகக் கருதி அதற்கு அந்த மனிதனையே தரகராக வைத்து தனக்கு வேண்டியது போலவும் தான் பிறர் தன்னிடத்தில் நடக்க வேண்டுமென்று கருதுவது போலவும் அந்த மனிதனுக்கு செய்து அவனிடத்தில் நடந்து கொள்வது நல்லதா?
- தந்தை பெரியார் - குடி அரசு – கேள்விகள் – 21.12.1930
0 கருத்துகள்:
Post a Comment