27.5.11

அரசியல் கட்சிகளுக்குக் கடிதம் - 1

கலைஞர் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும்
அனுப்பபப்பட்ட முதல் கடிதம்


தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழர் வழிபாடு, தமிழர் சமயம் முதலியன பற்றித் தமிழ் மக்களின் உள்ளங்களில் புகுத்தப்பட்டிருக்கும் தாழ்வு மனப்பான்மையை நீக்குகின்ற தமிழ் இன விடுதலைக்கான - சாதி, மதம், கட்சி, ஆத்திகம், நாத்திகம் முதலிய அனைத்துப் பிரிவுகளையும் கடந்த  
அனைத்துத் தன்மானத் தமிழர்களின்கூட்டமைப்பு

ஒருங்கிணைப்பாளர்,
பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் M.A., Ph.D., நாள் : 21-04-2011

பதிவு அஞ்சல் அனுப்பப்பட்டு கட்சித்தலைவர்களால் பெற்றுக் கொள்ளப்பட்டது.

பெறுநர்

தமிழ் இனத்தின் மீது அக்கறை கொண்டு தமிழ் இனத்தின் நலன் கருதிச் செயல்படுவதாக நம்பப்படும்
தமிழ் நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும்

டாக்டர். கலைஞர் அவர்கள்,
தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா அறிவாலயம்,
அண்ணா சாலை, சென்னை-600 018.

அன்பின் ஐயா,

வணக்கம்.

தமிழ் இனப் பகைவர்களால் திட்டமிட்டு அழிக்கப்படுகின்ற தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் சமயம் பாதுகாக்கப்பட

''தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்”

என்பதை இந்திய இறையாண்மைக்கு ஊறு ஏற்படா வண்ணம் வலியுறுத்தி 30-04-2011இல் நடத்தப்பட இருக்கும் எங்கள் ஆர்ப்பாட்டம் குறித்த துண்டு வெளியீடு ஒன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

தாங்கள் தயவு கூர்ந்து இத்துண்டு வெளியீட்டின் கருத்துகளை ஆழ்ந்து நோக்கி, தமிழ் நாட்டிற்குச் சொந்தமானவர்களும், தமிழ் நாட்டில் மிகப் பெரும்பான்மையாக வாழுகின்றவர்களுமாகிய தமிழ் இனத்தினரின் நலன் கருதித் தங்கள் கட்சி செயல்படும் தன்மையை நாங்கள் புரிந்து கொள்ளுவதற்கு வாய்ப்பாக, எங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு உங்கள் ஆதரவை எங்களுக்குத் தெரிவிக்க உங்களை அன்புடன் வேண்டுகின்றோம்.

ஆதரவுக் கடிதங்கள் ஆர்ப்பாட்டத்தின்பொழுது வாசித்துக் காண்பிக்கப்படும்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உங்கள் கட்சி ஆதரவு தெரிவிக்க இயலா நிலை இருக்குமானால் அதற்கான காரணங்களை நாங்கள் அறிந்து அதற்கேற்ப எங்கள் செயல் திட்டங்களை நாங்கள் வகுத்துக் கொள்ள எங்களுக்குத் துணை புரிய உங்களை அன்புடன் வேண்டுகின்றோம். ஒன்று எங்களுக்கு எழுதலாம் அல்லது எங்களுடன் கலந்து பேசலாம்.எவ்விதப் பதிலும் எழுதாமல் அமைதியாயிருக்கும் கட்சிகள், தமிழ் இனத்திற்கு எதிரான நிலைப்பாட்டையுடையவை அவை என்பதை விளக்குவதாக அமையும் என்பது வெளிப்படை.

நன்றி.

தங்கள் அன்புள்ள,

(மு. தெய்வநாயகம்)

ஒருங்கிணைப்பாளர்.

இணைப்பு: 1. ஆர்ப்பாட்டம் பற்றிய துண்டு அறிக்கை

2. தேர்தல் பரப்புரைக்கான துண்டு அறிக்கை

278, கொன்னூர் நெடுஞ்சாலை, அயன்புரம், சென்னை - 600 023. +9144-26743842; 9444817394; 9840003842 மின்னஞ்சல்: ­ tamilarsamayam2010@gmail.com
PDF இல் சேமிக்க‌

25.5.11

"தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்” - ஆர்ப்பாட்டம்


அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு,தமிழர் சமயம் பாதுகாக்கப்பட
 ''தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்”  என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
நேரம் :  30-04-2011 சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை.
இடம் : சென்னை பொது மருத்துவமனைக்கு எதிரிலுள்ள நினைவு அரங்கத்தின்  (மெமோரியல் ஹால்) முன்னர்.
அழிந்து வரும் தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் சமயம் அழியாமல் பாதுகாக்கப்படுவதன் முதல் முயற்சியாக, இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்பட்டபொழுது தமிழ் இனத்திற்காகக் குரல் கொடுத்து கைது செய்யப்பட்ட வெவ்வேறு அணிகளையும் வெவ்வேறு கட்சிகளையும் சார்ந்த 46 வேட்பாளர்கள் வெற்றி பெறுமாறு அவர்கள் நிற்கும் தொகுதிகளுக்குச் சென்று தேர்தல் பரப்புரை நிகழ்த்தித் திரும்பியுள்ளோம். இதன் தொடர்ச்சியான இரண்டாம் முயற்சியாக
''தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்”
என்னும் தலைப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது அன்று. இந்தியா மொழி வழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு, அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மொழி பேசுவோரே ஆட்சி செய்து வருகின்றனர். இதனால் தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என்னும் கோரிக்கை நியாயமான ஒன்றே ஆகும். மேலும்,  இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களில் தமிழர்கள் எத்தனை பேர் அமைச்சராக்கப்பட்டிருக்கின்றார்களோ அத்தனை பேர் அந்தந்த மாநிலங்களைச் சார்ந்தவர்கள் தமிழ் நாட்டில் அமைச்சராக்கப்படலாம் என்னும் கருத்து இத்துடன் இணைத்துக் கூறப்படுகிறது.
அவ்வாறு மற்ற மாநிலங்களில் தமிழர்கள் அமைச்சராக்கப்படாத நிலையில் தமிழ் நாட்டில் தமிழரல்லாத  அம்மாநிலத்தவரை அமைச்சராக்கும் கட்சிகள்  முற்றிலும் தமிழ் இனத்தை அடிமைப்படுத்தும் நோக்கம் கொண்ட, தமிழர் அல்லாத, தமிழ் இனத்திற்கு எதிரான அந்நியர்களின் கட்சிகள் என்றும், தன்மானத் தமிழர்கள் அவற்றிலிருந்து வெளியேற வேண்டும் என்றும், இந்த நிலையே தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் சமயம் காக்கப்படுவதற்கு ஏற்ற நிலையாகும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
காரணம் தமிழ் இனப் பகைவர்களால் தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் சமயம் ஆகியவை திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன என்பதை எவரும் மறுத்தல் இயலாது.
தமிழ் இனம் :
இலங்கையில் தமிழ் இனம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. தமிழ் நாட்டில், அவர்களுக்காக நடத்தப்பட்ட   தமிழர்களின் அறவழிப் போராட்டங்கள் மதிக்கப்படவில்லை. தமிழ் இனம் இன்றும் முள்வேலியில் அடைக்கப்பட்டுத் துன்புறுத்தப்படுகிறது.
தமிழக மீனவர்கள் திட்டமிட்டு வேட்டையாடப்பட்டு வருகின்றார்கள். தமிழ் நாட்டில் பிற தமிழர்களும் வேட்டையாடப்படும் காலம் அதிகத் தூரத்தில் இல்லை என்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.
தமிழ் மொழி:
உலகில் அழிந்து வரும் மொழிகளில் ஒன்றாகத் தமிழ் மொழி குறிக்கப்படுகிறது. தமிழகத்திலும் திட்டமிட்டு, தமிழ் மொழி சிதைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வாழும் அந்நியர்களால் தமிழ் மொழி கீழான 'நீச மொழிஃ என இகழப்படுகிறது.
தமிழர் பண்பாடு:
தமிழர் பண்பாட்டுக்கு எதிராக நடிகை குஷ்பு கருத்து தெரிவித்தார். அதைத் தமிழ் உணர்வாளர்கள் வன்மையாக எதிர்த்தனர். ஆனால், குஷ்புவே தேர்தல் பரப்புரைக்குச் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டார். எதிர்த்தவர்களும் அடங்கிப் போக வேண்டிய சிக்கலான நிலை ஏற்படுத்தப்பட்டது. தமிழர் பண்பாடு நாள்தோறும் சிதைக்கப்பட்டு வருகிறது.
தமிழர் சமயம்:
சைவம், வைணவம் ஆகிய இரண்டும் தமிழ் நாட்டில் தோன்றிய பக்தி இயக்கத்தின் பயனாகத் தமிழகத்தில் வளர்ந்த, தமிழர்களுக்குச் சொந்தமான தமிழர் சமயங்கள் என்பது வரலாறு. ஆனால்,  இடைக்காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட அந்நியர் ஆட்சியின் காரணமாக இப்பொழுதும் தமிழ் நாட்டிலுள்ள தமிழர் சமயக் கோவில்கள் அந்நியர் ஆதிக்கத்தில் தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் எனச் சட்டம் கொண்டு வந்து இரண்டாண்டு காலப் பயிற்சி கொடுத்து அர்ச்சகர் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஆனால், தமிழ் நாட்டில், தமிழர் கட்டிய, தமிழர்களுக்குச் சொந்தமான தமிழர் சமயக் கோவில் கருவறையில் கால்வைக்கத் தகுதியில்லாத கீழான நீச இனத்தினர் என, தமிழ் இன அர்ச்சகர்கள் அந்நியர்களால் வெளியே இப்பொழுது நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள்.
புதைக்கப்பட்டுக் கிடக்கும் தமிழர் ஆன்மவியல்:
தமிழர் சமயத்தின் மணிமுடியாக விளங்குவது தமிழர் ஆன்மவியல். ஆறாவது அறிவுக்குக் காரணமான ஆன்மாவைப் பற்றிய கல்வி ஆன்மவியல். உலகிலுள்ள மொழிகளில் மனிதனின் உடலைப் பற்றிய கல்வியாகிய அறிவியல், மனிதனின் உயிரைப் பற்றிய கல்வியாகிய மெய்யியல், மனிதனைப் படைத்ததாக நம்பப்படும் இறைவனைப் பற்றிய கல்வியாகிய இறையியல் ஆகிய மூன்றும் இருக்கின்றன. ஆனால், இந்த மூன்றையும் ஆராயும் மனிதனின் ஆறாவது அறிவுக்குக் காரணமான ஆன்மாவைப் பற்றிய கல்வியாகிய ஆன்மவியல் தமிழ் மொழியில் மட்டுமே இருக்கிறது.
 மற்ற உயிரினங்களுக்கு இல்லாத மனிதனுக்கே உரிய ஆறாவது அறிவைப் பற்றிய இலக்கணம் உலக மொழிகளில் தமிழ் மொழியில் மட்டுமே இருப்பதால்  ஆறாவது அறிவைப் பற்றிய இலக்கணத்தின் வழியாக ''கடவுள் இருக்கின்றார்" என்று அறிவியல் வழியில் நிலை நாட்டுவது தமிழர் ஆன்மவியல்.
 தமிழ் நாட்டில் மாறி மாறி நடைபெற்று வரும் அந்நியர் ஆட்சிகளால்  தமிழர் ஆன்மவியல் புதையுண்டு கிடக்கிறது.
அடிமையாய் இருப்பதில் சுகம் காணும் ஐந்தறிவுத் தமிழர்:
ஆறாவது அறிவை அறிய இயலாத தமிழர்கள்அந்நியர்களால் ஐந்தறிவு படைத்த ஆடுமாடுகளைப் போன்று அடிமைகளாக வைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய தமிழர்கள் ஆன்மவியலை அறியாமலும் ஆன்மவியலின் சிறப்பை உணராமலும் அந்நியர்களுக்கு அடிமையாய் இருப்பதிலும், அந்நியர்களைத் தலைமேல் வைத்துச் சிறப்பிப்பதிலும் சுகம் காணும் அடிமைகளாக இருக்கின்ற காரணத்தால், தமிழ் இனமும், தமிழ் மொழியும், தமிழர் பண்பாடும், தமிழர் சமயமும் அந்நியர்களால் அழிக்கப்பட்டு வருகின்றன.
 ஆறறிவுள்ள தன்மானத்தமிழர்
இந்நிலையில் தமிழர்களை மென்மேலும் பிளவுபடுத்தும் சாதி, மதம், கட்சி, அணி என்னும் கட்டுகளைத் தாண்டி, அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் சமயம் ஆகிய இவற்றைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயக் கடமை, ஆறறிவுள்ள தன்மானத் தமிழர்களுக்கு இருக்கிறது என்பதை நினைவுபடுத்துகின்றோம். ஆறறிவுள்ளவர்கள் தாங்கள் தெளிவாக அறிந்து ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயங்கமாட்டார்கள் என்பது வரலாறு.
இந்த நிலையில் அனைத்துத் தன்மானத் தமிழர்களும்
''தமிழ் நாட்டைத் தமிழரே  ஆள வேண்டும்” என்னும்
ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்டு தங்கள் பிறவிக் கடமையை நிறைவேற்ற உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
இப்படிக்கு
ஒருங்கிணைப்பாளர்,
அனைத்துத் தன்மானத் தமிழர்களின் கூட்டமைப்பு.
தொடர்பு முகவரி :
பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம்
ஒருங்கிணைப்பாளர், அனைத்துத் தன்மானத் தமிழர்களின் கூட்டமைப்பு,
278, கொன்னூர் நெடுஞ்சாலை, அயன்புரம், சென்னை- 23. ( 044-26743842; 9840003842 ; 9444817394)
PDF இல் சேமிக்க‌

23.5.11

தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் – ஏன்?


தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என்று சொன்னால் இதுவரையிலும் இப்போதும் தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளவில்லையா?
இல்லை.

இல்லையா? என்ன இப்படிச் சொல்கிறீர்கள்?
ஆம்.  சாளுக்கிய அரசனான முதலாம் குலோத்துங்கச் சோழன் முதல் தமிழர்கள் தமிழரல்லாத வேற்றவர்களால் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாக ஆளப்பட்டு வருகிறார்கள்.

வேற்றவர்களால் ஆளப்பட்டால் என்ன?
ஆளப்பட்ட வேற்றவர்களால் தமிழ் இனத்தின் சிறப்புகள் அனைத்தும் சிதைக்கப்பட்டு, அழியும் நிலைக்குத் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது.

அப்படி என்ன மோசமான நிலையை அடைந்துவிட்டோம் என்று சொல்கிறீர்கள்?
ஒன்றா இரண்டா, இலங்கையில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலை, இன்றும் அங்குள்ள தமிழர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் நிலை, தமிழக மீனவர்கள் வேட்டையாடப்படும் கொடுமை, தமிழ் அருச்சகர்கள் கருவறைக்குள் நுழைய முடியாத அவலம் என நீண்ட பட்டியலே சொல்லலாம்.  நம்முடைய நிலை எப்படி இருக்கிறது என்பதை http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14168:q-&catid=902:2009-08-16-17-58-44&Itemid=268 என்னும் இணைப்பில் தமிழ் இனம், தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் சமயம், தமிழர் ஆன்மவியல் ஆகிய தலைப்புகளில்   படித்துப் பாருங்கள்;  உண்மை விளங்கும்.

நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்!  அதற்காகத் தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று சொல்வதா?  நல்லவர் ஆள வேண்டும் என்று சொல்லுங்கள். அதை விடுத்துத் தமிழரே ஆள வேண்டும் என்று சொல்வது இன வேற்றுமை போல் அல்லவா இருக்கிறது?
நல்லவரே ஆள வேண்டும் என்று சொல்லும் நாம் ஏன் வெள்ளையர்களை நாட்டை விட்டுத் துரத்தினோம்?  நல்லவர்கள் தாம் நாட்டை ஆள வேண்டும் என்றால் வெள்ளையர்களில் நல்லவர் ஒருவர் கூட இல்லையா?  நம்மை நாமே ஆள வேண்டும்;  அப்போது தான் நம்முடைய இனமும் மொழியும் பண்பாடும் காக்கப்படும் என்னும் நேர்ச்சிந்தனை தானே இந்திய விடுதலைப்போராட்டத்தின் அடிப்படையாக அமைந்தது.

வெள்ளையர்கள் வேற்றினத்தார்!  அதனால் அவர்களை எதிர்த்துப் போராடினோம்.  ஆனால் இங்கு தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியன பேசுவோர் ‘மதராசு மாகாணமாக’ இருந்த போது நம்முடன் இருந்தவர்கள் இல்லையா?
நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வோம்.  ‘மதராசு மாகாணத்தை’ச் சேர்ந்த நம்முடன் இருந்தவர்கள் பிறகு ஏன் மொழிவழி மாநிலம் கேட்டுப் போராடினார்கள்?  நம்முடனே இருந்திருக்கலாமே!  தமிழர்கள் ஒன்றும் மொழிவழி மாநிலம் கேட்டுப் போராடவில்லை.  நம்முடன் இருந்த பிறமொழிக்காரர்கள் தாம் மொழிவழி மாநிலம் கேட்டுப் போராடினார்கள்.  அவர்களுடைய போராட்டம் சரியானது என்று நாம் ஏற்றுக்கொள்கிறோம்.  அப்படியானால் தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என்று சொல்லும் நம்முடைய கருத்தும் சரியானது தானே!

நீங்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக ஒன்றும் பேசவில்லையே!
இல்லை.  ஒன்றுபட்ட இந்தியாவில் வாழும் நாம், தமிழர் அல்லாதவர்களை வெறுக்க வேண்டிய தேவை இல்லை.  தமிழ் இனத்தின் பாதுகாப்பை முன்னிட்டு தமிழரல்லாதவர் தமிழ் நாட்டில் வாழலாம்;  ஆனால் தமிழனை ஆள நினைக்கக்கூடாது;  அந்தந்த மாநிலத்தை அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆள வேண்டும் என நினைப்பது இயல்பான ஒன்றேயாகும்.  இந்த உணர்வை மற்றவர்கள் மதிக்க வேண்டும்.  அவ்வாறு மதிக்கும்பொழுது மட்டுமே இந்திய ஒற்றுமையுணர்வு நிலை நிற்கும்.

என்னுடைய தோழி ஒருத்தி வீட்டில் மட்டும் தெலுங்கு பேசுபவள்.  ஆனால் அவள் தன்னை ஒரு தமிழச்சியாகவே முன்னிறுத்துபவள்.  அவளைத் தமிழச்சி என்று சொல்வதா?  தெலுங்கு என்று ஒதுக்கி விடுவதா?
நீங்களே சொல்கிறீர்கள் – அவர் தெலுங்கு பேசுபவர் என்று!  பின்னர் அவரைத் தெலுங்கர் என்று தானே சொல்ல முடியும்.  அதே சமயம் ‘தெலுங்கு என்று ஒதுக்கிவிடச் சொல்லவில்லை’.  அவருடைய அடையாளம் தெலுங்கு அவ்வளவுதான்!  பிற இனத்தாரிடம் வேறுபாட்டையும் வெறுப்பையும் காட்டி ஒதுக்குவது என்பது  தமிழ்ப்பண்பாட்டுக்கு முற்றிலும் எதிரானது.

தமிழ்நாட்டில் தமிழர்களுக்குப் போராடிய தலைவர்களிலேயே பெரியார் போன்ற சிலரது தாய்மொழி தமிழ் இல்லை.  அதற்காக அவர்களை ஒதுக்கி வைக்கச் சொல்கிறீர்களா?
தந்தை பெரியார் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழர்களை மீட்டெடுக்க வந்த ஒரு விடிவெள்ளி!  அதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை.  அடிமைகளாக இருந்த தமிழர்களுக்குத் தன்மான உணர்வு ஊட்டியவர் அவர்.  பெரியார் தமிழர்களுக்குத் தன்மானம் ஊட்டிட இயக்கம் கண்டு செயல்பட்டாரே தவிர ஆட்சியைப் பிடித்து ஆள வேண்டும் என்று நினைக்கவில்லை.  அதனால் தான் அவரைப் பெரியார் என்று அழைத்து மகிழ்ந்தோம்.

தந்தை பெரியாரைப் போல் இல்லாமல், தமிழர்கள் நலன் என்பதைப் புறந்தள்ளி ஆட்சியைப் பிடிக்கும் ஆசையை முன்னிறுத்துபவர்கள் தமிழர்களை ஆளக்கூடாது என்று தான் சொல்கிறோம்.

எதை வைத்துத் தமிழர் என்று வரையறுப்பது?
ஒருவர் ஆங்கிலேயர் என்றும் இத்தாலியர் என்றும் எதை வைத்து வரையறுக்கிறீர்கள்?  அதே வரையறை தான் தமிழர் என்பதற்கும் பொருந்தும்!   இங்குள்ள தமிழர்கள் சிறப்பாக ஆங்கிலம் பேசினால் ஆங்கிலேயர் ஆகிவிடுவார்களா என்ன?

கருணாநிதி, செயலலிதா, விசயகாந்து ஆகிய மூவரும் வேற்றுமொழிக்காரர்கள் என்று சொல்கிறீர்கள்.  ஆனால் கருணாநிதியின் சொந்த ஊர் திருக்குவளை என்று சொல்கிறார்கள்.  இதை எப்படி அணுகுவது?
உங்கள் குடும்பத்தில் ஒருவர் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஏதோ ஒரு வெளிநாட்டில் குடியேறி விட்டார்.  இப்போது அவருடைய வழியில் வருபவர்களை ‘இந்திய வம்சாவழி’ என்று தானே சொல்கிறார்கள்.  நீங்களும் அவர்களை உறவினர்கள் என்று ஏற்றுக்கொள்கிறீர்கள் அல்லவா?  அதே போல் தான் இங்கு வந்து பல ஆண்டுகளுக்கு முன்னரே குடியேறினாலும் அவர்களுடைய அடையாளம் எதுவோ அதை வைத்துத் தான் நாமும் சொல்கிறோம்.

மராட்டியத்தில் இருந்து தமிழர்கள் அடித்துத் துரத்தப்படுவதற்குக் காரணமாக இருந்த பால் தாக்கரேவை ‘இன வெறி பிடித்தவர்’ என்று சொல்லும் நாம் இப்படித் ‘தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்’ என்று சொல்வது சரியாகப்படுகிறதா?
பால் தாக்கரே போன்றவர்கள் மராட்டியர்களைத் தவிர வேற்றினத்தார் மராட்டியத்தில் வாழவே கூடாது என்று கூறுகிறார்கள்.  அதை ‘இன வெறி’ என்று தான் சொல்ல முடியும்; சொல்ல வேண்டும்.  ஆனால் நம்முடைய போராட்டம் அதுவன்று!  வேற்றுமொழிக்காரர்கள் இங்கு வந்து வாழவே கூடாது என்று நாம் எப்போதும் சொல்வதில்லை; அப்படிச் சொல்வது சரியுமில்லை.  ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று நமக்குச் சொல்லிக்கொடுத்தது தமிழ் என்பதை மறந்து விடாதீர்கள்.  தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்ப்பண்பாடு, தமிழர் சமயம், தமிழர் ஆன்மவியல் ஆகியன முன் எப்போதும் இல்லாத அளவு நசுக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றன;  இவை அனைத்தும் மீட்டெடுக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன.  ஒட்டுமொத்தமாகத் ‘தமிழ்’ என்னும் அடையாளத்தையே அழித்து விடும் சூழ்ச்சி நடைபெற்று வரும் காலம் இது!  இப்படிப்பட்ட சூழலில் இவற்றை எல்லாம் உணர்ந்து அச்சூழ்ச்சியை முறியடிக்கும் பாதுகாப்புக் கேடயமாகத் தான் நாம் ‘தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்’ என்று சொல்கிறோம்.  யார் வேண்டுமானாலும் இங்கு வந்து வாழட்டும்!  ஆனால் தமிழ்நாட்டைத் தமிழர் ஆளட்டும் என்பது தான் நம்முடைய நிலைப்பாடு ஆகும்.

ஓர் எடுத்துக்காட்டுக்குக் கேட்கிறேன்.  இப்போது ஆந்திரத்தில் தமிழர்கள் இருவரை அமைச்சராக்கியிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  அப்போது என்ன செய்வீர்கள்?
ஒன்றும் சிக்கல் இல்லை. நாமும் ஆந்திரத்தைச் சேர்ந்த இருவர் இங்கு அமைச்சராக்கப்படலாம் என்பதை வரவேற்போம்.  இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களில் தமிழர்கள் எத்தனை பேர் அமைச்சராக்கப்பட்டிருக்கின்றார்களோ அத்தனை பேர் அந்தந்த மாநிலங்களைச் சார்ந்தவர்கள் தமிழ் நாட்டில் அமைச்சராக்கப்படலாம் என்னும் கருத்தையும் சேர்த்துத் தான் சொல்கிறோம்.

இலங்கையில் பெரும்பான்மைச் சிங்களர்களை எதிர்த்துத் தனிநாடு கேட்டுப் போராடுகிற நாம் இங்கு பெரும்பான்மையாக இருக்கின்ற தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று சொல்வது சரியாகுமா?
இலங்கையில் தமிழர்களுக்கு உரிய உரிமைகளைக் கொடுத்திருந்தால் தனிநாடு கேட்கும் போராட்டமே வந்திருக்காது.  அடிப்படை மனித உரிமைகளைக் கூட நசுக்கியதால் தானே தந்தை செல்வா காலத்தில் தொடங்கிய அறவழிப் போராட்டம் பின்னர் ஆயுதப் போராட்டமாக மாறும் அளவு நிலை வந்தது!  இங்கு நாம் எம்மொழிக்காரர்களின் வாழ்வுரிமையையும் பறிக்கப்போவதில்லை;  தமிழகத்தில் வாழலாம்; ஆள வேண்டாம் என்பது தான் நம்முடைய வேண்டுகோள் ஆகும்.

இன்னும் சொல்லப் போனால், தாய்த் தமிழகம் தலை நிமிர்ந்து நின்றால் தான் இலங்கைத் தமிழினம் உட்பட உலகத் தமிழினத்துக்குப் பாதுகாப்பாகத் தமிழகம் விளங்கும்.  தாய்த் தமிழகம் வேற்றவரிடம் அடிமைப்பட்டுக் கிடக்குமானால், உலகத் தமிழ் இனம் முழுவதும் கேட்பாரற்று நசுங்கி அழியும் நிலையை அடையும்.  அத்துடன் இலங்கையில் இனித் தமிழ் இனமும் சிங்கள இனமும் இணைந்து வாழ்தல் இயலாது.  அடிமைப்பட்டு வாழ விரும்பாத தமிழர்கள் அழிக்கப்படுவது இயல்பு.  இதனால் இலங்கையின் நிலையான அமைதிக்குத் தமிழ் ஈழம் தவிர வேறு வழியில்லை.

விடுதலைப்புலிகள் தமிழ் ஈழத்திற்காகப் போராடினார்கள்; வெற்றி பெற இயலவில்லை.  இனித் தாய்த் தமிழகத்தின் துணை இல்லாமல் தமிழ் ஈழம் மலர முடியாது.

ஒருபக்கம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பேசிக்கொண்டு இன்னொரு பக்கம் ‘தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்’ என்று சொல்வது முரண் போலத் தோன்றுகிறதே?
நம்முடைய குடும்பத்தின் தலைவராக நாம் தாமே இருக்க முடியும்!  வருகின்ற உறவினர்களுக்கு உரிய மதிப்புக் கொடுத்துத் தங்க வைப்போம்;  அதற்காகக் குடும்பத்தலைவராகவா ஆக்க முடியும்?

இப்போது இந்தக் கருத்தை முன்னெடுப்பதன் நோக்கம் என்ன?
எப்படி ஒடுக்கப்படுகிறார்களோ அவ்வகையில் தான் மக்கள் ஒடுக்கத்திற்கு எதிராக அணி திரள்வார்கள்.  நாம் அனைவரும் தமிழினம் என்பதால் தான் ஒடுக்கப்படுகிறோம்.  எனவே தமிழர்களாக அணி திரள்வது என்பது தான் இயல்பானது.  அப்படி அணி திரண்டு போராடுவதற்கு நம்முடைய இனத்தைச் சார்ந்த ஒருவர் நம்முடைய தலைவராக வருவது தான் பொருத்தமாக இருக்கும். அப்போது தான் தமிழர் என்னும் காரணத்திற்காக மீனவர்கள் கொல்லப்படுவது, அரசிடம் உரிய பயிற்சி பெற்ற அருச்சகர்கள், தமிழர் என்னும் காரணத்திற்காகக் கோவில் கருவறைக்குள் கால் வைக்கத் தகுதியில்லாதவர்கள் என்னும் நிலை இருப்பது போன்ற பல கொடுமைகள் மறையும்; அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் சமயம், தமிழர் ஆன்மவியல் ஆகியன அழியாமல் பாதுகாக்கப்படும்.  எனவே தான் ‘தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்’ என்று சொல்கிறோம்.

துணை நின்ற படைப்புகள்:
1. அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?,  பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம், உலகத்தமிழர் ஆன்மவியல் இயக்கம், அயன்புரம், சென்னை-23.
2. உலக சமயங்களை ஒன்றிணைக்கும் தமிழர் சமயமும் தமிழர் ஆன்மவியலும், பேராசிரியர் முனைவர் மு.தெய்வநாயகம், உலகத்தமிழர் ஆன்மவியல் இயக்கம், அயன்புரம், சென்னை-23
3. தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் – ஆர்ப்பாட்டம், http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14168:q-&catid=902:2009-08-16-17-58-44&Itemid=268 , கீற்று இணையத்தளம்.
PDF இல் சேமிக்க‌