25.5.11

"தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்” - ஆர்ப்பாட்டம்


அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு,தமிழர் சமயம் பாதுகாக்கப்பட
 ''தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்”  என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
நேரம் :  30-04-2011 சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை.
இடம் : சென்னை பொது மருத்துவமனைக்கு எதிரிலுள்ள நினைவு அரங்கத்தின்  (மெமோரியல் ஹால்) முன்னர்.
அழிந்து வரும் தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் சமயம் அழியாமல் பாதுகாக்கப்படுவதன் முதல் முயற்சியாக, இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்பட்டபொழுது தமிழ் இனத்திற்காகக் குரல் கொடுத்து கைது செய்யப்பட்ட வெவ்வேறு அணிகளையும் வெவ்வேறு கட்சிகளையும் சார்ந்த 46 வேட்பாளர்கள் வெற்றி பெறுமாறு அவர்கள் நிற்கும் தொகுதிகளுக்குச் சென்று தேர்தல் பரப்புரை நிகழ்த்தித் திரும்பியுள்ளோம். இதன் தொடர்ச்சியான இரண்டாம் முயற்சியாக
''தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்”
என்னும் தலைப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது அன்று. இந்தியா மொழி வழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு, அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மொழி பேசுவோரே ஆட்சி செய்து வருகின்றனர். இதனால் தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என்னும் கோரிக்கை நியாயமான ஒன்றே ஆகும். மேலும்,  இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களில் தமிழர்கள் எத்தனை பேர் அமைச்சராக்கப்பட்டிருக்கின்றார்களோ அத்தனை பேர் அந்தந்த மாநிலங்களைச் சார்ந்தவர்கள் தமிழ் நாட்டில் அமைச்சராக்கப்படலாம் என்னும் கருத்து இத்துடன் இணைத்துக் கூறப்படுகிறது.
அவ்வாறு மற்ற மாநிலங்களில் தமிழர்கள் அமைச்சராக்கப்படாத நிலையில் தமிழ் நாட்டில் தமிழரல்லாத  அம்மாநிலத்தவரை அமைச்சராக்கும் கட்சிகள்  முற்றிலும் தமிழ் இனத்தை அடிமைப்படுத்தும் நோக்கம் கொண்ட, தமிழர் அல்லாத, தமிழ் இனத்திற்கு எதிரான அந்நியர்களின் கட்சிகள் என்றும், தன்மானத் தமிழர்கள் அவற்றிலிருந்து வெளியேற வேண்டும் என்றும், இந்த நிலையே தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் சமயம் காக்கப்படுவதற்கு ஏற்ற நிலையாகும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
காரணம் தமிழ் இனப் பகைவர்களால் தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் சமயம் ஆகியவை திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன என்பதை எவரும் மறுத்தல் இயலாது.
தமிழ் இனம் :
இலங்கையில் தமிழ் இனம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. தமிழ் நாட்டில், அவர்களுக்காக நடத்தப்பட்ட   தமிழர்களின் அறவழிப் போராட்டங்கள் மதிக்கப்படவில்லை. தமிழ் இனம் இன்றும் முள்வேலியில் அடைக்கப்பட்டுத் துன்புறுத்தப்படுகிறது.
தமிழக மீனவர்கள் திட்டமிட்டு வேட்டையாடப்பட்டு வருகின்றார்கள். தமிழ் நாட்டில் பிற தமிழர்களும் வேட்டையாடப்படும் காலம் அதிகத் தூரத்தில் இல்லை என்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.
தமிழ் மொழி:
உலகில் அழிந்து வரும் மொழிகளில் ஒன்றாகத் தமிழ் மொழி குறிக்கப்படுகிறது. தமிழகத்திலும் திட்டமிட்டு, தமிழ் மொழி சிதைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வாழும் அந்நியர்களால் தமிழ் மொழி கீழான 'நீச மொழிஃ என இகழப்படுகிறது.
தமிழர் பண்பாடு:
தமிழர் பண்பாட்டுக்கு எதிராக நடிகை குஷ்பு கருத்து தெரிவித்தார். அதைத் தமிழ் உணர்வாளர்கள் வன்மையாக எதிர்த்தனர். ஆனால், குஷ்புவே தேர்தல் பரப்புரைக்குச் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டார். எதிர்த்தவர்களும் அடங்கிப் போக வேண்டிய சிக்கலான நிலை ஏற்படுத்தப்பட்டது. தமிழர் பண்பாடு நாள்தோறும் சிதைக்கப்பட்டு வருகிறது.
தமிழர் சமயம்:
சைவம், வைணவம் ஆகிய இரண்டும் தமிழ் நாட்டில் தோன்றிய பக்தி இயக்கத்தின் பயனாகத் தமிழகத்தில் வளர்ந்த, தமிழர்களுக்குச் சொந்தமான தமிழர் சமயங்கள் என்பது வரலாறு. ஆனால்,  இடைக்காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட அந்நியர் ஆட்சியின் காரணமாக இப்பொழுதும் தமிழ் நாட்டிலுள்ள தமிழர் சமயக் கோவில்கள் அந்நியர் ஆதிக்கத்தில் தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் எனச் சட்டம் கொண்டு வந்து இரண்டாண்டு காலப் பயிற்சி கொடுத்து அர்ச்சகர் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஆனால், தமிழ் நாட்டில், தமிழர் கட்டிய, தமிழர்களுக்குச் சொந்தமான தமிழர் சமயக் கோவில் கருவறையில் கால்வைக்கத் தகுதியில்லாத கீழான நீச இனத்தினர் என, தமிழ் இன அர்ச்சகர்கள் அந்நியர்களால் வெளியே இப்பொழுது நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள்.
புதைக்கப்பட்டுக் கிடக்கும் தமிழர் ஆன்மவியல்:
தமிழர் சமயத்தின் மணிமுடியாக விளங்குவது தமிழர் ஆன்மவியல். ஆறாவது அறிவுக்குக் காரணமான ஆன்மாவைப் பற்றிய கல்வி ஆன்மவியல். உலகிலுள்ள மொழிகளில் மனிதனின் உடலைப் பற்றிய கல்வியாகிய அறிவியல், மனிதனின் உயிரைப் பற்றிய கல்வியாகிய மெய்யியல், மனிதனைப் படைத்ததாக நம்பப்படும் இறைவனைப் பற்றிய கல்வியாகிய இறையியல் ஆகிய மூன்றும் இருக்கின்றன. ஆனால், இந்த மூன்றையும் ஆராயும் மனிதனின் ஆறாவது அறிவுக்குக் காரணமான ஆன்மாவைப் பற்றிய கல்வியாகிய ஆன்மவியல் தமிழ் மொழியில் மட்டுமே இருக்கிறது.
 மற்ற உயிரினங்களுக்கு இல்லாத மனிதனுக்கே உரிய ஆறாவது அறிவைப் பற்றிய இலக்கணம் உலக மொழிகளில் தமிழ் மொழியில் மட்டுமே இருப்பதால்  ஆறாவது அறிவைப் பற்றிய இலக்கணத்தின் வழியாக ''கடவுள் இருக்கின்றார்" என்று அறிவியல் வழியில் நிலை நாட்டுவது தமிழர் ஆன்மவியல்.
 தமிழ் நாட்டில் மாறி மாறி நடைபெற்று வரும் அந்நியர் ஆட்சிகளால்  தமிழர் ஆன்மவியல் புதையுண்டு கிடக்கிறது.
அடிமையாய் இருப்பதில் சுகம் காணும் ஐந்தறிவுத் தமிழர்:
ஆறாவது அறிவை அறிய இயலாத தமிழர்கள்அந்நியர்களால் ஐந்தறிவு படைத்த ஆடுமாடுகளைப் போன்று அடிமைகளாக வைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய தமிழர்கள் ஆன்மவியலை அறியாமலும் ஆன்மவியலின் சிறப்பை உணராமலும் அந்நியர்களுக்கு அடிமையாய் இருப்பதிலும், அந்நியர்களைத் தலைமேல் வைத்துச் சிறப்பிப்பதிலும் சுகம் காணும் அடிமைகளாக இருக்கின்ற காரணத்தால், தமிழ் இனமும், தமிழ் மொழியும், தமிழர் பண்பாடும், தமிழர் சமயமும் அந்நியர்களால் அழிக்கப்பட்டு வருகின்றன.
 ஆறறிவுள்ள தன்மானத்தமிழர்
இந்நிலையில் தமிழர்களை மென்மேலும் பிளவுபடுத்தும் சாதி, மதம், கட்சி, அணி என்னும் கட்டுகளைத் தாண்டி, அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் சமயம் ஆகிய இவற்றைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயக் கடமை, ஆறறிவுள்ள தன்மானத் தமிழர்களுக்கு இருக்கிறது என்பதை நினைவுபடுத்துகின்றோம். ஆறறிவுள்ளவர்கள் தாங்கள் தெளிவாக அறிந்து ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயங்கமாட்டார்கள் என்பது வரலாறு.
இந்த நிலையில் அனைத்துத் தன்மானத் தமிழர்களும்
''தமிழ் நாட்டைத் தமிழரே  ஆள வேண்டும்” என்னும்
ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்டு தங்கள் பிறவிக் கடமையை நிறைவேற்ற உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
இப்படிக்கு
ஒருங்கிணைப்பாளர்,
அனைத்துத் தன்மானத் தமிழர்களின் கூட்டமைப்பு.
தொடர்பு முகவரி :
பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம்
ஒருங்கிணைப்பாளர், அனைத்துத் தன்மானத் தமிழர்களின் கூட்டமைப்பு,
278, கொன்னூர் நெடுஞ்சாலை, அயன்புரம், சென்னை- 23. ( 044-26743842; 9840003842 ; 9444817394)
PDF இல் சேமிக்க‌

0 கருத்துகள்:

Post a Comment