Showing posts with label ஏழை நாடு. Show all posts
Showing posts with label ஏழை நாடு. Show all posts

19.11.10

கடவுளைச் சொல்லக் காசு எதற்கு?

இந்த நாட்டின் செல்வத்தில் எவ்வளவு பெரிய பாகம் மதமும் கடவுளும் என்கின்ற பெயரால் வேலை செய்யாத சோம்பேறிகள் அனுபவிக்கிறார்கள் என்பதை நமது மூட ஜனங்கள் அறியாமலேயே இந்த நாடு தரித்திரமான நாடு என்று அழுகிறார்கள்.  இந்த நாட்டில் உள்ள சந்நியாசிகள் துறவிகள் மதாச்சாரிகள் என்பவர்களுக்கு உள்ள சொத்துகளும் வரும்படிகளும் வேறு யாருக்காவது இருக்கின்றதென்று யாராவது சொல்ல முடியுமா?  

அவர்களுக்கு எதற்காக அவ்வளவு சொத்தும் வரும்படியும் வேண்டி இருக்கிறதென்று எந்தப் பொருளாதாரவாதியாவது கவனிக்கின்றானா?  ஒரு சந்நியாசி கோடிக்கணக்கான ரூபாய் சொத்தும் வருஷத்தில் லட்சக்கணக்கான ரூபாய்கள் வரும்படியும் உடையவனாக இருந்தால் அந்த நாடு ஏழை நாடு தரித்திர நாடு என்று யாராலாவது சொல்ல முடியுமா?  என்று கேட்கின்றேன்.

ஒரு முழம் முக்கால் முழம் உயரமுள்ள குளவிக்கல்லுகளுக்கு நமது நாட்டில் எத்தனை கோடி ரூபாய்கள் சொத்தும் எத்தனை லட்ச ரூ. வரும்படியும் இருக்கின்றன வென்று பாருங்கள்.  இப்படி எத்தனை நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான குளவிக்கல்லுகள் நமது நாட்டில் செல்வத்தோடு யானை ஒட்டகை குதிரை பல்லக்கு தேர், ரதம் முதலிய வாகனங்களோடு பல பெண்டாட்டிகளோடு பல கலியாணங்களோடு வாழ்கின்றன என்பவைகளை நேரில் பார்க்கும் ஒரு யோக்கியன் உண்மையில் நமது நாடு தரித்திரமுள்ள நாடு என்று சொல்ல வருவானா?                                                                                                              (தொடரும்)
(பெரியார் - குடியரசு – சொற்பொழிவு – 14.09.1930)

PDF இல் சேமிக்க‌