25.3.11

அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைக்க முடியுமா? - உலகளாவிய கருத்தரங்கு


அறிவியல் அறிஞர்களையும், ஆன்மீக அறிஞர்களையும் உலகளாவிய அளவில் அழைத்து பல்துறை நோக்கில் ஆறாவது  அறிவைக் குறித்த  உலகளாவிய கருத்தரங்கு,  தமிழர் ஆன்மவியலின் சிறப்புகளை உலகறியச்      செய்யும் உலகளாவிய கருத்தரங்கு,  உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளாக, அன்புச் சகோதரர்களாக ''யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்னும் நிலையில் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வழிகாட்டும்          கருத்தரங்கு. இதுவரை இணையாமல், இணைக்க முடியாமல் தனித்தனியாக இருந்து வரும் அறிவியலையும், ஆன்மீகத்தையும் குறித்து அறிவியல் மேதை ஐன்ஸ்டீன்
            ஆன்மீகத்தை அறியாத அறிவியல் முடம்,
            அறிவியலை அறியாத ஆன்மீகம் குருடு
என்று குறிப்பிட்டு இரண்டும் குறைபாடுடையவை என்று கூறுகின்றார்.

அறிவியலும் ஆன்மீகமும் தனித்தனி நிலையில் நிற்கும்பொழுது குறைபாடுடையவனாக இருப்பதை அறியும் நாம், இரண்டையும் இணைத்து நோக்கும் ஒரு புதிய முயற்சியைச் சோதனைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

ஆறறிவுள்ள மனிதன்:
உயிரினங்களின்,
உடலைப் பற்றிய ஆய்வு அறிவியல் என்றும்
உயிரைப் பற்றிய ஆய்வு மெய்யியல் என்றும்
உயிரினத்தைப் படைத்ததாக நம்பப்படுகின்ற
இறைவனைப் பற்றிய ஆய்வு இறையியல் என்றும்
குறிக்கப்படுகின்றன.

அறிவியலையும், மெய்யியலையும், இறையியலையும் ஆராய்பவன், மற்ற உயிரினங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ள ஆறறிவுள்ள மனிதன் ஆவான்.

மற்ற உயிரினங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ள மனிதனைப் பற்றியும், அந்த வேறுபாட்டுக்குக் காரணமான ஆறாவது அறிவைப் பற்றியும் ஆயும் ஆய்வு, இதுவரை உலகில் சிறப்பிடம் பெற்று அறிவியல், மெய்யியல், இறையியல் போன்று ஒரு தனி ஆய்வாக வளர்ச்சி அடையவில்லை என்பது கூர்ந்து நோக்கத் தக்கது.

ஆறாவது அறிவு:
மனிதனைப் பற்றிய ஆய்வு என்பது, மற்ற உயிரினங்களுக்கு இல்லாத மனிதனுக்கு மட்டுமே இருப்பதாக நம்பப்படுகின்ற ஆறாவது அறிவைப் பற்றிய ஆய்வு ஆகும்.

''மனிதனுக்கு மட்டுமே இருப்பதாக நம்பப்படும் ஆறாவது அறிவு” என்பது அறிவியலுக்குக் கேள்விக்குறியாக அமைந்து விடுகிறது. மனிதனுக்கு மட்டுமே இருப்பதாக நம்பப்படும் ஆறாவது அறிவை, அறிவியல் வழியில் நிலைநாட்டிக் காட்ட முடியுமா? என்னும் கேள்வி இப்பொழுது எழுகின்றது. 

அறிவியல்:
அறிவியல் வழியில் ஆறாவது அறிவை நிலைநாட்டிக் காட்ட இதுவரை வளர்ந்துள்ள அறிவியலால் இயலாத காரணத்தாலேயே,
''மனிதனுக்கு மட்டுமே இருப்பதாக நம்பப்படும் ஆறாவது அறிவு”
என்று குறிப்பிட வேண்டிய நிலை ஆறாவது அறிவுக்கு ஏற்பட்டுள்ளது.

அதாவது, இதுவரை வளர்ந்துள்ள அறிவியல், ஆறாவது அறிவை அறியாததாய் இருக்கிறது என்பது தெளிவாகிறது.

அப்படியானால் ''உலகிலுள்ள உயிரினங்களில், மனிதன் மட்டுமே அறிவியல், மெய்யியல், இறையியல் ஆகியவற்றை ஆராய்ந்து, மறைந்து கிடக்கும் உண்மைகளை வெளிப்படுத்துவது எவ்வாறு? மற்ற உயிரினங்களுக்கு இந்த ஆற்றல் இல்லாமல் இருப்பது ஏன்?” என்னும் கேள்விகளுக்கு இதுவரை வளர்ந்துள்ள அறிவியலில் விடை இல்லை.

ஆன்மீகம்:
அறிவியலில் விடையில்லாத இந்தக் கேள்விகளுக்கு ஏற்ற விடையை ஆன்மீகம் கொடுக்கிறது. மற்ற உயிரினங்களுக்கு இல்லாத ஆறாவது அறிவு மனிதனுக்கு மட்டுமே இருப்பதற்குக் காரணம் ''கடவுள்” என்னும் பதிலை ஆன்மீகம் கொடுக்கிறது.

ஆன்மீகம் கொடுக்கும் 'கடவுள்’ என்னும் பதிலை, அறிவியல் ஏற்றுக் கொள்ள இயலாத நிலையில், ஆறாவது அறிவை மறுக்க வேண்டிய கட்டாயம் அறிவியலுக்கு ஏற்படுகிறது.
அறிவியல் ஆறாவது அறிவை மறுக்கும்பொழுது, அறிவியல், மெய்யியல், இறையியல் ஆகிய சிந்தனைகள் மனிதனுக்கு மட்டுமே இருப்பதற்கான காரணத்தை அறிவியலால் விளக்க இயலா நிலையை அறிவியல் அடைகிறது.

இணைக்க வேண்டிய கட்டாயம்:
ஆகவே, ஆறாவது அறிவை முழுமையாக அறிவதற்கு அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து நோக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படுகிறது.

அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைக்கும் இடத்தில் மனிதனுக்கு மட்டுமே இருக்கும் ஆறாவது அறிவு பற்றியும், ஆறாவது அறிவுக்குக் காரணமாக மனிதனுக்கு மட்டுமே இருக்கும் 'மனிதம்’ அல்லது 'ஆன்மா’ பற்றியும், ஆன்மாவைப் படைத்த கடவுளைப் பற்றியும் ஆராய வேண்டிய தொடர்ச்சி ஏற்படுகிறது.

ஆன்மீகத்திற்குக் காரணமான உலக மதங்கள் அனைத்தையும் இணைத்து அவற்றின் பொதுக் கூறுகளை ஆராய்ந்தால் அவை,
1. உடல் 2. உயிர் 3. ஆன்மா 4. கடவுள் 5. ஆணவம் ஆகிய இந்த ஐந்து பிரிவுகளில் அடங்குகின்றன.
இதுவரை உலகில் வளர்ந்துள்ள அறிவியல், இந்த ஐந்து பிரிவுகளில் உடலைப் பற்றி மட்டுமே அறிந்துள்ளது.

டார்வினின் குறை:
உயிரினங்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்ட டார்வின் உயிரினங்களின் உடலைப் பற்றி அறிந்த கருத்துகளை வெளியிட்டுள்ளாரேயன்றி உயிரினங்களின் உயிரைப் பற்றி ஆராயவில்லை என்பது நோக்கத் தக்கது.
உலகிலுள்ள பொருட்கள்
            1. உயிரற்ற பொருட்கள்
            2. உயிருள்ள பொருட்கள்
என இருவகைப்படுகின்றன. டார்வின் ஆராய்ந்த உயிரினங்கள் உயிருள்ள பொருட்களில் அடங்குகின்றன. உயிரைப் பற்றி அறியாத அவரது ஆய்வு உயிரினங்களைப் பற்றிய முழுமையான ஆய்வாக இல்லாமல் குறைவுடையதாகி விடுகிறது. உயிரைப் பற்றி அறியாத ஆய்வு உயிரினங்களைப் பற்றிய ஆய்வாக ஆகாது.

உயிர்:
''உயிர்” என்றால் என்ன? என்னும் கேள்விக்கு ஏற்ற விளக்கம் இதுவரை வளர்ந்துள்ள அறிவியலில் இல்லை. அறிவியல் இக்கேள்விக்கு என்ன விளக்கம் கொடுத்தாலும், ஒரு சிறுவன்
1. உயிர் எங்கிருந்து வந்து உடலில் சேர்கிறது?
2. எப்பொழுது எவ்வாறு சேர்கிறது?
3. உடலை விட்டுப் பிரியும் உயிர் எங்கே செல்லுகிறது?
என்று கேட்கும் கேள்விகளுக்கு அறிவியலில் விடை இல்லை.
இக்கேள்விகளுக்கு ஏற்ற விடையை ஆன்மீகத்தில் தேட வேண்டியதிருக்கிறது.

''தமிழ் மொழி அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து நோக்கும் மொழியாக இருக்கிறது” என்பதை, தமிழ் எழுத்துகளைப் பிரித்து நோக்கும் நோக்கு வெளிப்படுத்துகிறது.
உயிர் வேறு,
உடல் வேறு,
உயிரும் உடலும் இணைந்திருக்கும் உயிரினம் வேறு
என்னும் கருத்துகளை விளக்கும் நோக்கில்
1. உயிர் எழுத்து
2. மெய் எழுத்து
3. உயிர் மெய் எழுத்து
என்று பிரித்துக் காட்டுகிறது.

உணர்வும் அறிவும்:
உயிரின் இயல்பு உணர்தல். உணர்வின் வெளிப்பாடு அறிவு.
உயிரற்ற பொருட்கள் உணர்வதில்லை. அதனால் அவை அறிவை வெளிப்படுத்துவதில்லை.

உயிருள்ள பொருட்களாகிய உயிரினங்களை அவை உணர்ந்து வெளிப்படுத்தும் அறிவை அடிப்படையாகக் கொண்டு தமிழ் இலக்கணம் ஆறு வகையாகப் பிரிக்கிறது.

ஐந்து வகை உணர்வும் ஐந்து வகை அறிவும்:
            ஓரறிவுயிர்     - தொடுவுணர்வைக்                                                                           கொண்டுள்ளது - மெய்
            ஈரறிவுயிர்      - மெய்+வாய்
            மூவறிவுயிர்   - மெய்+வாய்+மூக்கு
            நாலறிவுயிர்   - மெய்+வாய்+மூக்கு+கண்
            ஐந்தறிவுயிர் - மெய்+வாய்+மூக்கு+கண்+செவி
உலகிலுள்ள உயிரினங்களில், ஐந்து வகையான உயிரினங்களும் ஐந்து வகையான உணர்வின் அடிப்படையில் ஐந்து வகையான அறிவை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற ஐந்து வகை உறுப்புகளைப் பெற்றுள்ளன. அவை மெய், வாய், மூக்கு, கண், செவி.

ஆறாவது உணர்வும் ஆறாவது அறிவும்:
மனிதன் இந்த ஐந்து வகை உயிரினங்களிலிருந்து வேறுபட்டு ஆறாவது வகையான உயிரினமாக இருக்கின்றான்.

இதற்குக் காரணம் மனிதனுக்கு இந்த ஐந்து வகை உணர்வுடன் கூடிய ஐந்து வகை அறிவுடன் ஆறாவது வகையான உணர்வும் ஆறாவது வகையான அறிவும் இருக்கின்றன என்று ஆன்மீகம் கூறுகிறது.

ஐந்து வகை அறிவுக்குக் காரணமான ஐந்து வகை உணர்வுகளையுடைய மெய், வாய், மூக்கு, கண், செவி ஆகிய ஐந்து உறுப்புகளுடன் ஆறாவது அறிவுக்குக் காரணமான ஆறாவது உணர்வையுடைய 'மனிதம்’ அல்லது 'ஆன்மா’ என்பது மனிதனுக்கு மட்டுமே இருக்கிறது என்றும், இந்த ஆன்மாவே கடவுளை உணர்ந்து அனுபவித்து வெளியே எடுத்துக் கூறக் கூடியது என்றும், இந்த அனுபவத்தை அடையாதவர்களால் இதைப் புரிந்து கொள்ளல் இயலாது என்றும், ஆன்மீகம் விளக்குகிறது.

அகப் பொருள்:
ஆறாவது அறிவுக்குக் காரணமான ஆறாவது உணர்வாகிய  ஆன்மீக அனுபவத்தைத் தமிழ் இலக்கணம் அகப் பொருள் என்று கூறுகிறது. இதை விளக்குவதற்கு இல்லற அனுபவத்தை உவமையாகக் கூறுகிறது.

மனிதன் அடையும் அனுபவங்களில், புறத்தே மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி நிலைநாட்டக்கூடியதைப் ''புறப்பொருள்” என்றும், மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி நிலைநாட்ட இயலாமல் அகத்தில் மட்டுமே உணரக்கூடிய ஆன்மீக அனுபவத்தை ''அகப்பொருள்” என்றும்,  பொருள் இலக்கணத்தின் வாயிலாக தமிழ் இலக்கணம் விளக்கிக் காட்டுகிறது.

நிலைநாட்ட இயலாமல் இருப்பது ஏன்?
தம் உடலிலுள்ள ஒரு உறுப்பின் வழியாக உணர்ந்து அறிந்த ஒருவர் இன்னொருவர் உடலிலுள்ள அந்த உறுப்பு வேலை செய்ய இயலாநிலையில், அந்த உறுப்பினால் உணரவும் அறியவும் இயலாநிலையிலுள்ள அவருக்கு தம் அனுபவத்தை எடுத்துச் சொல்லி நிலைநாட்ட இயலாது என்பது நடைமுறை. அவ்வாறே ஆறாவது உறுப்பாகிய ஆன்மா இருந்தும் அது வேலை செய்ய இயலாநிலையிலுள்ள மற்றவர்க்கு, தாம் உணர்ந்த அனுபவத்தை எடுத்துச் சொல்லி நிலைநாட்ட முடியாது எனக் கூறுவது அகப் பொருள் இலக்கணம்.

பொருள் இலக்கணத்தில் புறப்பொருள் அறிவியலை விளக்குவதாகவும் அகப் பொருள் ஆன்மீகத்தை விளக்குவதாகவும் இருக்கின்றன.

ஆன்மீக அனுபவத்தை விளக்கும் இந்தப் பொருள் இலக்கணம் தமிழ் மொழியைத் தவிர உலகில் வேறு எந்த மொழியிலும் இருப்பதாகத் தெரியவில்லை.

உயர்திணை:
தமிழ் மொழியிலுள்ள திணை இலக்கணம், ஆறாவது அறிவுக்குக் காரணமான ஆன்மாவையுடைய மனிதனை உயர்திணை” என்றும், மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருட்களையும் உயர்திணை அல்லாத ''அöறிணை” என்றும் வேறு வேறாகப் பிரிக்கிறது. இந்தப் பிரிவும் தமிழ் மொழியைத் தவிர உலகில் வேறு எந்த மொழியிலும் இருப்பதாகத் தெரியவில்லை.

இணைந்த ஆய்வு:
ஆகவே, தமிழ் மொழியிலுள்ள 1. பொருள் இலக்கணம் 2. திணை இலக்கணம் ஆகிய இரண்டும் ஆறாவது அறிவோடும் ஆன்மீகத்தோடும் தொடர்புடையதாக இருக்கின்ற காரணத்தாலும், அறிவியல், மெய்யியல், இறையியல் ஆகிய ஆய்வுகளுக்குக் காரணமாய் இருப்பதாலும்,  ஆறாவது அறிவைப் பற்றி அறிவியல் அறிஞர்களும், ஆன்மீக அறிஞர்களும் இணைந்து ஆராய வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டுள்ளது.

இரட்டைப் புலவர்கள்:
அறிவியல் அறிஞர்களும் ஆன்மீக அறிஞர்களும் இணைந்து ஆராயும் பொழுது, அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் அறிவியலையும் ஆன்மீகத்தையும் முடம், குருடு என்று குறை கூறுவதற்குத் தீர்வு கிடைத்து விடுகிறது. இது தமிழகத்தில் வாழ்ந்த இரட்டைப் புலவர்களின் வாழ்க்கையை நமக்கு நினைவுபடுத்துவதாக அமைந்து விடுகிறது. 

முடமான புலவர் ஒருவரும், குருடான புலவர் ஒருவரும், ஒன்றுபட்டு, குருடர் முடவரைத் தம் தோளில் ஏற்றிக் கொள்ள மற்ற எவருடைய துணையுமில்லாமல் இருவரும் இணைந்து பல இடங்களுக்கும் சென்று பாடிய பாடல்களைத் தமிழ் மொழி தன்னகத்தே கொண்டுள்ளது. தனி நிலையில் செயல்பட இயலாத இருவர் இணைந்து செயல்பட்டு வெற்றி வாழ்க்கை வாழ்ந்தனர்.
முடமும் குருடுமான இரட்டைப் புலவர்களின் பாடல்களைத் தன்னகத்தே பெற்றுள்ள தமிழ் மொழி, முடமாகவும் குருடாகவும் கூறப்பட்டுள்ள அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து நோக்கும் ஆன்மவியலைத் தன்னகத்தே கொண்டுள்ளமை தமிழ் மொழியின் தனிச்சிறப்புக்கு எடுத்துக்காட்டு ஆகும்.

ஆன்மவியல்:
உடலைப் பற்றிய ஆய்வு அறிவியல் என்றும்,
உயிரைப் பற்றிய ஆய்வு மெய்யியல் என்றும்,
இறைவனைப் பற்றிய ஆய்வு இறையியல் என்றும்
தனித்தனி நிலையில் நின்று செயல்படுவதைப் போன்று, ஆறாவது அறிவைப் பற்றியும் ஆறாவது அறிவுக்குக் காரணமான ஆன்மாவைப் பற்றியும் ஆயும் ஆய்வு ''ஆன்மவியல்” என்னும் தனிநிலையில் அழைக்கப்படுவதே சரியானது. உலகில் ஆன்மவியல் ஆய்வு பரவாத காரணத்தால் அறிவியல், மெய்யியல், இறையியல் ஆகிய மூன்றும் நிறைவடைய இயலாமல் இருக்கின்றன. ஆன்மவியல் மற்ற மூன்றையும் இணைத்துக் கொண்டு ஒரு நிறைவை ஏற்படுத்துகிறது.
ஆன்மவியல் தமிழ் மொழியில் வளர்ந்துள்ளமையை உலகுக்கு வெளிப்படுத்தும் நிலையில், இதைத் ''தமிழர் ஆன்மவியல்” என்று குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.


1.   தமிழர் ஆன்மவியல் கூறும்       ஆறாவது அறிவு பற்றிய கருத்துகளை அறிஞர்கள்   முன்னர் எடுத்து வைக்க, உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்கம் ஆயத்தமாக இருக்கிறது.
2. அறிவியல் அறிஞர்களையும், ஆன்மீக அறிஞர்களையும் உலகளாவிய அளவில் அழைத்து, பல்துறை நோக்கில் ஆறாவது அறிவைக் குறித்து    உலகளாவிய கருத்தரங்கை நடத்த சென்னைப் பல்கலைக்கழக மெய்யியல் துறை முன்வந்துள்ளது.
3.   தமிழர் ஆன்மவியலின் சிறப்புகளை உலகறியச் செய்யும் இந்தக் கருத்தரங்குக்கான நிதியுதவியைச் செய்ய செம்மொழித் தமிழாய்வு     மத்திய நிறுவனம் முன்வந்துள்ளது.
ஆறாவது அறிவுக்கான கருத்தரங்கம் அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து நோக்கும் நோக்கு, ஆத்திகத்தையும், நாத்திகத்தையும் இணைத்து நோக்கும்          நோக்காகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
4. இதனால் ''கடவுள் இருக்கிறார்” என நம்பும் உலகிலுள்ள ஆத்திக சமயங்களை அழைத்து உலகளாவிய கலந்துரையாடலை நடத்திவரும் கத்தோலிக்கத் திருச்சபை.
5. ''கடவுள் இல்லை” என நம்பும் நாத்திகர்களை அழைத்து நாத்திகர் உலக மாநாட்டை நடத்தியுள்ள             திராவிடர் கழகம். ஆகிய ஐந்து அமைப்புகள் இணைந்து உலகளாவிய இக்கருத்தரங்கை நடத்த முன்வந்துள்ளன. இக்கருத்தரங்கம் சென்னை பல்கலைக் கழகத்தில் 2011 அக்டோபர் 4,5,6 ஆகிய நாட்களில் நடைபெற இருக்கிறது.

(கட்டுரை: தமிழர் சமயம் - மார்ச்சு 2011 இதழில் வெளியானது)
PDF இல் சேமிக்க‌

22.3.11

திருநீறா? சிலுவையா? - 4


திருநீற்றைப் பயன்படுத்தும் திருச்சபை
ஐரோப்பியர் பிடியில் சிக்காமலும் சிலுவை அடையாளத்தைப் பயன்படுத்தாமலும் கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கு முன்னர் உலகில் பரவி, திருநீற்றை அடையாளமாகப் பயன்படுத்தி வரும் கிறித்துவின் திருச்சபைப் பிரிவினர் உலகில் இருக்கின்றார்களா?  என்று தேடிப் பார்க்க வேண்டியது இப்பொழுது அவசியமாகிறது.

தூய தோமா
இயேசுகிறித்துவின் மாணவர்களில் மிக நீண்ட தூரம் சென்று கிறித்துவின் நற்செய்தியை அறிவித்த பெருமை புனித தோமையருக்கும் மட்டுமே இருக்கின்றது.  அவர் கி.பி. 52இல் தமிழகம் வந்து நற்செய்தியை அறிவித்து கி.பி. 72இல் மைலாப்பூரில் கொலை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டார் என்பது கிறித்துவத் திருச்சபை வரலாற்றின் ஒரு பகுதி.

அவர் அறிவித்த நற்செய்தியின் பயனாக உருவானதே திருக்குறள் என்பதும் திருக்குறளின் அடிப்படையில், பக்தி இயக்கம் உருவாகி சைவ, வைணவ சமயங்கள் எழுந்தன என்பதும் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் புதிய உண்மைகளாகும்.

சிதைக்கப்பட்டு புதையுண்டு கிடப்பது
தோமா வழிக் கிறித்தவத்தின் பிரிவுகளான சைவ, வைணவ சமயங்கள், பின்னர் தீ வழிபாட்டையுடைய ஆரியப் பிராமணர்களின் பிடியில் அகப்பட்டு ஆரியர்களின் சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கையால் சிதைக்கப்பட்டு இன்று ‘இந்து மதம்’ என்ற கோட்டைக்குள் அடையாளம் காண இயலாநிலையில் புதையுண்டு கிடக்கின்றன.  புதையுண்டு கிடக்கும் அரிய உண்மைகளைத் தோண்டித் தோண்டி வெளியே கொண்டு வர வேண்டிய நிலையில் அவை இருக்கின்றன.  இந்த நிலையில் சைவ, வைணவ சமயங்களில் புதைந்து கிடக்கும் திருநீறு பற்றிய வரலாற்றை நோக்குவோம்.

-                                                                                                                                                                                            - தொடரும்

(உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்க நிறுவனர் பேராசிரியர் முனைவர் மு.தெய்வநாயகம் எழுதிய ‘திருநீறா? சிலுவையா?’ என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.)
PDF இல் சேமிக்க‌

21.3.11

எங்களை அர்ச்சகர் பணி செய்யக்கூடாது என்று தடுக்க இவர்கள் யார்? - ஒரு தமிழ் அர்ச்சகரின் ஆவேசம்...


'தமிழராகிய நாங்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்த பின்னரும் அர்ச்சகராய்ப் பணியாற்ற பிராமணர்கள் தடை செய்வதால். பெரியார் வழியில் சாதிகளைக் கடந்து தமிழராய் ஒன்று கூடி, பிராமண ஆதிக்கத்தை முறியடிப்போம்’

என்ற தமிழ் அர்ச்சகர் சு, சீனிவாசனின் துடிப்புமிகு ஆதங்கம் நம் ஆசிரியர் முனைவர் மு. தெய்வநாயகத்திற்குத் தெரிய வந்தது. 22-7-2010 நாளிட்ட புரட்சிப் பெரியார் முழக்கம் என்னும் பெரியார் திராவிடர் கழக வார ஏட்டில் இச் செய்தியைப் படித்தார்; படித்தவுடன் தன்மானத் தமிழ் அர்ச்சகரின் இந்த ஆதங்கத்தை அறிந்து பெரு மகிழ்வு கொண்டார் ஆசிரியர். அடுத்த நாள் காலையிலேயே விடிந்தும் விடியாததுமாகப் புறப்பட்டு விட்டார் அந்த அர்ச்சகரைக் காண. தமிழின ஆன்மீக விடுதலைப் பணியில் ஆர்வம் கொண்டவரான அன்பரசன் என்ற நண்பரும் ஆசிரியருடன் சென்றார்.

ஆசிரியரும் அருச்சகர் சு.சீனிவாசனும்
சென்னையிலிருந்து புறப்பட்டு இராணிப்பேட்டை சென்றடைந்தனர்; கோவில் கோவிலாகச் சென்றுஅவர்இருக்கும் இடத்தைத் தேடியலைந்து ஒரு வழியாகக் கண்டு பிடித்தார் ஆசிரியர். தான் பெரியார் கூட்டத்தில் பேசியதைப் படித்துவிட்டு    சென்னை அயன்புரத்திலிருந்து புறப்பட்டு இவ்வளவு தூரம் பயணித்துத் தன்னைப் பார்க்க வந்திருக்கின்றாரே ஆசிரியர் என்பதால் மிகுந்த ஆச்சரியமும் ஆனந்தமும் அடைந்தார் அந்த அர்ச்சகர். ஏற்கெனவே ஆசிரியர் தமிழர்களின் கருவறை வழிபாட்டுக்காகப் போராடி வருவதை நாம் அறிவோம்.

தமிழ் நாட்டில் இருந்து கொண்டே, தமிழர்களால் கட்டப்பட்ட, தமிழர் சமயக் கோவில்களாகிய சைவ, வைணவக் கோவில்களின்  கருவறை சென்று தமிழ் மொழியில் வழிபட. தமிழர்களுக்கு உரிமையில்லையா?

ஏன் உரிமையில்லை? ''தமிழ் இனம் கீழான நீச இனம்”, ''தமிழ் மொழி கீழான நீச மொழி”
என்கின்றனர் ஆரிய பிராமணர்.

தமிழர் சமயக் கோவில் கருவறைகளில் வழிபாடு செய்ய  பிராமணர்களுக்கு மட்டுமே உரிமையா? பிராமணரல்லாத தமிழருக்கு அந்த உரிமை கிடையாதா? 200க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற தமிழ் அர்ச்சகர்கள் பிராமணரல்லாத தமிழர்கள் என்ற ஒரே காரணத்தினாலேயே நடுத் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனரே.

ஏன்?
என்ற கேள்வி கேட்டுப் போராடி வருவதால் இது தொடர்பான வெளியீடுகளை எல்லாம்  அவரிடம் கொடுத்தார். அவற்றை ஆர்வமுடன் பெற்றுக் கொண்ட அர்ச்சகர் அவற்றைப் படித்துவிட்டு ஆசிரியருக்கு உருக்கமான கடிதம் எழுதியதோடு நேரில் வந்து பார்த்தார். நேரில் அவர் தன் உள்ளத்து உணர்வுகளை எல்லாம் கொட்டி, தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவருடைய ஆதங்கப் பேட்டி இதோ….
- முனைவர் தெ.தேவகலா

வணக்கம்.  என் பெயர் சு. சீனிவாசன். நான் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா மின்னூர் கிராமத்தைச் சார்ந்தவன். தமிழ்நாடு அரசால் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று கலைஞர் மூலமாகச் சட்டம் இயற்றப்பட்டதால் அதன் மூலமாகத் தான் அர்ச்சகர் பயிற்சி பயின்றோம். தமிழகத்தில் மொத்தம் 6 இடங்களில் அர்ச்சகர் பயிற்சி தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையிலே சைவ சமயம் ஏற்றிப் போற்றும் திருவண்ணாமலையிலே இரண்டு ஆண்டுகள் பயிற்சி முடித்தேன்.

நாங்கள் மொத்தம் 40 பேர் பயின்றோம்.  திருவண்ணாமலையில் அந்தப் பாடங்களையும் வேதங்களையும் கற்றுக் கொடுப்பதற்கு. பிராமண ஆசிரியர்கள் யாரும் முன்வரவில்லை. எந்த ஆசிரியரும் வராத காரணத்தால் ஒரு மூன்று மாத காலம் எங்களுக்கு ஏற்கனவே அர்ச்சகர்களாக இருந்த மாணவர்களே பாடம் நடத்தினார்கள்.

அதாவது, எங்களுக்கு முன்பாகவே பயிற்சி பெற்று அர்ச்சகராகவே பணி புரிந்திருக்கிறார்கள். பிராமணர் அல்லாதவர்கள் கூட புரோகிதம் அதாவது  வாழ்வியல் சடங்குகளைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் மூலமாகவே எங்களுக்குப் பாடம் நடத்தப்பட்டது. ஆசிரியர்கள் யாரும் முன்வரவில்லை. தமிழாசிரியர்கள் மட்டும் வந்தார்கள். பிராமணர்கள் யாரும் முன்வரவில்லை; இறுதியாக  ஒரு மூன்று மாத காலம் மாணவர்களே எங்களுக்குப் பாடம் நடத்தினார்கள்.

புரோகிதம் செய்து கொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட தமிழ்ச் சாதியினர் ஆசாரியர்கள், மர வேலை செய்பவர்கள் நிறைய பயின்றிருக்கிறார்கள். அர்ச்சகராகவும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மூலமாகவே எங்களுக்குப் பாடம் நடத்தப்பட்டது. அதன்படி நாங்கள் பயின்று கொண்டிருக்கும்போது சேலத்திலிருந்து ஓர் ஆசிரியர் ராமகிருஷ்ண ஜீமான். பிராமணராய் இருப்பினும் உலகம் முழுவதும் தன்னுடைய வேதத்தைப் பாடமாகச் சொல்லி கொடுக்கிறவர். 80 வயதுக்கு மேல் இருக்கும். அவர் எங்கள் ஆசிரியரானார்.

அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆன்மீகத்துக்குள் தமது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டார். அவர் ஒரு மந்திரம் சொன்னால் அது தெளிவாகவும் ஓசையுடனும் கேட்கும். அவர் ஒவ்வொன்றையும் சொல்லும்போது அதைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் வரும். மிகச் சிறந்த ஆசிரியர். அவர் பாடம் சொல்லிக் கொடுக்க, அதை அந்த 40 மாணவர்கள் சொல்லும்போது வெளியே கோயிலுக்குச் செல்பவர்கள் நின்று பார்ப்பார்கள்.

இவர் மிகச் சிறந்த முறையில் கற்பிக்கிறார், கற்பித்துக் கொண்டிருக்கிறார், மாணவர்களும் நன்றாகக் கற்கிறார்கள, இவர்கள் எங்களை விட மிகச் சிறந்த முறையில் கற்கிறார்கள் என்று ஆத்திரப்பட்ட பிராமணர்கள், என்ன செய்தார்கள்? என்னுடைய ஆசிரியர் ஒரு நல்ல மனிதர். சாதி ஏற்றத்தாழ்வு பாராதவர்; நல்ல ஆன்மீகவாதி. அவர் தினந்தோறும் சிற்றுண்டி அருந்துவதற்குக் காலை 8 மணி அளவில் சென்று 15 நிமிடம் கழித்து வருவார். நாங்கள் மாணவர்கள் எல்லோரும் வந்துவிடுவோம். ஆனால் அவர்  எங்களுக்கு முன்பாகவே வந்துவிடுவார்; இளைஞரைப் போலவே இருப்பார். அப்படி ஒரு துடிப்பு மிகுந்தவர். ஒரு நாள் 10 மணி ஆகியும் ஆசிரியர் வரவே இல்லை. நாங்கள் எல்லாரும். 'என்ன இது. ஊருக்கு ஏதேனும் சென்று விட்டாரா?’ என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் ஏறக்குறைய 10 மணிக்கு அந்த வாசலிலே மிகவும் நடக்க முடியாத நிலையில் அவர் நின்றிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து மாணவர்கள் எல்லோரும் அவரைப் பார்த்துக் கேட்டோம்.

என்ன ஐயா, ஏன் இப்படி நடக்கக் கூட முடியாமல் நிற்கின்றீர்களே ஏன்? என்று கேட்டோம்.
கோயிலில் இருக்கும் அர்ச்சகரே ஒரு நான்கைந்து பேரை வைத்து 80 வயதிற்கும் மேலான அந்த ஆசிரியரை அடித்திருக்கிறார் என்பது அப்போதுதான் தெரிய வந்தது. திருவண்ணாமலை கோயிலில் உள்ள போது நான்கைந்து பேரை வைத்து அடித்ததாகக் கூறினார். இது மாணவர்கள் மத்தியிலும் மாணவர்கள் அல்லாது அறநிலையத் துறையினர் மத்தியிலும் ஒரு பெரும் கோபத்தை உண்டாக்கியது.

எதற்காக அவரை அடித்தார்கள்? எங்களுக்கெல்லாம்  கற்றுக் கொடுத்ததற்காகவா? ஆம்.
'யாருமே இந்த மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க முன் வராத போது நீங்கள் ஏன் வந்தீர்கள்? மீண்டும் சேலத்திற்கே சென்று விடுங்கள்’  என்று 80 வயதிற்கும் மேலான அந்த ஆசிரியரை அடித்திருக்கிறார்கள்.

பிறகு ஒரு சில காலங்கள் இந்தப் பிரச்சனையில் தான் அர்ச்சகர் பயிற்சி பெற்றோம். காவல் துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் அது திரும்பப் பெறப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில்தான் நாங்கள் அர்ச்சகர் பயிற்சி பெற்றோம். கோயிலுக்குள் செல்லும்போதெல்லாம் கூட பிராமண அர்ச்சகர்கள் எங்களை கேவலமாகத்தான் பார்ப்பார்கள். நாங்கள் வரும்போதெல்லாம் ஒரு வெறுப்பாகத்தான் பார்ப்பார்கள். அர்ச்சகர் என்றால் அன்பாகவும் பாசமாகவும் இருக்க வேண்டும். ஆனால். எதிரிகளைப் பார்ப்பது போலதான் எங்களைப் பார்ப்பார்கள். நாங்கள் தினந்தோறும் மூலவர் சன்னதிக்குச் சென்று தேவாரம், திருவாசகம் எல்லாம் பாடி விட்டுதான் செல்வோம்.

இரண்டு ஆண்டுகாலம் தினந்தோறும் இதுதான் நடைபெற்றது. கருவறையினுள் நுழைந்து நாங்கள் 40 மாணவர்களும் பாடல் பாடுவோம். தேவாரம். திருவாசகம், ருத்ரம் எல்லாம் பாடி எங்கள் பக்தியை வெளிப்படுத்தி மகிழ்வுடன் வெளிவருவோம். அர்ச்சகர்கள் ஒரு எதிரியைப் பார்ப்பது போல் எங்களைப் பார்ப்பார்கள். அந்தக் கோயில் அதிகாரி D.C. வாசுநாதன் என்ற ஒரு ஐயா. அவரும் தமிழ் ஆர்வம் கொண்டவர். அவர் வந்து எங்களுக்கு நிறைய உதவிகள் செய்தார்.

நல்ல மனிதர்; தமிழ் உணர்வு கொண்டவர். எங்களுக்கு ஆசிரியர்; பாடம் கற்றுக் கொடுத்ததை விட அவர் நிறைய நடைமுறை உண்மைகளைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். தினந்தோறும் வருவார். எங்களுடன் கலந்துரையாடுவார். எங்களுக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்தி, பேச்சுப் போட்டி நடத்தி எங்களை மகிழ்ச்சியாக இருக்கச் செய்வார்; அவரும் ஒரு மிகச்சிறந்த ஆன்மீகவாதி. தமிழ் உணர்வு கொண்டவர்.

எப்போதெல்லாம் அலுவலகத்திற்கு வருகிறாரோ. அப்போதெல்லாம் எங்கள் அர்ச்சகர் பயிற்சி நிலையத்திற்கு வருவார். அவருடைய ஆதரவால் திருவண்ணாமலை அர்ச்சகர்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாமல் போனது. எதிரிகளாகப் பார்க்கலாம். அதை வெளிப்படுத்தினால் பாதிப்பு என்ன என்பது அவர்களுக்குத் தெரியும். ஆகவே நிறைய எதிர்ப்புகள் இருந்தாலும் அதிகாரிகள் மத்தியில் எங்களுக்கு நிறைய ஆதரவு இருந்தது.

பிராமணர்களாகிய இவர்களை எதிர்க்க முடியாத நிலையில் மாற்றம் செய்யப்பட்டு விட்டார்.
அதனால் நாங்கள் ஒரு முழுமையான அர்ச்சகர் என்ற முறையில் ஒரு சிறப்பான பயிற்சி பெற்றோம். ஆனால் எங்களுக்கோ அர்ச்சகர் பயிற்சி வாழ்நாள் பணி கிடைக்கவில்லை. என்றாலும் வாழ்வின் ஒழுக்கத்திற்கு இது ஓர் ஆதரவாக உள்ளது. இந்த இரண்டு ஆண்டுக் காலத்தில் அர்ச்சகர்க்குப் பயின்று விட்டோம். அர்ச்சகர் ஆகப் போகின்றோம். இறைவனுக்குப் பணிச் செய்யப் போகின்றோம் என்று  மிகவும் மகிழ்வோடு இருந்தோம்.

ஆனால் பிராமணர்கள் நாங்கள் அர்ச்சகராகப் பணிபுரிய முடியாதபடி  வழக்கு போட்டிருக்கிறார்கள் என்பது எங்களுக்கு மிகவும் பின்னால்தான் தெரிய வந்தது . அர்ச்சகர் பயிற்சி முடிந்த பின்புதான். ஒன்றரை ஆண்டுகள் முடிந்த பின்பு இரண்டு இரண்டு மாதங்கள் கூட்டிக் கொண்டே சென்றார்கள். அப்போது விசாரித்தபோது அதிகாரிகள் சொன்னார்கள். 'பிராமணர்களால் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. அந்த வழக்கு முடிகின்ற வரைக்கும் அர்ச்சகர் பயிற்சி உங்களுக்குத் தொடரப்பட்டிருக்கின்றது. எத்தனை ஆண்டுகள் வழக்கு நீட்டிக்கப்படுகிறதோ. அத்தனை ஆண்டுகாலம் உங்களுக்கு மேலும் பயிற்சி நீட்டிக்கப்படும்’ என்று D.C. வாசுநாதன் ஐயா கூறினார்.

இரண்டு ஆண்டுகள் தாம் பயிற்சி. 16 வயதிலிருந்து 24 வயது வரை  உள்ளவர்களை மட்டும்தாம் அர்ச்சகர் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு சில மாணவர்கள் வயது கடந்தவர்களாகவும் இருப்பார்கள்.

இப்பொழுது என்ன நிலை என்றால் நாங்கள் 25, 26 வயது கடந்தவர்கள்.  எனக்கு வயது 24. இன்னமுள்ள மாணவர்கள் எல்லாம் என்னைவிட 2, 3 வயது கூடுதலாக உள்ளவர்கள். ஒரு 10 மாணவர்கள் அப்படி இருப்பார்கள். அவர்களுடைய கருத்து என்னவென்றால் 'கல்வி கற்கும் வயதை நாங்கள் கடந்துவிட்டோம். மீண்டும் எங்களால் ஓரிடத்தில் அமர்ந்து கல்வி கற்க முடியாது’ என்பது.

நாங்கள் படிக்கும் காலத்தைக் கடந்துவிட்டோம். இத்தனை ஆண்டுகள்தான் பயிற்சி என்று சொன்னீர்கள். மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். மீண்டும் எங்களால் பயில முடியாது. கல்வி பயிலுகின்ற காலத்தைக் கடந்த காரணத்தால், மீண்டும் எங்களுக்குப் பயிற்சி கொடுக்கிறதை ஒரு சிலர் எதிர்த்தனர்.
'அர்ச்சகர் பயிற்சி பயின்று விட்டோம். இனி வேறு பணிக்கு எங்களால் செல்ல முடியாது’ என்கின்றனர் சில மாணவர்கள்.

எங்கள் கிராமங்களிலும் நாங்கள் அர்ச்சகர் என்று தெரிந்தாகிவிட்டது; நாங்கள் வேறு பணிக்குச் சென்றால் எங்கள் வாழ்வியல் எங்களைப் பாதிக்கும் என்பது அவர்களின் கருத்து. இந்தச் சூழ்நிலையில் பிராமணர்கள் வழக்கு தொடர்ந்து விட்டார்கள். கடவுள் கொள்கையில் அனைவரும் சமம். புத்தகங்களிலே சைவ, வைணவ ஏட்டிலே 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றிலே சாதிகளே குறிப்பிடப்படவில்லை.

அப்படி இருக்கும்பொழுது இறைவனுடைய கொள்கையையும் இறையுணர்வையும் இவர்கள் பெறாமல் அர்ச்சகர் பணி செய்கிறார்கள். இறை கொள்கைக்கு எதிரானவர்கள் அங்கு இருப்பதற்கே தகுதியற்றவர்கள். காரணம் கடவுள் கொள்கையையும் பின்பற்றவில்லை. சைவ, வைணவக் கொள்கையையும் பின்பற்றவில்லை. இவ்வாறு இருக்கும் போது இவர்கள் சைவ, வைணவ இந்துமதக் கொள்கை பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது? இது தவறு. கொடுமை. அநியாயம்.

கடவுள் கொள்கையைப் பின்பற்றுகிற பிராமணர்களாக இருந்தாலும் சரி. பிராமணரல்லாத தமிழராக இருந்தாலும் சரி. பயிற்சி பெற்ற உண்மையான ஆன்மீகவாதிகள் தாம் உள்ளே இருக்க வேண்டும். பயிற்சி பெற்ற பிராமணரல்லாத தமிழ் அர்ச்சகர்கள் அர்ச்சனை செய்வதற்கு பிராமணர்கள் எதிர்ப்பு தெரிவித்து, வழக்கு போடுவது இவர்கள் உண்மையான ஆன்மீகவாதிகளே இல்லை என்பதைக் காட்டுகிறது. ஆக உண்மையான ஆன்மீகவாதிகளை இறைவனுக்கு அர்ச்சனை செய்பவர்களாக ஆக்க வேண்டும். நாங்கள் இப்பொழுது என்ன கூறுகிறோம் என்றால் தமிழரால் கட்டப்பட்ட கோயிலில் ஒரு தமிழனால் அர்ச்சனை செய்ய முடியவில்லை. தமிழரின் உரிமை என்னவாயிற்று?

எங்கள் கோயிலுக்குள் சென்று நாங்கள் அர்ச்சனை செய்யக் கூடாது என்று பிராமணர்கள் தடைவிதிப்பதற்கு இவர்கள் யார்? இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? அது மட்டுமின்றி இவர்கள் ஆன்மீகக் கொள்கையையும் இந்து மதக் கொள்கையையும் பின்பற்றாதவர்கள். எனவே அர்ச்சகர் பயிற்சி பயின்ற பிராமணர்களைத் தவிர ஒரு பிராமணன் கூட தமிழ்நாட்டிலே அர்ச்சகராக இருக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்து. இதனை நிறைவேற்ற வேண்டும்.

யாராய் இருந்தாலும் சரி, அர்ச்சகர் பயிற்சி பயின்றவர்கள்தாம் அர்ச்சகராக இருக்க முடியும். அதற்கு விதிமுறைகள் இருக்கிறது.  அரசாங்கம் மூலமாகவும் பயின்று இருக்கலாம். தனியாகவும் பயின்று இருக்கலாம். அர்ச்சகராக இருப்பவர்கள் இந்தக் கொள்கைகள். அதாவது சைவ, வைணவ, இந்துக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும்.

இக் கொள்கையின்படி அனைத்துச் சாதியினரும் ஒன்றே; இறைவனுக்கு முன் வேறுபாடு இல்லை என்று வந்துவிடும். இந்தக் கருத்துகளைக் கொண்டவர்களைத் தவிர வேறு யாரும் அர்ச்சகராகக் கூடாது. சைவம் வைணவத்தை எதிர்க்கிற பிராமணர்கள். தமிழகத்தில் ஒரு திருக்கோயிலில் கூட அர்ச்சகராகப் பணி செய்யக் கூடாது.

மக்களிடத்திலே இதை எடுத்துக் கூறி, சைவ, வைணவக் கொள்கைகளைப் பின்பற்றாத பிராமணர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது. இதை நாம் செய்ய முடியும்; செய்ய வேண்டும். இதுதான் நம் கடமை; இது இறைவன் நமக்குக் கூறியிருக்கிறார். காரணம் 63 நாயன்மார்களும் பல சாதியினராக இருக்கிறார்கள். ஆகவே இறைவன் அனைத்துச் சாதியினருக்கும் அறிவித்துச் சென்றார். இவர்களின் சாதி ஏற்றத்தாழ்வு என்னும் இந்துத்துவாவைப் புனிதமான இந்து மதத்திலே சேர்க்கக் கூடாது. இந்துத்துவாவைச் சேர்ந்தவர்கள் இந்து கோயில்களில் இருக்கக் கூடாது.

தமிழராகிய நமக்கு ஏற்பட்டுள்ள இந்த இழிவைத் துடைத்து. சாதிகளைக் கடந்த தமிழராய் ஒன்றுபட்டு பிராமணர் ஆதிக்கத்தை முறியடிப்போம்.
- அர்ச்சகர் சு. சீனிவாசன்

(கட்டுரை: தமிழர் சமயம் - செப்டம்பர் 2010 இதழில் வெளியானது)

நன்றி: கீற்று இணையத்தளம் (www.keetru.com)

PDF இல் சேமிக்க‌

20.3.11

திருநீறா? சிலுவையா? - 3




சாம்பலும் உயிர்த்தெழுந்த உடலும்

செங்கிடாரி ஊருக்கு வெளியே பலியிடப்பட்டுத் தகனம் செய்யப்பட்டு சாம்பல் உருவாக்கப்பட்டது போன்று, இயேசு கிறித்துவும் எருசலேமுக்கு வெளியே பலியிடப்பட்டு அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்தார்.  உயிர்த்தெழுந்த இயேசுவைப் போன்று சாம்பல் விளங்குகின்றது.  எவ்வாறு?

கொல்லப்பட்டு எரிக்கப்படுவதற்கு முன்னருள்ள கிடாரியின் உடல் வேறு; எரிக்கப்பட்ட பின்னருள்ள கிடாரியின் உடல் வேறு.  எரிக்கப்பட்ட பின்னருள்ள கிடாரியின் உடல் சாம்பல் வடிவில் இருக்கிறது.  சாம்பலை மேலும் எரித்து அழிக்கவோ அல்லது இல்லாமல் ஆக்கவோ இயலாது.

சாம்பல் உயிர்த்தெழுந்த உடலைப் போன்றது.  பாவ நிவர்த்திக்கு உரியதாக விளங்குகின்றது.  இரத்தம் பாவ நிவர்த்திக்குப் பயன்படுவதைப் போன்று சாம்பலும் பாவ நிவர்த்திக்குப் பயன்பட்டது.  இரத்தம் ஒரு நேரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.  இயேசுவின் இரத்தம் தொடர்ச்சியாகப் பயன்படுவதற்குக் காரணம், உயிர்த்தெழுந்தமையாலேயே!  உயிர்த்தெழுதல் இல்லையென்றால் பாவப் பரிகாரம் இல்லை.  ஆகவே உயிர்த்தெழுதலும் சாம்பலும் தொடர்ச்சியாகப் பாவ நீக்கத்திற்குப் பயன்படுகின்றன.  சாம்பல் வேறு; உயிர்த்தெழுந்த உடல் வேறு.  ஆனால் இரண்டும் செயல்பாட்டில் ஒன்று. 

உயிர்த்தெழுந்த உடல் பழைய உடல் அல்ல.  அதை இனி யாரும் அழிக்க இயலாது.  அதைப் போலவே சாம்பலையும் இனி யாரும் அழிக்க இயலாது.  அதனால் இந்த சாம்பலில் அல்லது திருநீற்றில்
  1. மரணம்
  2. உயிர்த்தெழுதல்
  3. பாவ மன்னிப்பு ஆகிய மூன்று நிலைகளும் அடங்கியிருக்கின்றன. 

திருநீறு: கிறித்துவுக்கு முன்னும் கிறித்துவுக்குப் பின்னும்
மரணம், உயிர்த்தெழுதல், பாவ மன்னிப்பு ஆகிய மூன்று நிலைகளையும் அடக்கிய திருநீறு, கிறித்துவின் உயிர்த்தெழுதலுக்கு முன்னர் யூத மதத்தில் பாவ நிவர்த்திக்காகப் பயன்படுத்தப்பட்டது.  இது கிறித்துவின் பலியை முன் அடையாளமாகக் குறிப்பதாகக்கொள்ளலாம்.  யூத மதம் கிறித்துவின் பலியை ஏற்றுக் கொள்ளாத நிலையில் கிறித்துவிற்குப் பின்னரும் பழைய நிலையைத் தொடர்வது இயல்பே!

ஆனால் கிறித்துவின் பலியை ஏற்றுக்கொண்டு, பாவ மன்னிப்புப் பெற்று இரட்சிக்கப்பட்ட கிறித்தவர்கள் புதிய நிலையில் சாம்பல் அல்லது திருநீற்றைப் பயன்படுத்தினார்களா? என்பது இப்பொழுது நோக்கத்தக்கதாய் இருக்கிறது.

கிறித்தவர்கள் இயேசு கிறித்துவின் பாடு மரணத்தைத் தியானம் செய்யும் தபசு காலத்தின் தொடக்க நாளைத் “திருநீற்றுத் திருநாள்” என்று குறிப்பிட்டு, திருநீற்றை அணிந்த மரபை முன்னர் பார்த்தோம்.  மேலும் ஐரோப்பியக் கிறித்தவர்களும் ஐரோப்பிய வழிக் கிறித்தவர்களும் கான்சுடன்டைன் காலம் முதல் இயேசு கிறித்துவின் மரணம், உயிர்த்தெழுதல், பாவ மன்னிப்பு ஆகிய மூன்றையும் குறிக்கும் அடையாளமாகச் சிலுவையைப் பயன்படுத்தி வருவதையும் அது தவறு என்பதையும் பார்த்தோம்.
-                                                                                                                                                          - தொடரும்

(உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்க நிறுவனர் பேராசிரியர் முனைவர் மு.தெய்வநாயகம் எழுதிய ‘சிலுவையா? திருநீறா?’ என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.)
PDF இல் சேமிக்க‌

18.3.11

திருநீறா? சிலுவையா? – 2



திருநீறு தயாரிக்கும் முறை
பாவம் நீக்கும் சாம்பல் அல்லது திருநீறு தயாரிக்கும் முறை பழைய ஏற்பாட்டில் உள்ள எண்ணாகமம் 19ஆம் அதிகாரத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.  அதன் சுருக்கம் வசன எண்களுடன் கீழே கொடுக்கப்படுகிறது.

2ஆம் வசனம் – பழுதற்ற செங்கிடாரி ஒன்று
3ஆம் வசனம் – பாளையத்திற்குப் புறம்பே எடுத்துச் செல்லப்பட்டு அடிக்கப்படும்.
5ஆம் வசனம் – அதன் தோல், தசை, இரத்தம் ஆகியவை சாணியுடன் சுட்டெரிக்கப்படும்.
9ஆம் வசனம் – கிடாரியின் சாம்பல் கூட்டப்பட்டு அது பாளையத்துக்கு வெளியே ஒரு தூய்மையான இடத்தில் கொட்டி வைக்கப்படும்.  அது பாவ நிவர்த்திக்காகப் பயன்படும்.

இரத்தமும் சாம்பலும்
இரத்தமும் சாம்பலும் தீட்டுப்பட்டவர்கள் மீது தெளிக்கப்படும்பொழுது அவர்கள் தூய்மை பெறுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது (எபி. 9:13).

ஆடோ மாடோ கொல்லப்பட்டவுடன் இரத்தம் கிடைத்தது.  இரத்தத்தைச் சேமித்து வைத்து, வேண்டிய நேரங்களில் பயன்படுத்தவில்லை.  ஆனால் சாம்பல் சேமித்து வைக்கப்பட்டு, வேண்டிய நேரங்களில் பயன்படுத்தப்பட்டது.  கிடாரி எரிக்கப்படும்பொழுது, அதன் இரத்தமும் சாணமும் சேர்த்து எரிக்கப்பட்டு, அவற்றின் பயனாகச் சாம்பல் கிடைத்தது.  அதனால் சாம்பலில் இரத்தத்தின் பகுதியும் அடங்கியிருக்கிறது.  இரத்தமும் சாம்பலும் தூய்மைப்படுத்தும் கருவிகளாக விளங்குகின்றன. 
                                                                                                                                     - தொடரும்

(உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்க நிறுவனர் பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய ‘திருநீறா? சிலுவையா?’ என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.) 
PDF இல் சேமிக்க‌

16.3.11

திருநீறா? சிலுவையா? - 1


“திருநீற்றுத் திருநாள்” என்று சிறப்பிக்கப்படுவது சாம்பல் புதன்கிழமை.  கிறித்தவத் திருநாள்களில் சாம்பல் புதன்கிழமை ஒரு முக்கியமான நாள் ஆகும்.  இயேசு கிறித்துவின் பாடு, மரணம், உயிர்த்தெழுதல் இவற்றை நினைவு கூர்ந்து அதற்கென நோன்பு மேற்கொள்ளும் தபசுகாலத்தின் தொடக்க நாள் திருநீற்றுத் திருநாள் அல்லது சாம்பல் புதன்கிழமை ஆகும்.

நீறு: திருநீறு
திருநீறு பூசும் வழக்கம்
“நீறு பூத்த நெருப்பு” என்பதிலுள்ள “நீறு” சாம்பலைக் குறிக்கிறது.  வழிபாட்டில் “நீறு” சிறப்பிக்கப்படும்பொழுது ‘திரு’ என்ற அடைமொழியைப் பெற்று அது “திருநீறு” ஆகிறது.  ஆகவே சாதாரண சாம்பல், வழிபாட்டோடு தொடர்புபடுத்தப் படும்பொழுது  அது “திருநீறு” ஆகிறது.  திருநீற்றுத் திருநாள் அன்று கிறித்தவர்கள் தங்கள் நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ளும் வழக்கம் உரோமன் கத்தோலிக்கக் கிறித்தவப் பிரிவு மக்களிடையே இன்றும் நடைமுறையில் இருக்கிறது.

துக்கத்தை வெளிப்படுத்தும் அடையாளம்
இயேசு கிறித்துவின் பாடு,மரணம், இவற்றைத் தியானம் செய்யும் காலமாக திருச்சபை அட்டவணையில் நாற்பது நாட்கள் ஒதுக்கப்படுகின்றன.  இதை “தபசுகாலம்” என்று குறிப்பிடுவர்.  தபசு காலத்தின் தொடக்க நாள் “திருநீற்றுத் திருநாள்” எனக் குறிக்கப்பட்டு அன்று நெற்றியில் சாம்பல் பூசப்படுகின்றது.  துக்கத்தை வெளிப்படுத்தும் அடையாளமாகச் சாம்பல் பூசிக் கொள்வதையும் சாம்பலில் உட்காருவதையும் பழைய ஏற்பாடு கூறுகிறது.  (II சாமு 13:19, எசுதர் 4:3, யோபு 2:8)

மனந்திரும்பலின் அடையாளம்
மனந்திரும்பலை வெளிப்படுத்தும் அடையாளமாகச் சாம்பலில்  உட்காருவதையும் சாம்பலைப் பூசிக் கொள்ளுவதையும் பற்றிய குறிப்புகளை நாம் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் பார்க்கின்றோம்.  (யோனா 3:6, மத்தேயு 11:21, உலூக்கா 10:13)

பாவம் நீக்கும் சாம்பல் அல்லது திருநீறு
பாவம் போக்கும் திருநீறு
பாவம் நீக்கும் பரிகாரப் பொருளாக இரத்தமும் சாம்பலும் விளங்குவதைப் புதிய ஏற்பாடு கூறுகின்றது.  “வெள்ளாட்டுக் கடாக்கள், காளைகள் இவற்றின் இரத்தமும் கடாரியின் சாம்பலும் தீட்டுப்பட்டவர்கள் மீது தெளிக்கப்படும்பொழுது, சடங்கு முறைப்படி அவர்கள் தூய்மை பெறுகிறார்கள்”. (எபிரேயர் 9:13)
                                    
                                               -       தொடரும்

(உலகத்தமிழர் ஆன்மவியல் இயக்க நிறுவனர் பேராசிரியர் முனைவர் மு.தெய்வநாயகம் எழுதிய ‘திருநீறா? சிலுவையா?’ என்னும் புத்தகத்தில் இருந்து பதியப்பட்டுள்ளது.)
PDF இல் சேமிக்க‌