27.2.11

இலங்கையில் தமிழ் ஈழம் மலரத் தாய்த்தமிழகம் செய்ய வேண்டியது என்ன?


ஆயுதப் போராட்டத்தின் வழி தமிழ் ஈழத்தை உருவாக்குவதில் சிக்கல்கள் ஏராளம் இருக்கின்றன.  இந்தியா படை எடுத்துச் சென்று பங்களாதேசத்தை உருவாக்கியதைப் போன்று, தமிழ் ஈழத்தை உருவாக்கித் தரும் என்னும் எதிர்பார்ப்பு முற்றிலும் தவறானது ஆகும்.  இந்தியாவின் இறையாண்மை ஆரியப் பிராமணர்களிடத்திலும் ஆரியப் பிராமணரின் ஆதரவாளரிடத்திலும் இருக்கும் வரை இதை எண்ணிப் பார்த்தல் இயலாது.  மேலும் தமிழின ஆதரவாளர்கள் இந்திய இறையாண்மைக்கு வந்தாலும் இலங்கையின் மீது படை எடுத்தால் அது மூன்றாம் உலகப் போரை உருவாக்கலாம்.  அப்படியானால் சரியான வழி எது?

இப்பொழுது இலங்கைத் தமிழர்களும் இந்தியத் தமிழர்களும் இலங்கை அரசையும் இந்திய அரசையும் நம்பிப் பயனில்லை என்பதைப் புரிந்து கொண்டு ஐக்கிய நாடுகள் சபையை நோக்கி முறையிடுகின்றார்கள். 

ஐக்கிய நாடுகள் சபை ஐந்து வல்லரசு நாடுகளின் கையில் இருப்பதாலும் ஒரு நாட்டின் இறையாண்மையில் தலையிடக்கூடாது என்னும் நிலையில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் இனப் படுகொலை நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது அதில் தலையிடாமல் வேடிக்கை பார்க்கும் நிலையில் இருந்தமையாலும் இலங்கைத் தமிழர் பிரச்சனையைத் தீர்க்க ஐக்கிய நாடுகளின் சபையை நம்பிப் பயன் இல்லை என்பது நடைமுறை. 

இந்த நடைமுறையின்படி உலகில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வழியில்லை.  வலியவர்கள் எளியவர்களை அழிக்கலாம்.  இதுவே நியாயம்.  இதை எளியவர்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்னும் மனு நூல் கொள்கை உலக அரசியலில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  மனு நூல் கொள்கையாகிய நிற வெறி இனவெறியாக மாறி “ஆரிய இனமே உலகை ஆளப்பிறந்த இனம்” என்னும் முழக்கத்துடன் இட்லர் அறுபது இலட்சம் யூதர்களைக் கொன்று குவித்ததும் அமெரிக்கர்கள் ஆப்பிரிக்க மக்களை ஆடுமாடுகளைப் போன்று விற்பனைப் பொருளாக்கி அவர்களுக்கு நினைக்க முடியாத கொடுமையைச் செய்ததும் உலகில் நடைபெற்றன.  அதன் தொடர்ச்சி இப்பொழுதும் இருந்து கொண்டிருப்பதை வெளிப்படுத்துவதே இலங்கையில் நடந்துள்ள தமிழ் இனப் படுகொலை.  இந்த நடைமுறையின் காரணமாக, இன்றைய உலகில் பயங்கரவாதம் பெருகி, உலக மக்கள் அனைவரும் நிம்மதியை இழந்து அச்சத்தில் தவித்துக் கொண்டிருக்கும் நிலையை நாம் காணுகின்றோம். 

உலகம் முழுவதும் நடைபெறும் பயங்கரவாதத்திற்குத் தீர்வு என்ன?
                                                                                  - அடுத்த பதிவில் பார்ப்போம்.

(உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்க நிறுவனர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய ‘அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?’ என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.)
PDF இல் சேமிக்க‌

25.2.11

தமிழ்நாட்டைத் தமிழன் ஆள வேண்டும்


தமிழ் இனம் அழியாமல் பாதுகாக்கப்படத் தமிழ்நாட்டைத் தமிழர் ஆள வேண்டும்.  வேறு மாநிலத்திலிருந்து தமிழ் நாட்டில் குடியேறியவர்களால் தமிழனுடைய உணர்வைப் புரிந்து கொள்ளுதல் கடினமான ஒன்று ஆகும்.

அதே நேரத்தில் ஒன்றுபட்ட இந்தியாவில் வாழும் நாம், தமிழர் அல்லாதவர்களை வெறுக்க வேண்டிய தேவை இல்லை.  தமிழ் இனத்தின் பாதுகாப்பை முன்னிட்டு தமிழரல்லாதவர் தமிழ் நாட்டில் வாழலாம்; ஆனால் தமிழனை ஆள நினைக்கக்கூடாது.  அந்தந்த மாநிலத்தை அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆள வேண்டும் என நினைப்பது இயல்பான ஒன்றேயாகும்.  இந்த உணர்வை மற்றவர்கள் மதிக்க வேண்டும்.  அவ்வாறு மதிக்கும்பொழுது மட்டுமே இந்திய ஒற்றுமையுணர்வு நிலை நிற்கும்.  இதற்குரிய திட்டங்கள் தீட்டப்பட்டு அவை நிறைவேற்றப்பட வேண்டும்.

சாளுக்கிய அரசனான முதற்குலோத்துங்கச் சோழன் முதல், தமிழர்கள் தமிழரல்லாத அந்நியர்களால் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் ஆளப்பட்டமையால் தமிழ் இனத்தின் சிறப்புகள் அனைத்தும் சிதைக்கப்பட்டுள்ளன.  இதனை மீட்டுருவாக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.  இந்தத் தருணத்தையும் இழந்துவிட்டால் தமிழ் இனமும் தமிழ் இனத்தின் சிறப்புகள் அனைத்தும் முற்றாக அழியும் நிலை வந்து விடும்.  அந்நிலையைத் தடுத்து நிறுத்தி ஆக வேண்டும்.

தாய்த்தமிழகம் தலை நிமிர்ந்து நின்றால் தான் இலங்கைத் தமிழினம் உட்பட உலகத் தமிழினத்துக்குப் பாதுகாப்பாக இது விளங்க இயலும்.  தாய்த் தமிழகம் அடிமைப்பட்டுக் கிடக்குமானால், உலகத் தமிழ் இனம் முழுவதும் கேட்பாரற்று நசுங்கி அழியும் நிலையை அடையும்.  அத்துடன் இலங்கையில் இனித் தமிழ் இனமும் சிங்கள இனமும் இணைந்து வாழ்தல் இயலாது.  அடிமைப்பட்டு வாழ விரும்பாத தமிழர்கள் அழிக்கப்படுவது இயல்பு.  இதனால் இலங்கையின் நிலையான அமைதிக்குத் தமிழ் ஈழம் தவிர வேறு வழி இல்லை. 

விடுதலைப்புலிகள் தமிழ் ஈழத்திற்காகப் போராடினார்கள்.  வெற்றி பெற இயலவில்லை.  இனி தாய்த்தமிழகத்தின் துணை இல்லாமல் தமிழ் ஈழம் மலர முடியாது.

அப்படியானால் இலங்கையில் தமிழ் ஈழம் மலரத் தாய்த்தமிழகம் செய்ய வேண்டியது என்ன?
-       அடுத்த பதிவில் பார்ப்போம். 

(உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்க நிறுவனர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய ‘அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?’ என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.)
PDF இல் சேமிக்க‌

23.2.11

தமிழர் சமயம் - தமிழ் மண் - தமிழ் நாடு


தமிழர் சமயம்
தந்தை பெரியார் காலத்திற்குப் பின் வாழும் நாம் நம் காலத்தில் தந்தை பெரியாரின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, திராவிட இனத்தின் தலைமை நிலையில் இருக்கும் தமிழ் இன எழுச்சிக்குத் தமிழர் சமயமாகிய இந்து மதத்தின் சிறப்புகளைக் கற்றுக் கொண்டு உலகம் முழுவதுக்கும் உணர்த்தும் பணியை விரும்பி ஏற்றுச் செய்தாக வேண்டும்.  ஏனெனில் தமிழர் சமயம் என்பது உலகில் இருக்கும் மதங்களில் இதுவும் ஒரு மதம் இல்லை.  உலகிலுள்ள மதங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரு பொதுப்பெயர் கொடுத்தால் எந்தப் பெயர் அதற்குப் பொருந்துமோ அந்தப் பெயரே தமிழர் சமயம் என்பது ஆகும்.  
இந்தச் சிறப்புமிக்க வரலாற்று உண்மை மறைந்து கிடக்கிறது.  காரணம் தமிழன் இந்துத்துவாக் கொள்கையாகிய சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கையில் மயங்கி அடிமையாய் இருப்பதில் சுகம் கண்டு கொண்டிருக்கிறான்.
 
தமிழனுடைய மயக்கத்தை நீக்கி, அடிமையாய் இருப்பதில் சுகம் காணும் அவனை விடுவித்தல் அவ்வளவு எளிதான செயல் அன்று.  அதற்குரிய திட்டங்களைத் தீட்டி அவற்றைச் செயல்முறைக்கும் கொண்டு வர வேண்டும்.

இதற்குத் தமிழர் சமயத்தைப் புரிந்து கொண்ட மக்கள் ஒன்று சேர்க்கப்படல் வேண்டும்.  தமிழர் சமயத்தைப் புரிந்து கொண்ட மக்கள் ஒன்று சேர்க்கப்பட்டு, அது ஓர் ஆன்மீக இயக்கமாகச் செயல்பட வேண்டும். 

தமிழ் மண் – தமிழ் நாடு
தமிழர் சமயத்தை அடுத்துத் தமிழ் மண் பாதுகாக்கப்படல் வேண்டும்.  தமிழ் மண் என்று கூறும்பொழுது தமிழ்நாடு நம் நினைவுக்கு வருகிறது.  தமிழ்நாடு தமிழன் கையில் தானே இருக்கிறது என்னும் எண்ணம் ஏற்படலாம்.  தமிழ்நாடு தமிழன் கையிலிருந்து நழுவிக் கொண்டிருக்கிறது.  தமிழர் அல்லாதார்கள் தமிழ் மண்ணை உரிமையாக்கும் முயற்சி வேகம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலை நீடித்தால் தமிழ் நாட்டில் தமிழன் அகதியாகும் நிலை உருவாகும்.  தமிழ்நாட்டிலிருந்து தமிழன் விரட்டப்படும் நிலையும் உருவாகும் என்பதில் ஐயம் இல்லை.
இது தமிழரல்லாத வேற்றவர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.  தமிழ்நாடு இந்திய இறையாண்மைக்குட்பட்டு இருப்பதால், எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் தமிழ்மண் தமிழனிடமிருந்து பறிபோய்க்  கொண்டிருக்கிறது.

தமிழகம் இந்திய இறையாண்மைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தபோதிலும், தமிழ் இனம் அழியாமல் பாதுகாக்கப்பட அதற்கென்று அது வாழ மண் தேவை.  தமிழ் மண் பாதுகாக்கப்பட வேண்டும்.  தமிழ் மண் பாதுகாக்கப்பட இந்தியாவில் காசுமீருக்குச் சிறப்பு உரிமை இருப்பதைப் போன்று தமிழ்நாடும் சிறப்பு உரிமையைப் பெற்று ஆக வேண்டும்.

அதற்குரிய திட்டங்கள் தீட்டப்பட்டு அவை செயல் வடிவத்திற்குக் கொண்டு வரவேண்டும்.

(உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்க நிறுவனர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய ‘அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?’ என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.)
PDF இல் சேமிக்க‌

21.2.11

மதம் – மண் – இனம் – மொழி – பண்பாடு


ஆகவே, ஓர் இனத்திற்கு உயிர் நாடியாக இருப்பது மதம் என்பதும் இனம் வளர்வதற்கு ஆதாரமாய் இருப்பது மண் என்பதும் மண்ணை இழந்த இனம் சிதறிப் போகும் என்பதும் மதத்தை இழந்த இனம் மறைந்து போகும் என்பதும் நமக்கு விளங்குகின்றன. 

மண்ணை இழந்த எத்தனையோ இனங்கள் சிதறிப் போனதையும் மதம் இல்லாமல் சிதறிப் போன இனங்கள் மறைந்து போனதையும் நாம் உலக வரலாற்றில் காணுகின்றோம்.

ஆகவே, தமிழ் இனம் மறையாமல் பாதுகாக்கப்பட வேண்டுமானால், தமிழர் சமயமும் தமிழ் மண்ணும் பாதுகாக்கப்படல் வேண்டும் என்பதை உலக வரலாறு நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.  1. இனம்; 2. மதம்; 3. மண் ஆகிய மூன்றும் பாதுகாக்கப்பட்டால் மொழி, பண்பாடு ஆகியவை பாதுகாக்கப்படும் என்பதில் ஐயமில்லை.

ஆகவே, தமிழ் இனத்தின் வாழ்வுக்கு, தமிழர் சமயத்தையும் தமிழ் மண்ணையும் பாதுகாக்க வேண்டிய கடமை தமிழ் இனத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரியதாகும். 

உணர்த்தப்படல் வேண்டும்
தமிழ் இனத்தின் வாழ்வுக்கு, தமிழர் சமயத்தையும் தமிழ் மண்ணையும் பாதுகாக்க வேண்டிய கடமை தமிழ் இனத்தில் பிறந்துள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்னும் உண்மை தமிழ் இன மக்கள் ஒவ்வொருவருக்கும் சரியாக உணர்த்தப்படல் வேண்டும்.  காரணம், தமிழர் சமயம் அடிமைப்பட்டுக் கிடக்கின்றமையால் தமிழர் சமயமே இந்து சமயம் என்னும் வரலாற்று உண்மை புரியாமல் இருக்கிறது.

மாற்றியமைக்க வேண்டும்

இந்து சமயத்திற்கும் இந்துத்துவாவிற்கும் உள்ள வேறுபாட்டை உணரத் தெரியாமல் இந்து சமயம் ஆரியர்களுடையது என்னும் தவறான கருத்து தமிழர்களிடத்தில் இருந்து வருகிறது.

இந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டுமானால் இந்து மதமாகிய தமிழர் சமயத்தின் வரலாற்றுச் சிறப்பைத் தமிழர்கள் உணர்ந்து கொள்ளுமாறு செய்ய வேண்டும். 

நெஞ்சில் முள்
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், இந்து மதத்திற்கு எதிரான கருத்துகளை வெளியிட்டுள்ளார் என்றால், திராவிட இனம் ஆரிய இனத்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை அடைய வேண்டும் என்னும் நல்ல நோக்கத்துடன் வெளியிடப்பட்ட கருத்துகள் அவை என்பதை நாம் அறிய வேண்டும்.  தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் இந்துத்துவா வேறு; இந்து மதமாகிய தமிழர் சமயம் வேறு என்று வேறு பிரித்துக் காட்டும் ஆராய்ச்சிகள் வெளிவரவில்லை.  தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் இந்த ஆராய்ச்சிகள் வெளிவந்திருக்குமானால் கட்டாயம் நமக்கு விடுதலையை வாங்கித் தந்திருப்பார்.  ‘நெஞ்சில் ஒரு முள்ளோடு நான் செல்லுகிறேன்’ என்று கூறிச் சென்றிருக்க மாட்டார் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். 

((பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய 'அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?' என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.) 
PDF இல் சேமிக்க‌

20.2.11

தமிழர் சமயமும் சாதி ஏற்றத் தாழ்வுக் கொள்கையும்


தமிழர்கள் ஆரியப் பிராமணர்களின் நிறவெறிக் கொள்கையாகிய இந்துத்துவா என்னும் சாதி ஏற்றத் தாழ்வுக் கொள்கைக்கு அடிமைப்பட்டுக் கிடப்பதால் தமிழர்களின் இந்து சமயமாகிய தமிழர் சமயம் ஆரியப் பிராமணர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறது.

தமிழ் இன வீழ்ச்சிக்குக் காரணம்
தமிழ் இனத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாய் இருப்பது தமிழர்களின் உள்ளத்தில் இடம் பெற்றுள்ள இந்துத்துவாவாகிய சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கை ஆகும்.  இந்தச் சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கை தமிழ் இனத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து, ஒன்றையொன்று வெறுக்கவும் பகைக்கவும் வீழ்த்தவும் தூண்டி மொத்த இனத்தையும் அழிவுக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது.

மலையகத் தமிழர்கள்
இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்பட்டதென்றால், அதன் தொடக்கம் யாழ்ப்பாணத் தமிழர், மலையகத் தமிழர் உள்ளங்களில் இருந்த சாதி ஏற்றத்தாழ்வு மனப்பான்மை என்பதை வரலாறு கூறுகிறது.  தமிழ் இனம் என்னும் அளவில் அவர்கள் இணைய இயலாதபடி அவர்களைப் பிரித்த முதல் எதிரி அதுவேயாகும்.  மலையகத் தமிழர்கள், குடியுரிமையற்றவர்களாக ஆக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட பொழுது தமிழ் இன உணர்வோடு அதை எதிர்த்து யாழ்ப்பாணத் தமிழர்கள் குரல் கொடுக்க முன் வரவில்லை.  இலங்கையில் தமிழ் இனம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, இன அழிப்பு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதன் தொடக்கமாக அது அமைந்தது. 

இனமா? மொழியா?
இன்றும் தாய்த் தமிழகத்தில் தமிழ் மொழிக்காகக் குரல் கொடுக்க முன் வருகிறவர்கள், தமிழ் இனத்திற்காகக் குரல் கொடுக்க முன்வருவதில்லை.  மொழிக்காகக் குரல் கொடுக்கும்பொழுது சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கையை உள்ளத்தில் வைத்துக்கொள்ளலாம்.  இனத்திற்காகக் குரல் கொடுக்கும்பொழுது, சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கையை உள்ளத்தில் வைத்துக் கொள்ள இயலாது.  இனம் அழிக்கப்பட்டு விட்டால் யார் மொழியைப் பேசுவது?  இனம் அழிந்தால் மொழியும் அழிந்து போகும். 

யூதர்களின் சீயோனிய இயக்கம்
இனம் அழியாமல் பாதுகாக்கப்படுமானால் மொழி அழிந்த போதிலும் மீண்டும் அதற்குப் புத்துயிர் கொடுக்க இயலும் என்பதை உலகில் யூத இனம் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது. 
யூதர்களின் மொழி எபிரேயம்.  யூதர்கள் அவர்கள் நாட்டை இழந்த பொழுது உலகின் பல பாகங்களுக்கும் சிதறிச் சென்றனர்.  மொழி மறைந்தது.  மீண்டும் அவர்களுக்கு நாடு கிடைத்து ஒன்று கூடியவுடன் அவர்கள் தங்கள் மொழிக்குப் புத்துயிர் கொடுத்துள்ளனர் என்பதை நாம் இப்பொழுது பார்க்கின்றோம்.  பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் அவர்கள் இனம் ஒன்றிணைந்ததற்குக் காரணமாய் இருந்தது அவர்களுடைய மதம்.  யூத மதம் யூத இனத்தை ஒன்றிணைத்தது.  யூத இனம் அழியாமல் பாதுகாத்தது.  யூதர்கள் மீண்டும் நாட்டைப் பெற்ற பொழுது, யூதர்களின் மொழிக்குப் புத்துயிர் கொடுக்கப்பட்டது.
 
இனத்தை அழியாமல் பாதுகாப்பது மதம்
ஆகவே, சிதறிக்கப்பட்டாலும் இனத்தை அழியாமல் பாதுகாப்பதற்கும் ஒன்றிணைப்பதற்கும் காரணமாய் இருப்பது மதம் என்பதையும் மதத்தால் ஒன்றிணைக்கப்பட்ட இனம், தனக்குரிய மண் ஆகிய நாடு கிடைத்துவிட்டால் அழிந்து போன தங்கள் மொழியை மீண்டும் உயிர் பெறச் செய்ய இயலும் என்பதையும் யூத இனம் உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. 

(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய 'அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?' என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.) 
PDF இல் சேமிக்க‌

19.2.11

இந்து மதம் தமிழர்களுடைய தமிழர் சமயம்


‘இந்து மதம்’ என்பது சைவ, வைணவ மதங்களின் பொதுப்பெயராக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவான ஒரு புதுப் பெயர் என்பதைப் பார்த்தோம்.  இதனால் இந்து மதம் யாருடையது என்பதைக் காண சைவ, வைணவ மதங்கள் யாருடையவை என்பதைக் கண்டுபிடிக்க வேண்டியதிருக்கிறது.  இதைக் காண சைவ, வைணவ சமயங்களின் வரலாற்றை நோக்குவோம். 

சைவ சமயத்தை வளர்த்த நாயன்மார்கள் அறுபத்து மூவர்.  63 நாயன்மார்களும் தமிழகத்தில் மட்டும் பிறந்தவர்கள்.

நாயன்மார் அறுபத்து மூவர்

வைணவ சமயத்தை வளர்த்த ஆழ்வார்கள் பன்னிருவர்.  12 ஆழ்வார்களும் தமிழகத்தில் மட்டும் பிறந்தவர்கள்.
ஆழ்வார்கள் பன்னிருவர்


  1. சைவ சமய இலக்கியங்கள் பன்னிரு திருமுறை.  பன்னிரு திருமுறையும் தமிழ்மொழியில் மட்டுமே இருக்கிறது. 
  2. வைணவ சமய இலக்கியங்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்.  நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் அனைத்தும் தமிழ் மொழியில் மட்டுமே இருக்கின்றன. 
  3. இந்தியா முழுவதிலும் உள்ள மிகப் பழமையான சைவக் கோவில்கள் ஏறத்தாழ இருநூற்று எண்பது ஆகும்.  இந்த இருநூற்று எண்பது கோவில்களில் இருநூற்று எழுபத்து நான்கு கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன. 
  4. இந்தியா முழுவதிலும் உள்ள மிகப் பழமையான வைணவக் கோவில்கள் நூற்று எட்டு.  இதில் தொண்ணூற்றாறு கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன. 
  5. சைவ சமயத்தின் தலைமைக் கோவில் சிதம்பரம் நடராசர் கோவில்.  சிதம்பரம் தமிழகத்தில் இருக்கிறது.
தில்லை - சைவத்தின் தலைமைக் கோவில்
 வைணவத்தின் தலைமைக் கோவில் திருவரங்கத்தில் உள்ளது.  திருவரங்கம் தமிழகத்தில் இருக்கிறது. 
திருவரங்கம் - வைணவத் தலைமைக் கோவில்

தமிழ்நாட்டில் உருவான சைவம், வைணவம் ஆகிய இரண்டற்கும் ஒரு பொதுப் பெயர் கொடுக்க வேண்டுமானால் அது “தமிழர் சமயம்” என்று இருப்பதே பொருத்தமானது.  சைவம், வைணவம் ஆகிய இந்து மதம் தமிழர்களின் தமிழர் சமயம் என்பதில் ஐயமில்லை. 


(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய 'அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?' என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.) 

PDF இல் சேமிக்க‌

18.2.11

இந்திய மதங்கள், இந்து மதம், இந்துத்துவா


4. இந்திய மதங்கள்:

இந்தியாவில் தோன்றிய 1. சமணம் 2. பெளத்தம் 3. சைவம் 4. வைணவம் 5. சீக்கியம் ஆகிய ஐந்து மதங்களும் இந்திய மதங்கள் எனப்படும்.  இந்திய மதங்கள் என்பது வேறு, இந்து மதம் என்பது வேறு.

5. இந்து மதம்:

1. “அம்பேத்கார் இந்து மதத்தில் இருந்து பெளத்த மதத்திற்கு மதம் மாறினார்”
2. “பஞ்சாபில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சண்டை”
3.“குசராத்தில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சமண மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சர்ச்சை”
என வரும் ஊடகச் செய்திகள் இந்திய மதங்கள் ஐந்தில், பெளத்தம், சீக்கியம், சமணம் ஆகிய மூன்றும் இந்து மதம் என்னும் பெயரில் சேர்க்கப்படவில்லை என்பதைக் காட்டுகின்றன.  இதிலிருந்து சைவம், வைணவம் ஆகிய இரு மதங்கள் மட்டுமே “இந்து மதம்” என்னும் பெயரால் குறிக்கப்படுகின்றன என்று விளங்குகின்றது.  இதற்குக் காரணம் என்ன? என்னும் கேள்வி எழுகின்றது. 

6. இந்துத்துவா

            இந்துத்துவா என்பது ஆரியப் பிராமணர்களின் நிறவெறிக்கொள்கையாகிய வாழ்க்கை முறை என்பதையும் இது மதம் இல்லை என்பதையும் முன்பு பார்த்துள்ளோம்.  இந்துத்துவாத் தலைவர்களாகிய ஆரியப் பிராமணர்களை இந்து மதத் தலைவர்கள் என நம்பும் தவறான நம்பிக்கை இந்திய மக்களிடத்தில் இருக்கிறது என்பதையும் பார்த்தோம். 

இந்துத்துவா
 இதற்குக் காரணம் இந்திய மதங்கள் ஐந்தில், சைவம், வைணவம் ஆகிய இரண்டு மட்டும் “இந்து மதம்” என்னும் பெயரால் அழைக்கப்படுவதற்குக் காரணம் இந்த இரண்டு மதங்கள் மட்டுமே ஆரியப் பிராமணர்களின் இந்துத்துவாக் கொள்கையாகிய நிறவெறிக் கொள்கைக்கு அடிமைப்படுத்தப்பட்டுள்ளமை ஆகும்.  ஆகவே இந்துத்துவாக் கொள்கைக்கு அடிமைப்படுத்தப்பட்டுள்ள சைவம், வைணவம் ஆகிய இரண்டு மதங்கள் மட்டுமே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இவ்விரண்டு மதங்களுக்கும் பொதுப்பெயரான இந்து மதம் என்னும் புதுப் பெயரைப் பெற்றமை ஆகும். 


ஆங்கில ஆட்சிக் காலத்திற்கு முன்னர் இந்திய வரலாற்றில் எங்குமே “இந்து மதம்” என்னும் பெயர் இடம் பெறவில்லை என்பது வரலாறு. 

“இந்துத்துவா” என்பது ஆரியப் பிராமணர்களின் நிறவெறிக் கொள்கையையுடைய வாழ்க்கை முறை என்பதையும் அது “இந்து மதம்” இல்லை என்பதையும் “இந்து மதம்” என்பது சைவ, வைணவ மதங்கள் என்பதையும் இந்துத்துவாக் கொள்கைக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்ற காரணத்தால் இவை ஆங்கில ஆட்சிக் காலத்தில் ‘இந்து மதம்’ என்னும் புதிய பெயரைப் பெற்றன என்பதையும் பார்த்துள்ளோம். 

ஆரியப் பிராமணர்களின் எதிரிகளாகிய திராவிட இனத்தின் தலைமை நிலையில் இருப்பவர்கள் தமிழர்கள் என்பதும், தமிழர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் இந்து மதத்திற்குத் தலைவர்கள் இல்லாமையால் இந்து மதத்தைச் சேர்ந்த தமிழ் இனம் அழிக்கப்படும்பொழுது இவர்களுக்காகக் குரல் கொடுக்கும் மதத்தலைவர்கள் இல்லை என்பதையும் பார்த்துள்ளோம்.

அப்படியானால் இந்து மதம் யாருடையது? என்னும் கேள்வி எழுகின்றது. 


(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய 'அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?' என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.) 
PDF இல் சேமிக்க‌

16.2.11

இந்து என்பது வேறு இந்துக்கள் வேறு


  1. இந்து 
  2. இந்துக்கள்
  3. இந்திய வழிபாடுகள்
  4. இந்திய மதங்கள்
  5. இந்து மதம்
  6. இந்துத்துவா

ஆகிய ஆறு பெயர்களும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்ட பொருள்களை விளக்கக்கூடியன என்பதை இந்திய மக்கள் உணர்ந்து கொள்ள இயலா நிலையில், இந்திய ஆரியப் பிராமணர்கள் இந்தியக் கல்வி முறையையும் இந்திய ஊடகங்களையும் மிகத் திறமையாகப் பயன்படுத்தி வருகின்றார்கள்.

‘இந்து’ என்னும் ஒரு பெயர், இந்த ஆறு பொருள்களையும் உள்ளடக்கியுள்ளது என்பதாகப் பிராமணர்களால் இந்திய மக்கள் தவறாக நம்ப வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆறு பெயர்களும் வெவ்வேறு பொருள்களுடையவை என்பதை முதலில் பார்ப்போம். 

1.  இந்து:
சிந்துவே இந்துவானது
இந்தியா மூன்று பக்கங்களில் கடல்களையும் ஒரு பக்கத்தில் மலையையும் இயற்கை அரண்களாகக் கொண்டது.  இந்தியாவிற்கு வெளியேயிருந்து தரை வழியாக இந்தியாவிற்குள் நுழைய விரும்புகின்றவர்கள், இமய மலையைக் கடந்து வரவேண்டும்.  இவ்வாறு வருகின்றவர்கள் இமய மலையிலுள்ள கைபர், போலன் கணவாய்களைக் கடந்து, இந்தியாவில் நுழைந்தவுடன் அவர்கள் காண்பது சிந்து நதியையாகும்.  ‘சிந்து’ என்னும் பெயரை உச்சரிக்க இயலாத அந்நியர்கள், அதை ‘இந்து’ என உச்சரித்தனர் என்பது வரலாறு.  ஆகவே, ‘இந்து’ என்பது ஓர் ஆற்றின் பெயரைக் குறிப்பதே தவிர, மதத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை. 

2.           2. இந்துக்கள்: 
திராவிட நாகரிகம்

இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற சிந்து வெளி நாகரிகப் புதைபொருள் ஆராய்ச்சிக்கு முன்னர் திராவிட இனத்தின் நாகரிகச் சிறப்பை உலகம் அறியாமல் இருந்தது.  சிந்து வெளி நாகரிக ஆராய்ச்சி அங்கே குடியிருந்த திராவிட இனத்தின் நாகரிகச் சிறப்பை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.



இதனால் சிந்து நதிக்கரையில் வாழ்ந்த மக்கள் திராவிடர்கள் என்பதை உலகம் அறிந்து கொண்டது.  சிந்து நதிக்கரையில் வாழ்ந்த மக்களை வேற்றவர்கள் “சிந்துக்கள்” என அழைப்பதற்கு மாற்றாக “இந்துக்கள்” என அழைத்தனர்.

இதனால் “இந்துக்கள்” என்பது சிந்து நதிக்கரையில் வாழ்ந்த திராவிடர்களைக் குறிக்கிறது.  ஆகவே ‘இந்துக்கள்’ என்பது திராவிட இனத்தினரைக் குறிக்கிறது.  இதற்கும் மதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 

3.    3. இந்திய வழிபாடுகள்: 
வழிபாடுகள் வேறு; மதங்கள் வேறு.  உலகில் மனிதர்கள் எங்கெங்கு வாழ்ந்தார்களோ அங்கெல்லாம் வழிபாடுகள் உருவாயின.  ஆனால் மதங்கள் அனைத்தும் ஆசியாக் கண்டத்தில் மட்டுமே உருவாயின.  ஐரோப்பாவில் ஒரு மதமும் உருவாகவில்லை.  உலகம் முழுவதும் வழிபாடுகள் இருந்ததைப் போன்று இந்தியாவிலும் வழிபாடுகள் இருக்கின்றன.  இவை மதங்கள் அல்ல.  ஆகவே, இந்திய வழிபாடு என்பது இந்து மதத்தைக் குறிக்காது.

(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய 'அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?' என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது)
PDF இல் சேமிக்க‌

14.2.11

அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?


மதம்

‘தமிழ் இனம் சிங்களர்களால் அழிக்கப்பட்டது’ என்பதில் சிங்களர்கள் ஆரிய இனம் என்று நம்பப்படுகின்ற காரணத்தால் இனம் தொடர்பாக ஆரிய, திராவிட இனம் தொடர்பானவற்றைப் பார்த்தோம்.  சீனா இலங்கைக்கு உதவும் காரணமான இனம் தாண்டிய மதம் தொடர்பானவற்றைப் பார்க்க வேண்டிய இன்றியமையாமை நமக்கு உள்ளது.  தமிழ் இனத்தை அழித்த சிங்களர்கள் ஆரிய இனத்தவர்கள் என்று நம்பப்பட்ட காரணத்தால், ஆரிய இனத்தோடு தங்களை இணைத்து நோக்கும் ஐரோப்பிய நாடுகளின் துணை சிங்களர்களுக்குக் கிடைத்தது.

சிங்களர்கள் பெளத்த மதத்தவர்கள் என்பதால், பெளத்தர்கள் அதிகமாக வாழும் சீனாவின் உதவியும் அவர்களுக்குக் கிடைத்தது.  இலங்கைத் தமிழர்கள் திராவிட இனத்தவர் என்பதால் ஆரிய இனத்தவரின் எதிர்ப்பு இவர்களுக்கு ஏற்பட்டது.  இலங்கைத் தமிழர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்? என்னும் அடுத்த கேள்வி இப்பொழுது எழுகின்றது. 

இந்து மதத் தலைவர்கள்

திரிகோணமலையில் சிதைக்கப்பட்ட கோவில்


இலங்கைத் தமிழர்கள் இந்து மதத்தினர் என்பது உலகம் அறிந்துள்ள உண்மை.  இலங்கைத் தமிழர்களை அழித்த பெளத்த சிங்களர்கள் இந்து மதத்தைச் சேர்ந்த தமிழர்களையும் இந்து மதக் கோயில்களையும் அழித்தமை அனைவராலும் அறியப்பட்டுள்ளது. 



 இந்து மதத்தைச் சேர்ந்த தமிழர்களையும் இந்து மதக் கோயில்களையும் சிங்களர்கள் அழிக்கும்பொழுது உலகிலுள்ள இந்து மதத் தலைவர்கள் இதை எதிர்த்துக் குரல் கொடுக்காதது ஏன்? என்னும் கேள்வி எழுகின்றது.  இந்து மதத் தலைவர்கள் என்று உலகில் யாருமே இல்லையா?

இந்துத்துவாத் தலைவர்கள்

இந்தியாவில் இந்துத்துவாத் தலைவர்கள் இருக்கின்றார்களேயன்றி இந்து மதத் தலைவர்கள் என்று யாரும் இல்லை என்பது சற்று ஆழ்ந்து நோக்க வேண்டிய குறிப்பு ஆகும். 

(இது பற்றிய விளக்கத்திற்கு இந்துத்துவா வேறு இந்து மதம் வேறு என்னும் பதிவையும் படிக்க).  இலங்கைத் தமிழர்கள் இந்துக் கோவில்களையுடைய இந்து மதத்தைச் சார்ந்தவர்களே தவிர, மதத்தோடும் கடவுளோடும் தொடர்பில்லாத இந்துத்துவாவைச் சேர்ந்தவர்கள் அல்லர். 

இந்தியாவில் இந்துத்துவாத் தலைவர்கள் இருக்கின்றார்களே தவிர இந்து மதத் தலைவர்கள் இல்லை.  

இந்து மதத் தலைவர்கள் இந்தியாவில் இல்லாதபடியால், இந்து மதத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க மதத் தலைவர்கள் யாரும் இந்தியாவில் இல்லை. 

இந்தியாவில் இந்து மதத் தலைவர்கள் இல்லாமல் போகலாம்.   அப்படியானால் இந்தியாவைத் தவிர உலகில், இந்து மதத் தலைவர்கள் எங்குமே இல்லையா? என்னும் கேள்வி எழுகின்றது.  இந்து மதத் தலைவர்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகில் எங்குமே இப்பொழுது இல்லை என்பது தான் நடைமுறை உண்மையாக இருக்கின்றது. 

இந்து மதத் தலைவர்கள் அல்லர்!
இந்திய ஆரியப் பிராமணர்களும் தங்களை ஆரிய இனத்தினர் என நம்பும் ஐரோப்பியர்களும் இலங்கைத் தமிழ் இன அழிப்புக்குக் காரணமாக விளங்கினார்கள் என்றால், இவர்கள் இருபகுதியினரையும் ஒன்றிணைத்து இந்து மதத்தைச் சேர்ந்த தமிழ் இன அழிப்பைச் செய்தது இந்துத்துவாக் கொள்கை என்பதே வரலாறு ஆகும். 


இந்துத்துவாக் கொள்கை, சிங்களர்களையும் இந்தியப் பிராமணர்களையும் ஐரோப்பியர்களையும் ஆரிய இனம் என்னும் பெயரால் ஒன்றிணைத்து இந்து மதத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் இனத்தை அழித்தது என்பதே வரலாற்று உண்மை ஆகும்.

இந்துத்துவா - இந்து மதம் இல்லை
மதம் இல்லாத இந்துத்துவா, மதக் கொள்கையையுடைய இந்து மதத்தை அழித்தமை இலங்கையில் நடைபெற்றுள்ளது.  காரணம் இந்து மதத்திற்குத் தலைவர்கள் இல்லை.  ஆகவே, இந்து மதத்திற்காகக் குரல் கொடுக்க யாரும் இல்லை.  இதனால் இலங்கையில் இந்து மத மக்களும் இந்து மதக் கோயில்களும் அழிக்கப்பட்டனர் என்பதை எவராலும் மறுத்தல் இயலாது.



(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய ‘அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?’ என்னும் நூலில் இருந்து சில திருத்தங்களுடன் பதியப்பட்டுள்ளது.)
PDF இல் சேமிக்க‌

12.2.11

ஆரிய நிறவெறிக்கு அடிமைப்பட்ட கிறித்தவம்


நிறவெறிக்குத் துணை
ஐரோப்பியர்கள் கிறித்தவ மதத்தைச் சார்ந்தவர்களாயிற்றே!  இப்படியெல்லாம் (இலங்கையில் தமிழ் இன அழிப்புக்கு இந்தோ ஐரோப்பியர்களின் தலைவர்களாகிய பிராமணர்களுக்குத் துணை போவார்களா?) செய்வார்களா? என்னும் கேள்விக்கு, கத்தோலிக்கக் கிறித்தவர்களின் தலைவராகிய போப்பாண்டவருக்கும் புரொடெசுடண்டு கிறித்தவர்களின் தலைவராகிய “ஆர்ச்சு பிசப்பு ஆப் காண்டர்பரி”க்கும் நம்மால் எழுதப்பட்ட கடிதங்களும் அவர்கள் நமக்கு எழுதிய விடைகளும் தக்க சான்றுகளாக அமைந்து விளங்குகின்றன.



இன அழிப்புக்குத் துணை
கிறித்தவ மதத்திற்குத் தலைமை தாங்கும் ஐரோப்பியர்கள், ஆசியாவின் கிறித்தவ மதத்தைத் தங்களுக்கு அடிமைப்படுத்தித் தங்கள் நலனுக்காகப் பயன்படுத்துகின்றவர்களே தவிர, கிறித்துவின் நல்ல போதனைக்காக வாழ்கிறவர்கள் அல்லர் என்பதையும் ஆரியப் பிராமணர்களின் நிறவெறியை ஆதரிக்கின்றவர்கள் என்பதையும் அவர்களின் விடைகளே நமக்கு விளக்கம் கொடுக்கும் சான்றுகளாக அமைந்துள்ளன.
 
உலகக் கிறித்தவ மதத்திற்குத் தலைமை தாங்கும் ஐரோப்பிய ஆன்மீகத் தலைவர்களின் நிலையே இவ்வாறு இருக்கும்பொழுது, ஐரோப்பிய அரசியல் தலைவர்களின் நிலை எவ்வாறு இருக்கும்? என்பது எண்ணிப் பார்க்கத் தக்கது. 

ஐரோப்பியர்களின் பிடியில் ஐக்கிய நாடுகளின் சபை இருக்கிறது.  ஐக்கிய நாடுகளின் கட்டுக்கோப்பில் உலக நாடுகள் அடங்கி இருக்கின்றன.

இதனால் உலக நாடுகள் இலங்கையில் தமிழ் இன அழிப்பு நடைபெறும்பொழுது வேடிக்க பார்ப்பதைத் தவிர அவற்றிற்கு வேறு வழியில்லை.  இது ஓர் அவமானகரமான வெட்கப்பட வேண்டிய செயல் என்பதை
“While the so called International community is exposed in its shameful conning…”
என்னும் எழுத்துகள் வெளிப்படுத்துகின்றன. 

(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய 'அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?' என்னும் நூலில் இருந்து சில திருத்தங்களுடன் பதியப்பட்டுள்ளது) 
PDF இல் சேமிக்க‌

10.2.11

நிறவெறியும் இன அழிப்பும்



வெள்ளை நிற வெறியே, ஆரிய இன வெறியாக உலகில் பரவி, வெள்ளை நிறமல்லாத தமிழ் இன அழிப்புக்குத் துணையாக அமைந்துள்ள கொடுமை நடைபெற்றுள்ளது.

தடை ஏன்?

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள், தமிழ் இன அழிப்புக்கு எதிராகச் செயல்படவில்லையே தவிர தமிழ் இன அழிப்புக்குத் துணையாகச் செயல்பட்டார்கள் என்பது எவ்வாறு பொருந்தும்? என்னும் கேள்வி எழலாம்.



விடுதலைப்புலிகள், இலங்கையில் சிங்களர்களின் கொடுமைகளிலிருந்து தமிழ் இனத்தை விடுவிக்கும் விடுதலைப் போராளிகளாகச் செயல்பட்டார்களே தவிர, மேலே கூறப்பட்ட நாடுகளில் அழிவை விளைவிக்கும் பயங்கரவாதிகளாகச் செயல்படாமல் இருந்த நிலையில் விடுதலைப்புலிகள் அமைப்பை இந்த நாடுகளில் தடை செய்தமை எந்த வகையில் நியாயம்?  என்னும் கேள்விக்கு அவர்களிடத்தில் விடை இல்லை.  ஏனெனில், விடுதலைப்புலிகள் அந்த நாடுகளில் எந்த அழிவு வேலையையும் செய்யவில்லை என்பது உலகறிந்த உண்மை.  அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் விடுதலைப்புலிகளின் இயக்கத்தைத் தடை செய்யக் காரணம், நிறவெறிக் கொள்கையையுடைய இந்தோ ஐரோப்பியர் (Indo Europeans) எனப்படும் பிராமணர்களின் தமிழ் இன அழிப்புக் கொள்கைக்குத் துணை போனமையே ஆகும். 



வெள்ளையரல்லாத இனங்களை அழிப்பது என்பது ஐரோப்பியர்களுக்கு மிகவும் விருப்பமான ஒன்று என்பதை உலக வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

இன்று அமெரிக்கர் என அழைக்கப்படும் மக்கள் அமெரிக்காவின் மண்ணின் மைந்தர்களான செவ்வியந்தியர்களை அழித்த ஐரோப்பியர்கள் என்பது வரலாறு.

வெள்ளை நிறவெறி
அவ்வாறே, இன்று ஆத்திரேலியர் என அழைக்கப்படும் மக்கள், ஆத்திரேலியப் பழங்குடி மக்களை அழித்த ஐரோப்பியர்கள் என்பதே வரலாறு.   ஆகவே, ஐரோப்பியர்கள் தங்கள் இன வளர்ச்சிக்காக எந்த இனத்தையும் அழிக்கத் தயங்காதவர்கள் என்பது வரலாறு.

இந்த வரலாற்றின் படி, இலங்கையில் தமிழ் இன அழிப்புக்கு இந்தோ ஐரோப்பியர்களின் தலைவர்களாகிய பிராமணர்களுக்கு ஐரோப்பியர் துணை போயிருப்பது இயல்பான ஒன்றேயாகும்.  

(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய 'அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?' என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது) 
PDF இல் சேமிக்க‌

8.2.11

உலக நாடுகள் தமிழ் இன அழிப்பைக் கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன்?


 உலக நாடுகளுக்குத் தலைமை தாங்குவது ஐக்கிய நாடுகள் அவை.  ஐக்கிய நாடுகள் அவை அணுகுண்டைக் கையில் வைத்திருக்கும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, இரசியா, சீனா ஆகிய ஐந்து நாடுகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.  இந்த ஐந்து நாடுகளின் கட்டுப்பாட்டில் உலக நாடுகள் தமிழ் இன அழிப்பைக் கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன்?

கைப்பாவை
இலங்கையின் இறையாண்மையைக் கையில் வைத்திருக்கும் சிங்களர்களும் இந்தியாவின் இறையாண்மையைக் கையில் வைத்திருக்கும் பிராமணர்களும் ஆரிய இனம் என்னும் அடிப்படையில் ஆரிய இனத்திற்கு எதிரான திராவிட இனத்தின் தலைமை எனக் கருதப்படும் தமிழ் இன அழிப்பைச் செய்யும்பொழுது, தங்களை ஆரிய இனம் என நம்பும் அமெரிக்கர், பிரிட்டிசார், பிரஞ்சுக்காரர், இரசியர் ஆகிய நால்வரும் தங்களை அறியாமலே தங்கள் இனத்தவருக்கு ஆதரவாக இருப்பது இயல்பான ஒன்றாகும். 

ஐக்கிய நாட்டு அவையைக் கையில் வைத்திருக்கும் ஐந்து நாடுகளில் மேலே கூறப்பட்டுள்ள நான்கு நாடுகள் போக, பெளத்த மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் சீனா, பெளத்த நாடான இலங்கைக்கு ஆதரவாகச் செயல்பட நினைப்பது இயல்பு.

ஆகவே, ஆரிய இனம், பெளத்த மதம் ஆகிய இரண்டன் அடிப்படையில், இந்த இரண்டிற்கும் எதிரான தமிழ் இனம் இலங்கையில் அழிக்கப்பட ஐக்கிய நாடுகள் அவையைக் கையில் வைத்திருக்கும் ஐந்து நாடுகளும் தங்களை அறியாமலே துணை போவது இயல்பான ஒன்றாகும்.  இந்த ஐந்து நாடுகளையும் மற்ற உலக நாடுகள் எதிர்க்கும் ஆற்றல் இல்லாதவை.  இதனால் ‘International community’  எனப்படும் உலக நாடுகள் இலங்கையில் தமிழ் இன அழிப்பு நடைபெற்ற போது வெட்கப்பட வேண்டிய அளவில் நடந்து கொண்டமையை இலங்கைத் தமிழர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என்பது ‘இந்து’ நாளேட்டின் வழி தெளிவாக வெளிப்பட்டுள்ளது. 

ஆகவே, இலங்கையில் தமிழ் இன அழிப்பின் பின்னணியில் இனப்பாசம், மதப்பாசம் ஆகிய இரண்டும் அடங்கியிருப்பது தெரிகிறது.  தமிழ் இன அழிப்புக்குக் காரணமான ஆரிய இனப்பாசம், பெளத்த மதப் பாசம் ஆகிய இரண்டில் ஆரிய இனப்பாசம் என்பது ஆழ்ந்து எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்று ஆகும். 

“ஆரியர்” என்பது ஓர் இனப் பெயரா?

“ஆரிய இனம்” என்று ஓர் இனம் இல்லை என்பது வரலாறு (இதைப்பற்றிய பதிவு "ஆரியர் என்போர் ஓர் இனத்தவர் அல்லர்” என்பதைக் காணவும்).  இந்தியாவின் மீது, ஈரான் வழியாகப் பல காலங்களில் படை எடுத்து வந்த பல மொழி பேசிய அந்நியர்களுக்கு இந்திய மக்கள் கொடுத்த பொதுப் பெயரே “ஆரியர்” என்பதாகும்.  ஈரான் வழியாகப் படையெடுத்து வந்த அந்நியர்களை “ஈரானியர்” என்னும் பெயரில் இந்திய மக்கள் குறித்தனர்.  “ஈரானியர்” என்னும் பெயர் “ஆரியர்” என மருவியுள்ளது. 

கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டிற்கு முன்னர், இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் “ஆரியர்” என்னும் இனப்பெயர் வழக்கில் இல்லை. 

“வெள்ளை நிறத்தை உடையவன் பிறப்பால் உயர்ந்தவன்” என்னும் நிறவெறிக் கொள்கையையுடைய மனுநூலை, சமற்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்த வில்லியம் சோன்சு காலத்திற்குப் பின்னரே உலகில் நிறவெறிக் கொள்கை பரவி, நிறவெறிக் கொள்கையில் மகிழ்ச்சியடைகிறவர்கள் தங்களையும் “ஆரிய இனம்” எனக் கூறிக்கொள்ளும் நிலை இந்தியாவிற்கு வெளியே உருவாயிற்று என்பது வரலாறு.  இந்நிலை உருவாகக் காரணமானவர் மாக்சு முல்லர் என்பது வரலாறு.  

(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய 'அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?' என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது)

PDF இல் சேமிக்க‌

6.2.11

இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்பட வரலாற்றுப் பின்னணி என்ன?


அழித்தது யார்?
இதிலென்ன சந்தேகம்?  சிங்களர்கள் தாமே!

அழித்தது சிங்களர்கள் என்பது பொதுவான எண்ணம்.  சிங்களர்கள் மட்டுமே தனித்து நின்று அழித்தார்களா?  சிங்களர்களுக்குத் துணையாக மற்றவர்கள் செயல்படவில்லையா?

சிங்களர்களுக்குத் துணையாக இந்தியா செயல்பட்டது என்பது உண்மை.  “இந்தியா” என்பது ஒரு நாடு.  இந்தியாவிலும் தமிழ் இனம் இருக்கிறது.  இந்தியாவிலுள்ள தமிழ் இனம் இலங்கையிலுள்ள தமிழ் இனத்திற்கு எதிராகச் செயல்பட்டது என்பது தவறு.  ஆகவே, இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இந்தியா செயல்பட்டது என்றால் இந்தியாவிலுள்ள எந்த இன மக்கள் ஈழத் தமிழ் இன மக்களுக்கு எதிராகச் செயல்பட்டார்கள் என்னும் கேள்வி எழுகின்றது.


இந்தியாவிலுள்ள மக்களை வரலாற்று ஆசிரியர்கள் இரண்டு இனங்களாகப் பிரிக்கின்றார்கள்.
  • ஆரிய இனம்
  • திராவிட இனம்

ஆரிய இனத்திற்குத் தலைமை தாங்குபவர்கள் பிராமணர்கள்; திராவிட இனத்திற்குத் தலைமையாகக் கருதப்படுபவர்கள் தமிழர்கள்.  “தமிழர்” என்னும் தமிழ்ப்பெயரே சமற்கிருதத்தில் “திராவிடர்” என்று குறிக்கப்படுகிறது. 

ஆகவே, “ஆரியர்களுக்கு எதிரான திராவிடர்கள்” என்பது தமிழ் இனத்தையே குறிக்கிறது.  இதனால் தமிழ் இனம் என்னும் திராவிட இனத்தை இழிவுபடுத்துவதும் அழிப்பதும் திராவிட இனத்திற்கு எதிரான ஆரியர்களுக்குத் தலைமை தாங்கும் பிராமணர்களின் கடமையாக இருக்கிறது.  தமிழ் இனத்தை இழிவுபடுத்துவதும் அழிப்பதும் ஆரியப் பிராமணர்களின் கடமையாய் இருக்கிறது என்பது வரலாறு கூறும் உண்மை.

துணை போனவர்கள்
இந்த வரலாற்று உண்மையின்படி இலங்கையில் நடைபெற்ற தமிழ் இன அழிப்பு இந்தியப் பிராமணர்களின் துணையோடு நடைபெற்றது என்பது இயல்பான ஒன்றாகும்.  அந்த இயல்பின்படியே இந்திய ஆட்சியைக் கையில் வைத்திருக்கும் பிராமணர்கள் செயல்பட்டார்கள் என்பதை நாம் கண்டோம். 

மேலும் சிங்களர்கள் ஆரிய இனத்தினர் என்பது இந்திய ஆரியப் பிராமணர்களின் நம்பிக்கை.  இதனால் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவோடு இருந்த இலங்கையின் சிங்களர்கள் மீது இந்திய ஆரியப் பிராமணர்களுக்கு இயல்பான பாசம் இருப்பது இயல்பு.  இந்த இயல்பின்படி இலங்கையின் சிங்களர்களுக்கு இந்தியப் பிராமணர்களின் இயல்பான பாசமும் அரவணைப்பும் கிடைத்து, இலங்கையில் தமிழ் இன அழிப்பு இயல்பாக நிறைவேறியது. 

இலங்கையில் தமிழ் இன அழிப்பை எதிர்த்து நின்ற விடுதலைப்புலிகளை முற்றிலுமாக அழித்து விட்டோம் என்று இலங்கை அரசு அறிவித்த போது, இந்தியா உட்பட்ட உலக நாடுகளை நோக்கி இலங்கைத் தமிழர்கள்,

“Long live human dignity
Shame on International Community…”
“While the so called International Community is exposed in its shameful conning…
Thousands of Tamil civilians and combatants are laying down their lives to uphold Tamil dignity and human dignity”
(The Hindu 19.05.09)

என்னும் கருத்தை உலக நாடுகளை நோக்கி வெளியிட்டது ஏன்? என்னும் கேள்வி எழுகின்றது.

(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய "அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?" என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது)  
PDF இல் சேமிக்க‌